எஸ்றா விளக்கவுரை

எஸ்றா அறிமுகம்

(1) எஸ்றா அறிமுகம்

பரிசுத்த வேதாகமத்தில் - பழைய ஏற்பாட்டில் உள்ள எஸ்றாவின் புத்தகத்தைத் திறந்த மாத்திரத்தில் சில வியத்தகு வார்த்தைகளால் அப்புத்தகம் ஆரம்பிக்கப்படுவதை நாம் காணமுடிகிறது. அதாவது கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினார் எனக் காண்கிறோம். கர்த்தர் ஏன் ஒரு யூதனல்லாத புறஜாதியான இராஜாவின் ஆவியை ஏவவேண்டும்?


யூதர்கள் 70 ஆண்டுகாலம் சிறையிருப்பில் இருந்தபின்னர் இது எழுதப்பட்டது. கர்த்தர் தமது ஜனங்களின் இத்தனைக்கால சிறையிருப்பை அனுமதித்தது ஏன்?

இஸ்ரவேலர்களின் வரலாறு ஆபிரகாம் முதல் ஆரம்பமாகிறது.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மிகப்பெரிய சிலரில் ஆபிரகாமும் ஒருவன். அவன் தேவனுடைய சிநேகிதன் எனப்பட்டான் (யாக்.2:23) அவன் முதல் முதலில் தேவனை வணங்காத மக்களாகிய கல்தேயருடைய நகரமாகிய ஊர் என்ற பட்டணத்திலே வாழ்ந்து வந்தான் (ஆதி. 11:31). அங்கே தேவன் அவனோடே பேசி அந்தத் தேசத்தையும் அவனுடைய இனத்தையும் விட்டுப்புறப்பட்டு புதியதொரு தேசத்திற்குப் போகக் கட்டளையிட்டார். ஒரு புதிய ஜாதியை உண்டாக்குவேன் என்றும் அவர்களுக்கு ஆபிரகாம் தலைவனாக இருப்பான் என்றும் தேவன் சொன்னார் (ஆதி.12:1-3). அதற்குப் முன்பு இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்ததில்லை என்றபோதிலும் ஆபிரகாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து கானான் தேசத்திற்குச் சென்றான். அப்போது அவனுக்கு 75 வயது. அவன் மனைவி சாராளுக்கு 65 வயது. அவர்களுக்குக் குழந்தையில்லை. அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று தேவன் சொன்னது எப்படி நடக்கும்? ஆனால் தேவன் சொன்னதை ஆபிரகாம் விசுவாசித்தான். அவன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்தான். அவன் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தனது தேசத்தை விட்டுப் புறப்பட்டான். கர்த்தருடைய வாக்;குத்தத்தங்கள் நிறைவேறின (யாக்.2:23). தேவன் செய்த அற்புதத்தினால் சாராள் முதிர்வயதிலே ஈசாக்கைப் பெற்றாள். உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன், என்று கர்த்தரால் உரைக்கப்பட்டது ஆரம்பமாயிற்று (ஆதி.21:1,2).

ஆபிரகாம் மரித்தபின்பு அந்தப் புதிய தேசத்தாருக்கு நேரிடப்போவது என்ன என்றும் கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொல்லியிருந்தார். உன்னுடைய சந்ததியார் தங்களுடைய அல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து அத்தேசத்தாரை சேவிப்பர் என்றும் அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயம் தீர்ப்பேன். பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள் (ஆதி. 15:13-14). நடைமுறையில் நடந்த வரலாறுகள் அதுவே. ஆபிரகாமின் தேசத்து மக்கள் இஸ்ரவேலர், எகிப்து தேசத்திலே அடிமைகளாக இருந்து, பின்னர் தேவன் அவர்களை மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டுவரச்செய்தார் (யாத்.12:36). அவர்கள் மோசேயினால் செங்கடலைக்கடந்து பத்திரமாய் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத்துரத்திக்கொண்டு வந்த எகிப்தியரோ செங்கடலில் மூழ்கி அழிந்து போனார்கள் (யாத். 14)

இது கர்த்தரின் உன்னதமான அற்புதத்தில் ஒன்றாகும். கழுகுகளின் செட்டைகளின்மேல் வைத்து அவர்களைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொன்னார். அப்படியே அடிமைத்தனத்தினின்று அவர்களை மீட்டு வந்தார். அவ்வாறு மீட்டதில் கர்த்தர் குறிப்பிட்டதொரு நோக்கம் கொண்டிருந்தார். ஆபிரகாமைத் தனது பிள்ளையாக அவர் பிரித்து அழைத்ததுபோல தேவன் அவர்களையும் தனது சொந்தப்பிள்ளைகளாக்க எகிப்திலிருந்து பிரித்து அழைத்து வந்தார். அவர்களை ஒரு தனிப்பட்டவர்களாக, ஒரு தூய இனத்தினராக, கர்த்தரை நேசித்து கர்த்தருக்கு கீழ்ப்படிகிற மக்களுக்கு அவர் என்ன நன்மை செய்கிறார் என்பதனை வெளிப்படுத்த அவர்களைப் பிரித்து அழைத்துவந்தார். மற்ற எல்லாரையும்விட அவர்களுக்காக தேவன் அதிக அக்கறை கொண்டு ஆசீர்வதித்து அவர்களைத் தனது பொக்கிஷமாக அவர் தனக்காக அவர்களைப் பிரித்து அழைத்து வந்தார். எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் என்று தேவன் அவர்களைப் பார்த்து சொன்னார் (யாத்.19:5,6).

ஆகையால் கர்த்தராகிய தேவன், அவர்கள் தங்கள் விருப்பத்தின்படியே ஓர் இராஜாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதற்கு அனுமதியளித்தார். ஆனால் அத்தகைய ஒரு செயலின் விளைவுகளைக் குறித்து சாமுவேல் அவர்களை எச்சரித்தான். அந்த ராஜா உங்களைத் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி...... ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்வான்..... தன் நிலத்தை உழுகிறவர்களாகவும்.... வைத்துக்கொள்வான். உங்கள் குமாத்திகளைச் சமையல் பண்ணுகிறவர்களாகவும்...... வைத்துக்கொள்வான். உங்கள் வயல்களில் ..... நல்லவைகளை எடுத்துக்கொண்டு தன் வேலைக்காரருக்குக் கொடுப்பான்.. என்றெல்லாம் விளக்கிக் கூறினான் (1சாமு. 8:11-15). ஆனால் அந்த இஸ்ரவேலர் சாமுவேலின் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும் (1.சாமு.8:19) என்று கூக்குரலிட்டனர். அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் தங்கள் ராஜாவை வேண்டிப் பெற்றனர். அதோடு கர்த்தர் கூறியபடி அதனுடன் பல தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு சில ராஜாக்கள் மட்டுமே கர்த்தரைச் சேவித்தனர். மற்றவர்களோ தேவனை மறந்து, மக்களும் கர்த்தரின் வழிகளை விட்டு விலக காரணமாயிருந்தனர். சில இராஜாக்கள் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரத்தார் தங்களுக்குள்ளே போரிட காரணமாகவும் இருந்தனர். அந்தப் பன்னிரண்டு கோத்திரத்தார் இரு பிரிவாகப் பிரியும் நிலை ஏற்பட்டு பத்து கோத்திரத்தைச் சேர்த்தவர்கள் இஸ்ரவேலர். மற்ற இரண்டு கோத்திரத்தைச் சேர்த்தவர்கள் யூதா என்றும் பிரிந்து போயினர். இஸ்ரவேலரைச் சேர்ந்த பல மன்னர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்து, விக்கிரகங்களைப் பணிந்துகொள்ளத் தலைப்பட்டனர். தேவன் அவர்களைப் பல ஆண்டுகளாக எச்சரித்து பொறுமையாலே திருத்த முயன்றார். நெடுநாள் துன்பங்களை அனுபவித்து அவர்கள் அசீரியர்களினால் தோற்கடிக்கப்பட்டு, அந்தப் பத்து கோத்திரத்தாரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். தேவன் இதை அனுமதித்தார் (2.இரா.17:5-23). இந்த இழிநிலை அவர்களுக்கு ஏன் ஏற்பட்டதென்று வேதம் நமக்குக் கூறுகிறது. தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவம் செய்து அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்தார்கள் (2.இரா.17:7).

பத்து கோத்திரத்தார் அசீரியரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்பு மீதியிருந்தவர் யூதா கோத்திரத்தாரும் பென்யமீன் கோத்திரத்தாருமே. அவர்களும் கர்த்தரைச் சேவிக்க தவறிவிட்ருந்தனரென்றும் கர்த்தர் அவர்களுக்குச் சம்பவிக்கப் போகிறவைகளைக் குறித்து எச்சரிக்கத் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பியிருந்தார் (2.இரா.21:20-15). ஆனால் அவர்களோ தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. யூதாவின் இராஜாக்கள் தீர்க்கதரிசிகளைச் சிறையிலடைத்து துன்புறுத்தினதுமல்லாமல் அவர்களில் சிலரைக் கொலை செய்துவிட்டனர் (எரே.37:15, 26:20-23). கடைசியாக சிதேக்கியா இராஜாவின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனிய மன்னரான நேபுகாத்நேச்சார் யூதாவின் மக்களையும் பென்யமீன் கோத்திரத்து மக்களையும் தோற்கடித்து சிறைபிடித்து செல்லும்படி கர்த்தர் செய்தார் (2.இராஜா.25) கர்த்தர் தமது கோபத்தைக் குறித்தும் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் அவர்களின் விக்கிரக ஆராதனையின் இழித்தனம்பற்றியும் விளைவுகள் பற்றியும் பின்னர் ஆட்சிசெய்த நான்கு இராஜாக்களையும் கடுமையாக எச்சரித்தார். ஏசாயா, அவர்கள் காடுகளையும் தோப்புக்களையும் வெட்டி எரித்தும் மீதியுள்ள மரங்களினால் விக்கிரகங்கள் செய்து வணங்கியது பற்றியும் கூறி அவர்களை எச்சரித்து ஒரு துண்டு அடுப்பில் எரிக்கிறான். குளிர் காய்கிறான்... மீதியான துண்டை விக்கிரகமாகச் செய்து.... அதை வணங்குகிறான்...என்று பகடியாய் பேசி கேலி செய்தான் (ஏசாயா. 44:15-17). அப்போது இருந்த மற்றத் தீர்க்கதரிசிகளான ஓசியா, மீகா, ஆகியோரும் அவர்களுடைய விக்கிரக ஆராதனைப்பற்றி அவர்களை எச்சரித்தனர்.

