பஸ்காவாகிய கிறிஸ்து

பஸ்காவாகிய கிறிஸ்து 
மக்களின் பாவத்தின் நிமித்தம் பாவநிவாரண பலியாக காலையும் மாலையும் ஒரு ஆடு அன்று பலியாகச் செலுத்தப்பட்டது (யாத்.29: 38-42). “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும்,….” (ஏசா. 53:7) என்று ஏசாயா, மேசியாவைக் குறித்து – கர்த்தருடைய தாசனைக் குறித்து தீர்க்க தரிசனம் உரைத்திருந்தார். எப்படியோ பாவத்திற்கு நிவாரணமாக ஒரு உயிர் கொடுக்கப்பட வேண்டியதே. அந்தப் பலியைப் பூரணமாகச் செலுத்துவதற்கு தேவன் தம்மையே கொடுக்கச் சித்தமானார். மனிதனாய் உலகிற்கு வந்த கிறிஸ்து பூரண பஸ்காப் பலியாகத் தம்மையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தபோது உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கப்பட்டது. “…நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” (1கொரி.5:7).
இப்படித்தான் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. உலகத்தின் பாவம் என்பது நம் ஒவ்வொருவருடைய பாவமும்தான். தமது மரணத்தினாலே இயேசு நமது பாவங்களுக்கான விலையைச் செலுத்தி முடித்துவிட்டார். இயேசு சிலுவையில் போராடிய போராட்டம் யாருக்கு எதிராக? பிலாத்துவுக்கா? ஏரோதுவுக்கா? பரிசேயர் வேதபாரகருக்கு எதிராகவா? அல்லது, யூதர், ரோம போர்வீரருக்கு எதிராகவா? இல்லை. அவர் பாவத்தோடு போராடினார். அதற்கு மூலகாரணியான பிசாசின் தந்திரங்க ளோடு போராடி அவன் தலையை நசுக்கினார். ஆம், பாவத்திற்கு எதிரான போரில் இயேசு கிறிஸ்து சிலுவையில் வெற்றி பெற்றுவிட்டார்.
பாவமும் அதன் சம்பளமாகிய மரணமும் முறியடிக்கப்பட்டுவிட்டது. இதனால் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. இதனை விசுவாசித்து நாம் அந்த மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்டு புதிய வாழ்வு வாழுகிறோம். நாம் யார்? நம்மை இரட்சித்த கிறிஸ்து யார்? அவருக்காக நாம் செய்யவேண்டியது என்ன? நமக்கு அவர் கொடுத்த பொறுப்பு என்ன? அவர் நமக்கிட்ட பெரிய கட்டளைதான் என்ன? நாம், நமது குடும்பம், நண்பர்கள், உறவினர் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ கூட்டத்தார் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தேவ ஊழியம் என்ற பெயரில் தம்மை மேன்மைப்படுத்தி தம்மை வளப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
இயேசு சிலுவையில் அடைந்த வேதனை, பாடுகள், அவர் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்தையும், அதன் மேன்மையையும் உணர்ந்து தம்மையே கொடுத்து ஆண்டவருக்காக சுக துக்கம் பாராமல் இராப்பகலாய் உழைக்கின்ற ஒரு கூட்டம் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், விளைச்சல் ஏராளமாகப் பெருகியிருக்கும் இந்நாட்களில், துரிதமாக அறுவடை செய்யவேண்டிய இக் காலத்தில் வயலில் இறங்கி வேலை செய்ய ஏராளமான வேலையாட்கள் தேவை என்பதை நாம் உணரவேண்டும். விளைந்திருக்கும் விளைச்சலைத் தகுந்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் அது அழிந்துபோகும் அல்லது சத்துரு வந்து களவாடிப் போய்விடுவான் என்பது யதார்த்தம்.


Vinra Channel
Vinnarasu.V

Comments