அதற்குப்பின்னர் ஆட்சி செய்த மூன்று இராஜாக்களின் காலத்தில் எரேமியா தீர்க்கதரிசி அவர்களை மேலும் நம்பிக்கையோடு எச்சரித்தான். மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே. ஆதலால், இதோ இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப் பண்ணுவேன், என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன். என் நாமம் யேகோவா என்று அறிந்து கொள்வார்கள்.. (எரே.16:20-21). என்றெல்லாம் எரேமியா அவர்கள் சிறைப்பட்டுப்போகும் காலம் வரைக்கும் அவர்களை எச்சரித்தான்.

அப்போஸ்தலனாகிய பவுல் அதைக்குறித்து கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்ல (அப்.19:26) என்று கூறியுள்ளார். அவர் விக்கிரக வணக்கத்தை எதிர்த்துப் போதித்துள்ளார். ஆகையால் விக்கிரகங்களைத் தொழுவது எவ்வளவு மதியீனம் என்பது நன்கு புரியும். நமது வீடுகளில் விக்கிரகங்கள் இல்லையெனில் இத்தகையதொரு பாவத்தினின்று நாம் விடுபட்டவர்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால் விக்கிரகம் எனப்படுவது கல்லினாலும், கட்டையினாலும் மட்டும் செய்யப்படும் உருவங்களே என்பதல்ல. ஆனால் கர்த்தருக்கும் நமக்கும் இடையில் இடையூறாக வரும் ஒரு மனிதனோ அல்லது ஒரு பொருளோ கூட விக்கிரகமே. அது ஒரு நல்ல பொருளாகக்கூட இருக்கலாம். ஆனால் நமது கால நேரம் அப்பொருளினால் கவரப்பட்டு கடவுளுக்கு நாம் செலவிடும் நேரத்தைக் கெடுப்பதாயின் அதுவும் ஒரு விக்கிரகமே. இப்பொழுது நீர் சிந்தித்து முடிவு கூறும். உமக்கு ஒரு விக்கிரகம் உண்டோ?.

அடுத்து மற்றுமொரு தேவ கட்டளையை இஸ்ரவேலர் புறக்கணித்து வந்தனர். அது அவர்கள் உழுது பயிரிட்ட நிலங்களைப் பற்றியதாகும். ஒவ்வொரு ஏழாம் வருஷத்திலும் வயலை விதைக்காமல் திராட்சை தோட்டத்தைக் கிளை கழிக்காமலும் இருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார் (லேவி.25:4). ஆனால் அவர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை அந்தக் கீழ்ப்படியாமையின் விளைவாக என்ன நேரிடும் என்று தேவன் தனது பிள்ளையான மோசேயின் மூலம் அவர்களுக்கு எச்சரித்திருந்தார். நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்... அப்பொழுது தேசம் ஓய்வடைந்து- பாழாய் கிடக்கும் நாளெல்லாம்... ஓய்வு நாட்களை ரம்மியமாய் அநுபவிக்கும்... (லேவி. 25:32-35) என்று எச்சரித்தனர்.

பிறகு கர்த்தர் யூதாவைச் சிறைப்படுத்திப் போட்டார். தனது ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அனுபவித்துத்தீருமட்டும்... எழுபது வருஷம் முடியும் மட்டும்... (2.நாளா.36:21) தீர்க்கதரிசியாகிய எரேமியாவும் இந்த எழுவது ஆண்டுகளைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான் (எரே. 25:1). ஆனால் அவர்களோ கர்த்தருடைய கட்டளைக்குச் செவிசாய்க்கவில்லை. அவர்களை யார் சிறைப்படுத்திக் கொண்டுபோவான் என்று எரேமியா தீர்க்கதரிசி உரைத்துள்ளான் (எரே. 21:4-10). கர்த்தருடைய கடுமையான வார்த்தைகளை எரேமியா உரைத்துக் கூறி நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையாக உங்களோடு யுத்தம் பண்ணி---- (எரே.21:5) என்று கர்த்தரின் கோபத்தை வெளிப்படுத்தினான். ஆனால் அவர்களோ கர்த்தருக்குப் பயந்து தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை.

கர்த்தர் இன்று கூறுவது யாதெனில், இதோ நான் உங்கள் முன்னே ஜீவ வழியையும் மரணவழியையும் வைக்கிறேன், என்பதாகும். மேலும் கர்த்தர் எச்சரித்துக் கூறுவதாவது, அவரை (தேவ குமாரனாகிய கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டான். விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவாக இராதபடியால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.... (யோவான்,3:18). என்ற போதிலும் உலகம் இந்தக் கடும் வழிகளை மாற்றிக் கொள்ள மக்கள் மறுக்கின்றனர். உன்னைப் பற்றி நீ யாது கூறுகிறாய்? நீ கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறாயா?

கர்த்தர் இஸ்ரவேலில் அல்ல. ஒரே புற ஜாதியினானான இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைத் தெரிந்து கொண்டு, தனது மக்களுக்கு விரோதமான திட்டங்களைச் செயல்படுத்த சித்தங் கொண்டார். அந்தப் புறஜாதி ராஜாவை தேவன், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என அழைக்க விரும்புகிறார் (எரே.25:9, 27:6). கர்த்தராகிய தேவன் தாம் தெரிந்து கொண்ட யார் ஒருவனையும் கொண்டு தமது சித்த்ததை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். சகல இயற்கைச் சத்துருக்களின் மேலும் தேவன் அதிகாரம் கொண்டவராய் இருக்கிறார் (யாத்.10:21). அதுமட்டுமன்றி, எல்லா பிராணிகள் மேலும் (எண்.22:28), தேவ தூதர்களின் மேலும் (தானி.6:22), அசுத்த ஆவிகளின் மேலும் (மாற்.9:25,26) அதிகாரமுடையவராயிருக்கும் தேவன் இங்கே ஒரு புறஜாதி இராஜாவை தனக்குக் கீழ்ப்படிந்தவராகத் தெரிந்து கொண்டார். இதுபோலவே, பல வேளைகளில் தனது பிள்ளைகளுக்கு உதவி செய்யவும் புறஜாதி இராஜாக்களைத் தேவன் தெரிந்துகொண்டுள்ளார். எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் மன்னரைத் தெரிந்து கொண்டு அவனுக்கு குழப்பத்தை உண்டாக்கிய சொர்ப்பனங்களை ஏற்படுத்தினார். அந்தச் சொர்ப்பனங்களின் அர்த்தங்களை விடுவித்துச்சொன்னவன் யோசேப்பு என்ற யூதன். அவன் அந்த இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு அந்த அரண்மனையில் உயர்த்தப்பட்டு, யூதர்களின் முற்பிதாக்களாகிய அவனுடைய குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்வளிக்கக் கர்த்தர் கிருபை செய்தார் (ஆதி.41)

அது போலவே கர்த்தர் தமது பிள்ளையாகிய தானியேலை நேபுகாத்நேச்சார் இராஜாவின் சிறையிருப்பில் இருந்து உயர்ந்ததொரு பதவிக்கு உயரச் செய்தார் (தானி.2). பெர்சியாவின் இராஜாவாகிய அர்த்சஷ்டா அரசாளுகிற காலத்தில் (இவரும் ஒரு புறஜாதி இராஜா) கர்த்தரின் சித்தத்தன்படி நெகேமியா எருசலேம் நகரின் அலங்கங்கள் அனைத்தையும் கட்டி முடிக்க அந்த இராஜா எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தான் (நெகே.2). கர்த்தர் எல்லா இராஜாக்களுக்கும் மேலானவர். அவர் தமது சித்தத்தை நிறைவேற்ற யாரையும், அல்லது எந்த சக்தியையும் அசைக்க வல்லவராய் இருக்கிறார்.

எஸ்றாவின் புத்தகம் எழுத துவக்கப்படும்போது, எரேமியா தீர்க்கதரிச முன்னறிவித்தபடி யூதா இராஜ்யங்கள், எழுபது ஆண்டுகால சிறையிருப்பில் புறஜாதி இராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இத்தகைய சிறையிருப்பும் பாபிலோனிய இராஜாக்களின் ஆட்சியும் கர்த்தரின் சித்தம் நிறைவேறத்தக்கதாக முடிவு பெறும் நாள் வந்தது (தானி.5:26).

கர்த்தர் நம்மைக்குறித்தும் அவ்வாறே நினைக்கிறார். நாம் பிரத்தியேகமானவர்களாகவும் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் (1பேது.2:5) இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அப்பொழுது அவர் தேவ அன்பையும் தேவ இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவ அன்பும் இரக்கமும் ஏற்பட இவ்வுலகத்தில் மத்தியில் இருந்து நாம் புறப்பட்டுப் பிரிந்து போகவேண்டும் (2கொரி.6.17). பிரிந்து என்று சொல்லும்போது உலகை விட்டுச் சென்றுவிடுதல் அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் மறைந்து ஒளிந்து கொள்ளுதலும் அல்ல (யோவான் 17:15) உலகத்தில் இருந்து நாம் வேறுபட்டவர்களாகக் காணும்படி நமது வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி வாழவேண்டும். இத்தகையதான நமது தூய வாழ்க்கை மற்றவர்களையும் கிறிஸ்தேசுவின் அன்பிற்குள் அழைத்து வரமுடியும் (அப்.16:25-33).

கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். அதற்குப் பதிலாக அந்த இஸ்ரவேலரும் கீழ்ப்படிந்து கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றினார்கள். (யாத்.19:8) கர்த்தர் சொன்னவைகளைச் செய்வோம் என்றார்கள். ஆகையால் கர்த்தர் மோசேக்கு தனது கட்டளைகளைக் கொடுத்தார். அந்தக் கட்டளைகள் இஸ்ரவேலருக்கு அருளப்பட்டது.

அந்தக் கற்பனைகளில் பிரதானமான முதல் கற்பனையாதெனில் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். இவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம் என்பதே... (யாத் 20:3-5, மாற்.12:30). இது ஒரு நியாயமான சட்டமும் கூட ஏனெனில் எகிப்து தேசத்தில் இருந்து அவர்களை அழைத்து வந்தவரும் காத்து வந்தவருமான கடவுள் அவரே. ஆகையால் அவர்கள் தொழவேண்டிய கடவுளும் அவரேயாகும்.

ஆனால் இஸ்ரவேலரோ இந்த வாக்குறுதியை மறந்து இந்த முக்கியமான கற்பனையைப் புறக்கணித்தார்கள். எகிப்தின் எல்லைகளைவிட்டு அவர்கள் கடந்து வந்தபோது, தேவன் மறந்து பொன்னணிகளையும் ஆபரணங்களையும் உருக்கி விக்கிரகங்களை வார்ப்பித்தார்கள். வார்ப்பித்த விக்கிரகத்தை வணங்கவும் செய்தார்கள் (யாத்.32:8). அவ்வாறு செய்தவர்களில் பலர் எகிப்திலே, தேவனுடைய வல்லமையால் எகிப்தியர் வாதைகளுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டார்களே. அத்தகைய வாதைகளினால் எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிக்கப்பட்டபோது, கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாசலின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகள் கொல்லப்படாமல் இருந்ததனையும் நேரில் கண்டவர்களே (யாத்.12). செங்கடலைப் பிளந்து, நீரைத் தேக்கி கட்டாந்தரை வழியாக கடந்து வந்தபோது பின் தொடர்ந்து வந்த எகிப்தியரை தேவன் அழித்த அற்புதங்களையும் இவர்கள் கண்டவர்களே. என்றபோதிலும் இவை யாவற்றையும் மறந்து தங்கள் சொந்தக் கைகளினால் படைத்த, பேசக்கூடாத விக்கிரகங்களை அவர்கள் வணங்கினார்கள். கர்த்தர் கோபம் கொள்ளாரோ! மோசேயை நோக்கி, இந்த ஜாதியை அழித்து புதியதொரு ஜாதியை உண்டாக்குவேன். அதற்கு நீயே தலைவனாக இருப்பாய் என்று தேவன் கூறினார். ஆனால் மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ஆண்டவரே உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால் எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும் என்று மன்றாடினான் (யாத்.24:9). கர்த்தர் அவனுடைய மன்றாட்டுக்குச் செவிகொடுத்தார். அவர்களோடு தேவன் சென்றார். தொடர்ந்து அவர்களை நேசித்து அவர்களுக்குத் துணை புரிந்தார். அவர்கள் வனாந்தரங்களில் சுற்றித் திரிந்த 40 ஆண்டு காலமும் தேவன் அவர்களை நேசித்துத் துணைபுரிந்தார்.

மோசே மரணமடைந்தபின்பு யோசுவா இஸ்ரவேலர்களை வழி நடத்திச் சென்று, கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தில் சேரச் செய்தான். யோசுவா இறந்த பின்பு இஸ்ரவேலர் மறுபடியும் அன்னிய தேவர்களைப் பின் பற்றிச் சோரம் போய் அவைகளைப் பணிந்து, கொண்டார்கள் (நியா.2:17) அதனால் கர்த்தர் கோபம் கொண்டு, தோற்கடிக்கப்படும்படி, மறுபடியும் மறுபடியும் அவர்களை நியாயம் விசாரிக்க நியாயாதிபதிகளை கர்த்தர் ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் திரும்பவும் கர்த்தரைப் புறக்கணித்து அந்நிய தேவர்களைத் தங்களுக்கு தேவனாக ஏற்றுக் கொண்டார்கள் (நியா.8:33).

பின்பு கர்த்தர் சாழுவேல் தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார். சாமுவேல் கர்த்தரின் வார்த்தைகளை அவர்களுக்கு உபதேசித்து அவர்களை வழிநடத்தினார். சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் வேறு விக்கிரகங்களையோ அந்நிய தெய்வங்களையோ நாடவில்லை. சாமுவேல் முதிர் வயதானபோது அவர்கள் சாமுவேலினிடத்தில் வந்து, சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஒரு இராஜா ஏற்படுத்த வேண்டும் என்றார்கள் (1சாமு.8:5). சாமுவேல் இது குறித்து மிகவும் குழப்பம் அடைந்து கர்த்ரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர் அவர்கள் இருதயத்தை நன்கு அறிந்திருந்தார். யாரை இராஜாவாக்க வேண்டும் என்று அறிந்திருந்தார் (உபா.17;14). கர்த்தர் சாமுவேலை நோக்கி, .......அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள் மட்டும் அவர்கள் என்னை விட்டு, வேறே தேவர்களைச் சேவித்து வந்த தங்கள் எல்லா செய்கைகளின்படியும் செய்ததுபோல் அவர்கள் உனக்கும் செய்கிறார்கள் (1சாமு.8:7-8) என்றார். அந்த ஆட்சியை முடிவுறச் செய்வதற்கு தேவன் மற்றொரு புறஜாதி இராஜாவை தெரிந்துகொண்டார். அவர்தான் பெர்சியாவின் இராஜாவை தெரிந்துக் கொண்டார். அவர்தான் பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் என நாம் காண்கிறோம் (எஸ்றா.1:1)

உண்மையில் தேவன் இந்தக் கோரேசை வெகு காலத்திற்கு முன்பே தெரிந்துகொண்டார். ஏசாயா தனது வியத்தகு தீர்க்கதரிசன வார்த்தைகளினால் உரைத்து, கோரேஸ் என்பவன் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவும், எருசலேம் நகரத்தையும் தேவனுடைய ஆலையத்தையும் மறு நிர்மாணம் செய்வான் என்று கூறுகிறான். கர்த்தர் இந்தக் கோரேசைக்குறித்து, அவன் என் மேய்ப்பன் என்றும், நான் அபிஷேகம் பண்ணின கோரேஸ்..... என்றும் கூறுகிறார் (ஏசாயா 44:28, 45:1). ஒரு புறஜாதியினனைப்பற்றி அபிஷேகம் பண்ணப்பட்டவன் எனக் கூறப்படுவது இதுவென்றேயாகும். கர்த்தராகிய இயேசுவைப்பற்றிக் குறிப்பிட மட்டுமே இந்த இரண்டு சொற்றொடர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன (சங் 23:1, யோவான் 10:11, சங் 2:2). ஆகையால் கோரேசும் இயேசுவின் ஒரு நிழல் எனக்கருதலாம். இந்தப்புறஜாதி இரராஜா யார்? வரலாறு கூறுகிறபடி அவன் மேதியா என்ற ஒரு சிறிய நாட்டின் இராஜா. அவன் தனது சேனையுடன் அருகில் இருந்த இராஜ்யங்களை வென்று மேதிய பெர்சிய இராஜ்யங்களின் இராஜாவாக தன்னை உயர்த்திக்கொண்டான். அவனுக்கு எதிராக பல இராஜ்யங்களின் இராஜாக்கள் திரண்டு எதிர்த்தபோது அவர்கள் அனைவரையும் வென்று, சின்ன ஆசிய பிரதேசம் முழுமைக்கும் பெரிய இராஜாவாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். பழைய ஏற்பாட்டின் ஆகம புத்தகங்களில் அவனது பெயர் 24 முறை கூறப்பட்டுள்ளது.

அடுத்து கோரேஸ் பாபிலோன் நாட்டின்மேல் படையெடுக்க எண்ணினான். பாபிலோன் இராஜ்யம் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிரமைக்கப்பட்டு, அவரது பேரனான பெல்ஷாத்சார் இராஜாவினால் ஆளப்பட்டு வந்தது. இந்தப் பாபிலோனையும் ஆட்சி செய்ய அவனுக்கு எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை கோரேஸ், ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படித்திருந்தானோ, நமக்குத் தெரியவில்லை. கோரேஸ் பாபிலோனைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில், தேவனுடைய பிள்ளையான தானியேல் மிகவும் வயது சென்றவராக பாபிலோனிலே இருந்தார் (தானி 10:1). ஒருவேளை ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளையும், அதில் தேவன் கோரேசின் பெயரை தீர்க்கதரிசிக்கு உணர்த்தியுள்ள வல்லமையையும் தானியேல் கோரேசுக்கு கூறியிருக்கலாம் என சிலர் எண்ணுகின்றனர். ......கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு........ சொல்லுகிறதாவது, உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே.....(ஏசாயா 45:1-3). கர்த்தர் சொல்லுகிறதாவது, கோரேசைக்குறித்து, அவன் என் மேய்ப்பன்...... எனக்குப் பிரியானதையெல்லாம் நிறைவேற்றுவான், என்று சொல்லுகிறவர் நானே... கர்த்தர் எருசலேமைக் குறித்துச் சொல்லுகிறதாவது: நீ கட்டப்படு, என்றும் தேவாலயத்தை நோக்கி, நீ அஸ்திபாரப்படு, என்றும் கூறுகிறார் (ஏசாயா 44:28).

பெல்ஷாத்சார் இராஜா தனது அரண்மணையில் விருந்து பண்ணி திராட்சை ரசம் குடித்துக் கொண்டிருக்கையில் கோரேசின் சேனைகள் பாபிலோனியாவைக் கைப்பற்றின (தானி.5). கோரேஸ் இராஜா தனது பரந்த இராஜ்யத்துடன் பாபிலோனியாவையும் சேர்த்துக் கொண்டான். அவன் பல இராஜ்யங்களை வென்று இராஜாக்களின் அதிகாரங்களைக் கைப்பற்றினான் (ஏசாயா 45:1). கர்த்தர் பெல்ஷாத்சாரின் அரண்மனைச் சுவர்களில், எழுதுவித்து நடக்கப் போகிறவைகளைக்குறித்து அவனை எச்சரித்தார். அந்த எழுதப்பட்டவைகளைப் பெல்ஷாத்சார் கண்ட மாத்திரத்தில் அவன் மிகவும் பயந்தான். அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஆனால் பெல்ஷாத்சார் கர்த்தரின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, தனது இராஜ்யத்தையும் தனது இன்னுயிரையும் இழந்தான். அந்தக் கோரேசு கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதில் கர்த்தருக்கு உகந்தவனாய் இருந்தான். இருவிதங்களில் கர்த்தரின் வார்த்தைகளை நிறைவேற்றினான். இதற்குரிய நேரம் வந்துவிட்டது. அவர் இராஜ்யங்களை ஜெயித்து ராஜாக்களின் அதிகாரங்களைப் பிடுங்கிப் போடுவார் (சங்.2, சங் 47:1-3, வெளி 17:14). எஸ்றாவைப்பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் அனைத்தும் நிறைவேறவேண்டிய தருணம் வந்துவிட்டது. இங்குதான் எஸ்றாவின் புத்தகம் எழுதத் துவங்கப்பட்டுள்ளது.

எஸ்றா 1 விளக்கவுரை

எஸ்றா 1

(2) ஆலையத்தைச் சீரமைத்துக் கட்ட தேவனுடைய கட்டளை

வசனம் 1:1-4

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன். எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆயலத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.


சில வரலாற்று ஆசிரியர்கள் பெர்சியாவின் இராஜாவாகிய கோரேசை நல்லவன் என்பர். அவன், தான் ஜெயித்த நாட்டின் மக்கள், அவரவருக்குப் பிரியமான தேவர்களை வணங்கிக்கொள்வதை அனுமதித்தான். யூதர்களுக்கு அதனிலும் பெரியதொரு நன்மை செய்தான். பாபிலோன் இராஜ்யம் எங்கும் ஒரு விளம்பரத்தையெழுதியனுப்பினான். அதில், பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி யூதாவில் உள்ள எருசலேமிலே தமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார், என்று எழுதியிருந்தது. என்ன ஆச்சரியமான விளம்பரம்! அவன் ஒரு யூதனல்லாத இராஜா. புறஜாதியனான இராஜா. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளினார் என்றும், எருசலேமில் தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்றும் கூறுகிறார். அவர்தான் கோரேஸ். அவர் அதை நிறைவேற்றப் போகிறார்.

இது எவ்வாறு நடந்தது? முதலாம் வசனத்திலே கூறப்பட்டுள்ளபடி கோரேசின் ஆவியைக் கர்த்தர் ஏவினார். அது ஏன் நடந்தது? முதலாம் வசனத்தில் மேலும் எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி.... என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தர் தமது வார்த்தைகளை ஒன்றாகிலும் (நிறைவேறாமல்) ஒழிந்துபோக விடார் (மத் 24:35). அறிந்தும், அறியாமலும் அதிகாரிகள், அன்றும் இன்றும் அவர் சித்தத்தை நிறைவேற்றி வருகின்றனர். தேவன் அவர்களுக்கு சுய நிர்ணயத்தை அளித்துள்ளார். எனினும் அவர்களின் வழிமுறைகள் தேவ திட்டத்திற்குட்பட்டவைகளேயாகும்.

அடுத்துள்ள எஸ்றாவின் வார்த்தைகள், அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்..... என்பதாகும். கோரேஸ் தனது ஜனங்களுக்குப் போகும்படி கட்டளையிடவில்லை. அவரவர் விருப்பத்திற்கே இது விடப்பட்டது. எழுபது ஆண்டு கால சிறையிருப்பிற்குப்பின் ஏரேமியாவும், ஏசாயாவும் உரைத்ததீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றும்படி ஒருவன் எழுப்பப்பட்டான். அவன், செல்லுங்கள் ........ கட்டுங்கள்..... என்று அவர்களை வாய்ப்பளித்துத் துரிதப்படுத்தினான். மேலும் கோரேஸ், கட்டப்படவேண்டியது யாருடைய வீடு என்பதை மிகவும் திட்டமாக, எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய,- அவர் கர்த்தர்,- ஆலயம்..... என்று கூறுகிறான்.

நேபுகாத்நேச்சார் மன்னரும், கோரேஸ் இராஜாவும் தேவனைப்பற்றி மிகவும் உன்னதமான வார்த்தைகளைக் கூறியுள்ளனர். நான் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து என்னென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன், என்று நேபுகாத்நேச்சார் கூறியுள்ளான் (தானி 4:34). எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன், என்று கோரேஸ் கூறியுள்ளான். இவர்கள் இருவரும் யூதர்களை அரசாண்ட புறஜாதி இராஜாக்களாக இருந்தும் யூதர்களின் தேவனைப் போற்றிப் பேசியுள்ளனர். இவர்கள் கர்த்தரை நேருக்கு நேர் அறிந்தவர்களாவென்பது நமக்குத் தெரியாது.

யூதர்கள் போக கோரேஸ் அனுமதியளித்தான். அதுவும் அவரவர் விருப்பத்தின்படி நடக்க அனுமதித்தான். ஒருவேளை அவர்கள் விரும்பினால், அவர்கள், தங்களுடைய வீடுகளிலேயே இருந்து விடலாம். நேபுகாத் நேச்சார் மன்னரால் சிறைப் பிடிக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்து விட்டிருந்ததால் சிலரே உயிருடன் இருந்திருக்கக்கூடும். பலர் மிகவும் வயது சென்றோராக இருந்திருப்பர். மற்றவர் அந்நிய நாட்டிலே வசதியுடன் வாழ்ந்துகொண்டிருந்தால் திரும்பிச் செல்வது அவ்வளவு எளிதும் அல்ல. அவர் அறிந்திருந்ததனைத்தையும், அவர்கள் பெற்றிருந்தவைகளில் பெரும்பகுதியையும் அந்த நாட்டிலேயே விட்டுச் செல்லவேண்டும். அவர்களுடைய பயணம் மிகக்கடினமானதாகும். ஆலயத்தைக் கட்டுவதென்பது கடினமான உடலுழைப்பு. இது பலருக்குத் தெரியும். ஆனால் அது ஒரு மீட்சி. ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். அழைப்பு வந்தவுடன் அவர்கள் புறப்பட்டுச் சென்றவனர். இதைச் செய்ய அவர்களுக்கு ஒரு தரிசனம் தேவைப்பட்டது. கடின உழைப்பு, தியாகம், ஆகிய எல்லா இக்கட்டுக்களையும் கடந்து செல்லவேண்டிருயிந்தது. தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளக் கூடிய அழகிய ஆலயத்தின் அமைப்பை நினைத்துப்பார்க்க வேண்டியும் இருந்தது. அதற்காக அவர்கள் எந்தவொரு தியாகத்தையும் செய்ய வேண்டியிருந்தது. நாமும் நமது வாழ்வைப் புதிப்பிக்க விரும்பினால் சகலத்தையும் சகித்துக் கொண்டு எந்த வகைத் தியாகத்தையும் செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும்.

சிலர் ஆலயத்தைக் கட்டும் இடத்திற்குச் செல்லக் கூடாமல் இருக்கலாம். வியாதியின் காரணமாகவும், குடும்பத் தொல்லைகளின் காரணமாகவும், தடைப்பட்டுப் போகலாம். அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புதல் முறையன்று. ஆனால் அப்படிப் போகக்கூடாமல் தடைப்பட்டுப் போனவர்கள், போகிறவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பொன்னும் வெள்ளியுமான விலையுயர்ந்த பொருள்களும், பணிக்குத் தேவையான இதர பொருள்களும் பலியிடுவதற்குத் தேவையான, காளைபோன்ற விலங்குகளும், மற்றும் இதுபோன்ற பல பொருள்களையும் ஆலயத்தைக் கட்ட செல்கிறவர்களுக்கு, செல்ல முடியாமல் இருக்கிறவர்கள் கொடுத்து அனுப்பவேண்டியுள்ளது. இது அனைவரும் சேர்ந்து செய்யவேண்டியதொரு பெருமுயற்சியேயாகும்.

நம்மில் அநேகர் முழுநேர சுவிசேஷ ஊழியர்கள் அல்ல. ஆனாலும் நாம் எல்லாரும் இந்தத் திருப்பணியில் பங்கு கொள்ள முடியும். அவ்வாறு நேரடியாகச் சுவிசேஷ ஊழியத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் ஊழியத்திற்குக் கொடுத்து உதவுவதோடன்றி, பிற இடங்களில், தூரத்திலும், வேறு நாடுகளிலும் நடக்கும் ஊழியங்களுக்கும்கூட, பொன்;னும் வெள்ளியுமாக, மற்றும் முடிந்த பொருள்களுமான உதவி செய்தல் வேண்டும்.

வசனம் 1:5

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்ஜமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்.

இங்கே, கோரேஸ் இராஜாவின் விளம்பரத்தினால் ஏற்பட்ட விளைவுகளை நாம் காண்கிறோம். பல யூதர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறை பிடிக்கப்பட்டு போனதும், பலர் கொல்லப்பட்டதுமான வரலாறுகளையும், தேவனுடைய ஆலயம் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுப் போனதும், எருசலேமின் அலங்கங்கள் இடிக்கப்பட்டுப் போனதுமான வரலாறுகளைத் தங்கள் காலத்திலெல்லாம் கதை கதையாகப் பேசக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் புதிய தலைமுறையினரான யூதர்களை எண்ணிப் பாருங்கள். அவ்வாறு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட பலர் நேபுகாத்நேச்சார் இராஜாவின் அரண்மனையில் அரசனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் வேலைக்காரராகப் பணியாற்றி வந்தனர். ஆனால் இத்தகைய எல்லா கொடுமைகள் மத்தியிலும், தேவனுடைய சிலராக யூதர்கள், தேவ கிருபையைப்பற்றியும், எவ்வாறு எருசலேம் நகரம் தங்களுக்குத் திருப்பித் தரப்படும் எனற தேவ வாக்குறுதிகள் பற்றியும், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டுள்ள, கோரேஸ் என்ற இராஜா, எவ்வாறு இதைச் செய்வார் என்பதுபற்றியும் அடிக்கடி பேசி வந்தனர். இப்போதோ நாம் அதே பெயர் கொண்ட கோரேஸ் இராஜாவின் விளம்பரத்தையும், அதே யூதர்கள், விரும்பினால் சிறையிருப்பிலிருந்து மீண்டு, எருசலேமுக்குச் சென்று தேவாலயத்தைக் கட்டலாம், என்ற அந்த இராஜாவின் அனுமதியையும் காண்கிறோம். மேலும், யூதா, பென்ஜமீன் வம்சங்களின் தலைவரும், ஆசாரியரும், லேவியருமன்றி, எல்லாரும் எழும்பினார்கள், என்று இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம். தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த பல மன்னர்களைத் தங்கள் இராஜாக்களாகக் கொண்ட இரு கோத்திரத்தாரை நாம் இங்கு காண்கிறோம். அந்த இராஜாக்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தர் தமது வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு நிறைவேறப்பண்ணினதால், யூதர்களான அவ்விரு கோத்திரத்தாரும், ஆசாரியர்களுடனும், லேவியர்களுடனும் சேர்ந்து தேவனால் அருளப்பட்டபடி செய்ய முற்பட்டனர். அவர்கள் எருசலேமுக்குப் புறப்பட்டபோது அவர்கள் இருதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டுமன்றோ!

வசனம் 1:6

அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

புறப்பட்டவர்கள் அனைவரும் தலைவர்களே. அவர்கள் சேர்ந்து புறப்பட்போது மற்றும் பலர் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். நல்ல தலைவர்கள் எழும்பி காரியங்களைச் செய்ய முற்படும்போது பலர் சேர்ந்து வருதல் இயற்கையே. மோசேயும் ஆரோனும் சேர்ந்து கர்த்தருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து பார்வோனிடம் சென்றபோது ஒரு தேசமே, எகிப்து நாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு, அவர்களின் பின்னே செல்லத் தயாரானது (யாத் 12:5-51). அதுமட்டுமல்ல, நெகேமியா, துணிவுடன் வென்று அர்தசஷ்டா இராஜாவிடம், எருசலேமின் அலங்கங்களைப் புதுப்பித்துக்கட்ட அனுமதி கேட்டபோது, அதைக் கேட்ட அனைவரும, எழுந்து கட்டுவோம் வாருங்கள், என்று சொல்லி அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (நெகே.2:18) என்று காண்கிறோம்.

இப்போது புறப்பட்ட தலைவர்களையும் அவர்களுடன் சேர்ந்துகொண்டவர்களையும் உற்சாகப்படுத்தப் பலரும், பொன், வெள்ளி ஆகிய பரிசுகளையும், தேவையான பணிமுட்டுகளையும், பலியிடுவதற்கு தேவையான காளை, ஆடு முதலியனவைகளையும், மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் முகமுவந்தளித்தனர். இவைகள் அனைத்தும் அவர்கள் முறைப்படியளித்த காணிக்கைகளுடன் சேர்ந்தவைகளே. போக முடியாதவர்களும், போக விரும்பாதவர்களுமே இவ்வாறு கொடுத்தவர்கள். போக விரும்பியவர்களுக்கு அவர்கள் மன உற்சாகமாய்க் கொடுத்து அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். ஒரு வாசஸ்தலத்தைக் கட்டும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபொழுது, மோசே இஸ்ரவேலரை நோக்கி, உங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளைக் கொண்டு வாருங்கள் என்றுகேட்டுக் கொண்டான். அப்பொழுது அவர்கள், கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களைக் கொண்டுவந்தார்கள், என்று வேதம் கூறுகிறது (யாத்.36:5). அப்போது மோசே அவர்களைத் தடுக்க வேண்டியதாயிற்று. அதுபோல், இன்று, தடுக்கும் அளவில் நாம் காணிக்கைகளை கொண்டுவர முடியுமா?

வசனம் 1:7

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்த, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.


யூதர்கள் எருசலேமுக்குப்போக புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வியத்தகு காரியம் ஒன்று நடந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு நேபுகாத்நேச்சார் இராஜா எருசலேம் மீது போர்தொடுத்து, இஸ்ரவேலர்களைத் தோற்கடித்து, தேவாலயத்தில் இருந்த சகல பொன், வெள்ளிப் பணிமுட்டுகளையும், தூபகலசங்களையும் கொள்ளைப் பொருளாகக் கொண்டு சென்றதுமன்றி ஆலயத்தையும் எரித்துப்போட்டான் (1.இராஜா.25:13-19). அவன் அவைகளைக் கொண்டு சென்று அந்நிய தேவர்களின் ஆலயத்திலே, பாபிலோனிலே வைத்திருந்தான் (தானி.5:2). இப்பொழுது பாபிலோனிலே இராஜாவாக இருந்த கோரேஸ் அந்த அனைத்து பொன், வெள்ளி பணிமுட்டுகளைக் கொண்டுவரச் செய்து, எருசலேமுக்குச் செல்லப்புறப்பட்டுக் கொண்டிருந்த இஸ்ரவேலரிடம் கொடுத்து, புதியதாக எருசலேமில் கட்டப்படவிருக்கும் தேவாலத்தில் வைத்துவிடும்படி கொடுத்துவிட்டான். ஆலயம் இனி கட்டப்படவுள்ள நிலையில் இது போன்றதொரு கொடை நிகழ்ச்சி, அபூர்வமானதும் தெய்வீகமானதுமன்றோ?

வசனம் 1:8-11

அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினாலே எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டு போனான்.

பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ், இவைகளைப் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையில் கொடுத்து ஜாக்கிரதையுடன் எண்ணச் செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கச் செய்தான் (எஸ்றா 5:14). இந்தச் சேஸபாத்சார் தாவீதின் வம்ச வழியில் வந்தவனெ;று கருதப்பட்டதனால் இப்பொருட்கள் எழுத்துச் செல்ல மிகவும் தகுதியானவன் என்று கருதப்பட்டான். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் 30 பொன் தட்டுகள், வெள்ளித்தாலங்கள் 1000, கத்திகள் 29, பொற்கிண்ணங்கள் 30, வெள்ளிக்கிண்ணங்கள் 410, மற்றப் பணிமுட்டுகள் 1000, ஆகியனவும் அடங்கும். இந்தப் பொருள்கள் அனைத்தும் சேஸ்பாத்சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டு எருசலேமுக்கு எழுத்து செல்லப்பட்டன (வச.11). சேஸ்பாத்சார் இவைகளைக் கொண்டு செல்வதற்கென எந்தத்தனிப்பட்ட சலுகையும் தகுதியும் பெற்றவனல்லன். அவன் யூதாவின் அதிபதியாக இருந்தவன். சிறைப்படுத்தப்பட்ட மற்றும் பலரில் இவனும் ஒருவன். இவன் எருசலேமுக்குத் திருப்பினான். மற்றும் பலருடன், நம்பிக்கைக்கு பாத்திரமுள்ள ஒருவனாக பொன், வெள்ளிப்பணிமுட்டுகளுடன் எருசலேமுக்குச் செல்லுகிறான்.

போத்திப்பாரின் அரண்மனையில், எகிப்தில் இருந்த யோசேப்பினிடத்தில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததுபோல், சேஸ்பாத்சாரிடத்தில் இப்போது பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்பட்டிருக்கக் காண்கிறோம் வேதத்தில். போத்திப்பார், தனக்கு உண்டான யாவற்றையும் அவன் (யோசேப்பின்) கையில் ஒப்புவித்தான், என நாம் காண்கிறோம் (ஆதி.39:4-6). இயேசு கிறிஸ்து, கண்களை வானத்திற்கு ஏறெடுத்து ஜெபிக்கும்போது, நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.... என்று தமது பதினொரு சீடர்களைப்பற்றி கூறுகிறார் (யோவான் 17:12). அது போலவே இந்த யூதாவின் அதிபதியான சேஸ்பாத்சார் விளங்குகின்றான். நாம், நமது எல்லா காரியங்களிலும் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறோமா ???

எஸ்றா 2 விளக்கவுரை

எஸ்றா 2

(3) திரும்பி வந்தவர்கள்
வசனம் 2:1

பாபிலோன் ராஜாவாகியநேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,

இந்த அதிகாரத்தில், ஒரு சிலரின் பெயர்ப்பட்டியலைக் காண்கிறோம். தேவனுக்கு ஊழியம் செய்தவர்களின் பெயர்களைக் கர்த்தர் நமக்குப் பட்டியல் படுத்திக் காட்ட தயவுள்ளவராய் இருக்கிறார். அந்தப் பெயர்களின் வரிசையை நாம் மறுபடியும் நெகேமியாவின் புத்தகம்,7ம் அதிகாரத்தில் காணமுடிகிறது. பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தரால் குறித்து வைக்கப்பட்டுள்ள பல குறிப்புகளை நாம் காணமுடிகிறது. மல்கியாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலே கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக்கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைப் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.... என்கிற வார்த்தைகளை நாம் காண்கிறோம் (3:16). கர்த்தரைச் சேவித்து அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காக உள்ள அ
ந்த ஞாபக புத்தகத்தின்மூலம் கர்த்தர் அவர்களை நினைவுகூருகிறார். நமது வேதத்தில் உள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் 11ம் அதிகாரத்தில் கர்த்தருடைய பார்வையில் மிகவும் அருமையானவர்கள் என்று கருதப்படக்கூடிய சிலரின் பெயர்களை நாம் காணமுடிகிறது. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் தேவனுடைய குமாரனும் ஆட்டுக்குட்டியானவரில் விசுவாசம் வைத்திருப்போர் அனைவரின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன (வெளி 21:27). நீங்கள் செய்துவருகிற....... அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதி உள்ளவரல்லவே (எபேசி.6:10).

வசனம் 2:2

செருபாபேல், யெசுவா,நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடுகூடத் திரும்பிவந்த தேசத்துப் புத்திராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:

எருசலேமுக்குப் போகப் புறப்பட்ட இந்தக் கூட்டத்தில் உள்ள பத்து கோத்திரங்களிலும் சில யூதர்களும் இருந்திருக்கலாம். ஆனால், வேதம் கூறுகிறபடி, பொதுவாக அவர்கள் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களின் குடும்பங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுச்சென்ற நகரங்களுக்கே திரும்பி வந்துள்ளனர். அவர்களின் இரு முக்கியத் தலைவர்கள், செருபாபேல் என்பவரும், யெசுவா என்பவருமாகும். செருபாபேல் என வழங்கப்படுவது சேஸ்பாத்சார் எனப்பட்ட பெயரின் யூத மொழியாகக் கூடவும் இருக்கக்கூடும். சேஸ்பாத்சார் எனப்படுவது யூதாவின் அதிபதியாகும். இயேசு கிறிஸ்துவின் உலகப் பிரகாரமான முற்பிதாக்களின் பட்டியல் வரிசையிலே நாம், செருபாபேல் என்ற பெயரைக் காண்கிறோம். அவன் யூதாவின் கடைசி இராஜாக்களில் ஒருவனாகிய எகோனியாவின் பேரன் என்பதையும் அங்குக் காண்கிறோம். அந்த அரச குடும்பத்தினர் பாபிலோனில் சிறைப்பட்டுக் கிடந்த காலத்தில்தான் அந்தச் செருபாபேல் பிறந்திருக்க வேண்டும் (மத்.1:11,12). எஸ்றாவின் புத்தகத்தில் இந்தச் செருபாபேலைப்பற்றி நாம் வாசிக்கிறோம். தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக எருசலேமுக்குச் சென்ற இஸ்ரலேவர் கூட்டத்தின் ஒரு தலைவனாகச் செருபாபேல் சென்றதை நாம் வாசிக்கிறோம்.

2வது வசனத்தில், செருபாபேலுடன் எருசலேமுக்குச் சென்ற மற்ற பத்து தலைவர்களின் பெயர்களை நாம் வாசிக்கிறோம். அவர்களில் நெகேமியாவும், மொர்தெகாயும் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஏனெனில் அடுத்துவரும் வேத பகுதிகளில் நாம் இப் பெயர்களைக் காண முடிகிறது. ஆனால் எஸ்தரின் சரித்திரத்தில் வரும் மொர்தகாய் என்பவரும் நெகேமியாவின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நெகேமியாவும், இக்கூட்டத்துடன் எருசலேமுக்குச் சென்றதாகக் கூறப்படவில்லை. ஆதலால் இங்கு வாசிக்கும் அந்த இருவரும் வேறுபட்டவர்களாவர்.

வசனம் 2:3-22

பாரேஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்றுப் எழுபத்திரண்டுபேர். செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். ஆராகின் புத்திரர் எழுநூற்றுஎழுபத்தைந்துபேர். யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பன்னிரண்டுபேர். ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். சத்தூவின் புத்திரர்தொளியிரத்து நாற்பத்தைந்துபேர். சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். பானியின் புத்திரர் அறுநூற்றுநாற்பத்திரண்டுபேர். பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர். அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்துமூன்றுபேர். அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். ஆதீனின் புத்திரர்நானூற்று நானூற்று ஐம்பத்து நான்பேர். எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர். பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர். பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர். நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

இந்த வசனங்களில் எருசலேமுக்குத் திரும்ப வந்த அநேகரின் பெயர்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இவர்களில், ஒரு பிரிவினர் ஒரு தலைவரின் கீழும் மற்றொரு பிரிவினர், அவர்களின் முன்னோர்கள் வசித்து வந்ததும் இப்போது அவர்கள் திரும்பி சேர விரும்புவதுமான ஒரு ஊரைச் சேர்ந்தவர்களுமாகவுள்ள வரலாற்றினையும் நாம் இந்த வசனங்களில் வாசிக்கிறோம். 21வது வசனத்தில் அந்த பட்டணமாகிய பெத்லகேமுக்கு 123 பேர் திரும்பி வருவதைக் காண முடிகிறது. மீகா தீர்க்கதரிசி எழுதியுள்ள தீர்க்கதரிசன ஆகமத்தில், எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்.... (மீகா 5:2) எனக் கூறப்பட்டுள்ளது. பெத்லகேம் ஒரு சிறிய நகரம்தான். ஆனால் கர்த்தராகிய இயேசு உலகில் பிறந்த இடமாக அது அமைந்து விட்டது (மத்.2:1).

வசனம் 3:23-27

ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர். அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர். கீரியாத்யாரீம், கெமிரா, போரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர். மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.

ஆனதோத் என்கிற அழகிய ஊர் ஒன்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இதுதான் எரேமியா தீர்க்கதரிசி பிறந்த ஊர் (எரேமி.1:1). தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான், என்று இயேசு ஒரு முறை கூறியுள்ளதை நினைவுகூருவோம் (மாற்கு 6:4). இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலேயே அக்கூற்று உண்மையாகி விட்டது. அவருடைய சொந்தத் தாய் நகரத்தாரே அவருடைய சொந்த மக்களே, அவரைப் புறக்கணித்து விட்டனர் (மாற்கு 3:21, 6:1-4). இக்கூற்று எரேமியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலும் உண்மையாகிவிட்டதனையும் காண்கிறோம். எரேமியாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்திலே, யூதாவின் மக்கள், கர்த்தரை விட்டு விக்கிரகங்களை வணங்கினதினால் கர்த்தரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளதை, முன்னறிவிப்பதாக, இதோ, அவர்கள் தப்பித்துக் கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று வாசிக்கிறோம் (எரேமி.11:11-13). ஆனால் இத்தகைய கடுமையான ஆக்கினைகளை யாரும் விரும்புவதில்லை. அவ்வாறே எரேமியாவின் சொந்த நகரமாகிய ஆனதோத்திலும் ஆசாரியர்கள் மிகுதியாக வாழ்ந்த அந்த நகரத்திலும் இத்தகைய நிலையே நிலவியது. அந் நகரமக்கள் மிகவும் கோபங்கொண்டனர்.

அம் மக்கள் எரேமியாவின் முன்னறிவிப்புகளைக் கேட்டு கடுங்கோபங் கொண்டதினால் அவனைக் கொல்லச் செய்தனர். அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்தில் இராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும் போக அவனைச் சங்கரிப்போம், என்று அவர்கள் கூறினர் (எரேமி.11:19). ஆனால் கர்த்தர் இந்தச் சதியை எரேமியாவிற்கு வெளிப்படுத்தினதினால் அவன் அவர்களின் கைக்குத் தப்பி ஓடிப்போனான். கர்த்தர் ஆனதோத்தின் மக்களுக்கு எச்சரிக்கைகளை விளங்கச் சொல்லி, இதோ இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன் இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்:.... பஞ்சத்தாலே சாவார்கள். அவர்களில் மிதியாய் இருப்பவர்கள் இல்லை....... என்று வெளிப்படுத்தினார் (எரே 11:22-23).

ஆக, எஸ்றாவின் புத்தகத்திலே, இந்த நகரத்தின் மக்களைப்பற்றி, இந் நகரத்தில் தோன்றி வளர்ந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே,128 பேர் மட்டுமே தங்கள் முன்னோர்களிடம் திரும்பி வந்ததைக் காண்கிறோம். கர்த்தர் தமது வார்த்தைகள் நிறைவேறும்படி செய்தார்.

வசனம் 2:28-35

பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர். மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர். மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர். சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.

வசனம் 28ல் பெத்தேல், ஆயி என்ற இரு நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே இரு நகரங்களைப்பற்றியும் நாம் ஆதியாகமப் புத்தகத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் அவ்விடம் விட்டுப்பெயர்ந்து, பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டான் (ஆதி.12:8). பெத்தேல் என்றால் அப்பத்தின் வீடு, ஆயி என்றால் அழிவுச் சிதைவுகளின் குவியல், என்பதாம். இதுதான் இன்றைய கிறிஸ்தவனின் வாழ்க்கையைப்பற்றிய உண்மையான விளக்கம். இவ்வுலகில் கிறிஸ்தவர்களாகிய நாம், புதிய வாழ்க்கையாகிய ஆசீர்வாதத்திற்கும், அழிவிற்குரிய உலக இச்சைகளுக்கும் இடையே வாழ்கிறோம் (யோவான் 6:35, 16:33).

வசனம் 3:36-39

ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். இம்மேரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர். பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர். ஆரீமின் புத்திரர் அயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

ஆசாரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4289 என இவ்வசனங்களிலிருந்து அறிகிறோம். எருசலேமுக்குத்திரும்பி வந்த அனைத்து இஸ்ரவேலர்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பங்கு ஆகும் (ஆதி.14:20, எபி.7:2). ஆபிரகாமின் காணிக்கையைப்பற்றி வாசிக்கும் நாம், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாகக் கருதப்படும் அரசனும் ஆசாரியனுமான மெல்கிசேதேக்கு என்பவருக்கு ஆபிரகாம் காணிக்கையாக தனக்குண்டான யாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் என்று காண்கிறோம். இங்கே எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களில் பத்தில் ஒரு பங்கினரானவர்கள் ஆசாரியப்பணிக்காகப் பிரித்தெடுத்துக் கொண்டார். யாத் 28:1, எண் 18:7. (எஸ்.2:36,39)இல் குறிக்கப்பட்டிருக்கும் யெதாயா, பஸ்கூர், இம்மெர் என்பவர்கள் ஆசாரியர்களும் தேவாலயத்திற்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களுமாயிருந்தார்கள் என்று 1.நாளாகம புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம் (1.நாளா.9:10-13). இதுபோலவே ஆரிமின் என்பவரைப் பற்றியும் நாளாகமப்புத்தகத்தில் (28:1) வாசிக்கிறோம். இந்த ஆசாரியர்கள் ஆரோனின் வழி வந்தவர்கள் (யாத்.28:1). இவர்கள் காணிக்கைகள் படைப்பது, பலிகள் செலுத்துவதுமான பரிசுத்தப்பணிகளைச் செய்யவேண்டியவர்கள் (லேவி.6:8).

வசனம் 2:40

லேவியரானவர்கள்: ஓதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்துநான்குபேர்.

திரும்பி வந்த இஸ்ரவேலரில் 74 லேவியர்கள் இருந்தனர். அவர்கள் லேவியின் கோத்திரவழி வந்தவர்கள். லேவியர்கள் தேவனுடைய சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதனுடைய சகல பணிமுட்டுகளுக்கும், பொருட்களுக்கும் விசாரிப்புக்காரர்களாகவும், வாசஸ்தலத்தின் காவல் காப்பவர்களாவும் இருந்தனர் (எண்.1:50-53).

வசனம் 2:41

பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

பாடகர்களானவர்கள் 128 பேர் என்று இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் பல சங்கீதங்களை எழுதினவரான ஆசாபின் வம்ச வழித் தோற்றியவர்கள். இவர்கள் மட்டுமன்றி, திரும்பி வந்த இஸ்ரவேலரின் ஊழியக்காரர்களில், ஆண்களும், பெண்களுமாக 200 பாடகர்களும் இருந்தனரென்று வேதம் கூறுகிறது. இந்த நெடுந்தொலைவுப் பயணத்தைக் கால் நடையாக அவர்கள் கடந்து வரும்போது, பாடகர்கள் உரத்தக்குரலில் பாடல்களைப்பாடிக்கொண்டு வருதல் சாதாரரமானதொன்றே. அப்பாடல்களிலே அவர்களின் கடந்தகால நினைவுகளைப் பின்னித் துயரத்துடனான புலம்பல் பாடல்களும் புறப்பட்டிருத்தல் வேண்டும் (1.நாளா.35:25). அத்தகைய புலம்பல் பாடல்களில் தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர். நீர் சம்பாதித்த உமது சபையையும் கோத்திரத்தையும்.....நினைத்தருளும்... (சங்.74:1.2) என்றும், மற்றும், தேவனே....எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கப் பரியாசமும், சக்கந்தமுமானோம்... (சங்.79:4) என்பதும், போன்ற இன்னும் பலவும் அடங்கும். மற்றும் துதிப்பாடல்களாகவும் மகிழ்ச்சிப்பாடல்களாகவும், நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப்பாடி ஆர்ப்பரியுங்கள், என்றும் (சங்.81:1), வானஙகள் அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே நியாயாதிபதி....... என்றும் (சங்.50:6). பாடி ஆர்ப்பரித்திருப்பார்கள். அவர்களில் பாடகர்கள் முதலில் பாட, அவர்களுடன் நடந்து வந்துகொண்டிருந்த மற்ற ஆயிரமாயிரம் பேரும் சேர்ந்து பாட்டினைப் பின்னிசைத்துப் பாடி மகிழ்ந்திருக்கலாமன்றோ! தேவனுக்கு உகந்ததான பாடல்களின் மகிழ்வோசைகள்தான் என்னே!

வசனம் 2:42

வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சொபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

இதில் கூறப்பட்டுள்ளவர்கள் வாசல் காவலாளரின் புத்திரர்களாவர். வாசல் என்னுமிடத்தில் தேவாலயத்தின் வாசல் எனக்கொள்ளவேண்டும். அவர்கள் வாசனைத்திரவியங்களும், பணிமுட்டுகளும் வைக்கப்பட்டிருந்த அறைகளின் பொறுப்பாளர்களுமாவர். வாசற் கதவுதனைத்திறந்து பூட்ட வேண்டியவர்கள் இவர்களே. தேவாலயத்தின் வாசற்கதவுகளைத் திறத்தல் என்பது ஒரு முக்கியமான பணியாகக் காணப்படாது என்பது உண்மைதான். ஆனால் தாவீது இராஜா எழுதியுள்ளதாவது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்போரைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துக்கொள்ளுவேன், என்பதாகும் (சங்.84:10). வாசற்காவலாளரும், பாடகர்கள் ஆகிய இருவருமே சுத்திகரிப்பின் காவலை, காத்தனர், என்று வேதம் கூறுகிறது (நெகே.21:45).

வசனம் 2:43-62

நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர், கோரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர், ஆகாபின் புத்திரர் சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர், அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர், பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே. சாலமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர், யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர், செபத்தியாவின் புத்திரர், அத்தீமீன் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே. நிதனீமியரும் சாலமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே. இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதனீமியரானவர்களும்கூட தேவனுடைய ஆலயத்தின் ஊழியக்காரர்களாகவிருந்து லேவியர்களுக்கு உதவி செய்து வந்தனர் (எஸ்றா 8:20). அவர்கள், சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் (யோசுவா 9:21): பணி செய்து வந்த கிபியோனர்களுடைய சந்ததியார் என்று கருதப்படுகிறவது (யோசுவா 9:21). 59 வது வசனத்தில் சாலோமோனுடைய வேலையாள்களின் புத்திரர், எனக் கூறப்பட்டுள்ளவர்கள் சாலொமோன் தேவாலயத்தைக் கட்டுவதற்காகப் பணியில் அமர்த்திய 153,600 பணியாள்களின் வழிவந்தவர்கள் எனக் கருத இடமுண்டு (2.நாளா.2:1-2).

ஆனால், ஆலயத்தின் பணியாள்களும், சாலொமோனின் பணியாள்களின் வழிவந்தவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கச் செய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் வழிவந்தவர்களில் சிலரும் அவ்விதமே தங்களை விளங்கச் செய்யக் கூடவில்லை (வச.61). இஸ்ரவேலர் தங்களின் முன்னோரைப்பற்றிய கோத்திர வரலாறுகளையும் தாங்கள் எவ்வழி வந்தோமென்கிற விளக்கங்களையும் குறித்த ஆவணங்களைக் கவனத்துடன் பாதுகாத்து வந்தனர். ஆனால் அவைகளில் பல, அவர்களின் சிறையிருப்பின் காலத்தில் அழிந்தும், தொலைந்தும் போய்விட்டன. ஆகையால் சில ஆசாரியர்கள் தங்கள் கோத்திரங்களை நிரூபிக்க முயன்று முடியாமல் போயினர்.

வசனம் 2:63

ஊரீம், தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

ஆசாரியர்களில் சிலர் தங்கள் கோத்திரங்களை நிரூபிக்க முடியாதபோது தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று அவர்களின் அதிபதிகளால் விலக்கப்பட்டனர். அவர்கள் தங்களை ஆசாரியப் பணிக்கு உரியவர்களாகத் தங்களை, ஊரீம், தும்மீம் என்பவைகளினால் நரூபித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஊரீம், தும்மீம் எனப்படுவது ஓர் ஆசாரியன் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கற்களாகும். தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்ப்பட அவைகள் உதவியாக இருந்தன (யாத்.28:10).

வசனம் 2:64-67

சபையாh எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து, அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

எருசலேமுக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை சபையார் எல்லாரும் ஏகத்திற்கு 42,360 பேராய் இருந்தார்கள் எனப்படுவது அதன் முடிவல்ல. வேறு பலரும் இருந்தனர். அவர்களுடன் பாடகர்களான ஆண்களும், பெண்களுமாக இருநூறு பேரும், மற்றும் 7337 பேரான வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருந்தனர். அது தவிர 736 குதிரைகளும், 245 கோவேறுக் கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6720 கழுதைகளும் அவர்களிடம் இருந்தன. அத்தனைப் பெரியக் கூட்டத்தினருக்குப் பொதிகளைச் சுமந்துச் செல்ல இவைகள் மிகச் சொற்பமே. 6 பேருக்கும் அவர்களுடைய சுமைகளுக்கும் ஒரு விலங்கு வீதம் இருந்தன. மற்ற விலங்குகளை விடக் கழுதைகள் அதிகமான இருந்தன... ஏனென்றால் ஓர் ஏழைக் குடம்பம் கூடத் தனது பணிக்காகக் கழுதைகளை வைத்திருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் பவனி வந்தபோது கழுதைக் குட்டியாகிய மறியின்மீது ஏறிக் கொண்டு வந்த வேத வாக்கியங்களை நிறைவேறச் செய்தார் (மத்.21:5, சக.9:9). இந்த நீண்ட பயணத்திற்கு ஒட்டகங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்திருக்கும். ஏனெனில் சுமாராக 900 மைல்கள் பாலைவனத்தின் வழியாக அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மேலும் ஓர் ஒட்டகம் சுமாராக 200 ராத்தல் எடையுள்ள மூட்டை முடிச்சுக்களையும் சவாரி செய்யும் ஆளையும் சுமந்துகொண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 28 மைல்கள் செய்ல முடியும். ஆனால் அவர்கள் பயணம் அத்தனை வேகமாக இருக்க முடியாதபடி சிறுவர்களும், பெண்களும் அதிகமாக உடனிருந்தனர்.

அவர்கள் தாங்கள் அறிந்திருந்த வாழ்க்கையை விடுவித்து நெடுந்தொலை பயணம் புறப்படுகின்றனர். அவர்கள் சேர வேண்டிய நகரம் படையெடுப்புகளால் அழிந்துச் சிதைந்து விட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். பல சமயங்களில் பலர் தங்கள் தாய் நாட்டைவிட்டு வேற்று நாடுகளுக்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும் பொழுது தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்நோக்கிச் செல்லுகின்றனர். ஆனால் எருசலேமுக்குச் செல்லும் இவர்கள் கடின உழைப்பை எதிர்நோக்கிச் செல்லுகின்றனர். ஆனால் அவர்கள் மனமகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் தங்கள் பயணத்தின்போது எருசலேமின் பழைய வரலாறுகளை எண்ணிப் பார்த்திருப்பர். 2.இராஜாக்கள் 25 ஆம் அதிகாரத்தில் எருசலேமுக்கு ஏற்பட்ட அவல நிலைகளை நாம் வாசிக்கிறோம். நேபுகாத்நேச்சார் இராஜாவின் சேனைகள் எருசலேமுக்குள் புகுந்து, தேவனுடைய ஆலயத்தை அக்கினிக்கு இரையாக்கிற்று. ஆலயத்தில் இருந்த வெண்கல பணிமுட்டுகளை உடைத்து, மற்ற பொன் வெள்ளி பணிமுட்டுகளையும், பாத்திரங்களையும் பாபிலோனுக்கு எடுத்துச் சென்றனர். இராஜாவின் அரண்மனைக் கட்டடங்களும் மற்ற பெரிய கட்டடங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் எருசலேம் நகரின் அலங்கங்கள் யாவும் இடித்துக் தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்த வரலாறு முழுவதும் இவர்களுக்கத் தெரியும். இத்தகைய அவல நிலையில் இருந்த எருசலேமுக்கு அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை உனது வாழ்க்கையில் கர்த்தருக்கு விரோதமாக இத்தகைய பல வீழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கலாம். கர்த்தர் உன்னை அழைக்கிறார். ஒரு வேளை உனது பிரார்த்தனை திட்டங்கள் உனது சுகவீனமும், அறிவீனமும் தடுக்கிறதா? உனது குடும்ப வாழ்க்கை சீரமைப்புப் பெற வேண்டியுள்ளதா? நீ முழுமனதுடன் உனது செயலை ஆரம்பிக்க வேண்டும். சில செயலாக்கங்களை நீ விட்டொழிக்க வேண்டி வரலாம். பொதுவாக நம்மைப் பிரார்த்தனை திட்டங்களில் இருந்து தடுப்பவை உலகப் பிரகாரமாக நல்லவைகளாகவும், தேவையானவைகளாகவும் தோன்றலாம். அவைகளுக்கு அதிக நேரம் நாம் ஒதுக்குவதனால் தான் நமது அன்றாட வாழ்வில் தேவனுக்குரிய காரியங்களைப் புறக்கணிக்க நேரிடுகிறது. நீ உனது வாழ்க்கையை ஆராய்ந்து பார். வழிநடத்துதலுக்காக தேவனிடத்தில் மன்றாடு.

எருசலேமின் இழிந்த சிதைவுகளை அவர்கள் காண்கின்றனர். தேவாலயத்தின் சிதைந்த நிலை அவர்களின் சில தலைவர்களின் மனதைத் தொடுகிறது. அதன் விளைவாக அவர்கள் தங்கள் தங்கள் பொருள்களையும், தளவாடங்களையும் திருப்பணிக்காக ஒப்படைக்கின்றனர். நமது இருதயம் தொடப்படும்பொழுது நாம் கொடுக்க முன் வருகிறோம். தாவீது இராஜாவின் நாள்களிலே, ஜனங்கள் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். சந்தோஷப்பட்டார்கள்.... உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள் (1.நாளா.29:9). இத்தகையக் கொடுத்தலைப்பற்றி பவுல் அப்போஸ்தலனும் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்து, தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் என்று கூறி உள்ளார் (2.கொரி.8:2). இதை வாசிக்கும் நீ கர்த்தருக்குக் கொடுக்கும் விஷயத்தில் எவ்வாறு இருக்கிறாய் என்று எண்ணிப்பார்.

வசனம் 2:68-70

வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாகத் திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

அவர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்பக் கொடுத்தார்கள். ஒவ்வொருவரிடமும் வெவ்வோறு அளவிலான பொன்னும், வெள்ளியும், ஆசாரிய வஸ்திரங்களுமிருந்தன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் திராணிக்குத் தக்கதாக கொடுத்தார்கள் (அப்.11:29). நாம் கொடுப்பதுகூட மற்றவர்களின் செல்வ நிலையைப் பொறுத்துக் கணிக்கப்படுவதில்லை. அவரவரின் திராணிக்குத் தக்கதாகக் கொடுக்க வேண்டும்.

இந்த அதிகாரம் முடியும் தருவாயில் எருசலேமுக்கு வந்த ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள் எனக் காண்கிறோம்.

எஸ்றா 3 விளக்கவுரை

எஸ்றா 3

(4) இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர
இரண்டாவது அதிகாரம் கூறும் நிகழ்ச்சிகள் முடிந்தும் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கும்இடையே இருந்த காலம் சற்று அதிகமாகும். இப்போது ஆண்டின் ஏழாவது மாதமாய் இருந்தது. இஸ்ரவேலர், தங்களது முதற்பணி தேவனுடைய ஆலயத்தைக் கட்ட என்பது தேவனைத் தொழுகிற இடமாகும். மோசேயின் கட்டளைகளின்படி ஸ்தோத்திர பலிகளும், மற்ற பலிகளும் செய்யப்படவேண்டிய இடமும் அதுவே (உபா, 12:5-6) நமது வாழ்க்கையின் எல்லாக் கட்டமைப்புகளும் தேவனுடைய பிரகாரங்களினண்டையில் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். ஆபிரகாமின் வாழ்க்கையில் இத்தகையதோர் முன்மாதிரியை நாம் காணமுடிகிறது. அவன் தான் செ
ன்ற இடங்களிலெல்லாம், எகிப்து தவிர, ஒரு பலிபீடத்தைக் கர்த்தருக்கென்று கட்டினான் (ஆதி.12:8, 13:4, 18:26).

வசனம் 3:1

இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.

வசனம் ஒன்றில் அவர்கள் எல்லாரும் ஏகோபித்துக் கூடினார்கள் என்று வாசிக்கிறோம். அவர்கள் எருசலேமில் ஒன்று கூடினார்கள். தங்கள் சொந்த வீடுகளையும், வேலைகளையும், தோட்டங்களையும் விட்டு தேவனுக்கென்று பலிபீடத்தைக்கட்ட எருசலேமிலே கூடினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் எது மிக முக்கியமானதென்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் வாழ்க்கைகளில் தேவனுக்கென்று ஒரு பலிவீடத்தைக் கட்டுவதை மிக முக்கியமாகக் கருதினார்கள். அதனை அவர்கள் ஒன்று சேர்ந்தே செய்தார்கள். இது நமக்கு ஒரு முன்னோடி படிப்பினையாகும். நாம் நமது வாழ்க்கையில் முதலில் செய்ய வேண்டியவைகளை முதலில் செய்கிறோமா? நமது எண்ண அலைகளில் தேவனைப்பற்றியதும், தொழுகைக்குரியதுமான காரியங்களுக்கு முதலிடம் அளிக்கிறோமா? இத்தகைய தெய்வ வழிபாடுகளிலும், தொழுகைகளிலும் நாம் ஒன்று சேர்ந்து செயல்படுகிறோமா? சங்கீதம் 133ல் நாம் ஒன்று சேரும் பொழுது கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார் என்று வாசிக்pகறோம். சீஷர்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் இருந்தபொழுது இத்தகைய ஆசீர்வாதத்தைப் பெற்றனர். அது உண்மையில் ஒரு சிறந்து ஆசீர்வாதமே. அத்தகைய நிலையில் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்துடன் கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டபோது ஏறக்குறைய 3000 பேர் இரட்சிக்கப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 2:41).

வசனம் 3:2


அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

இங்கே இஸ்ரவேலர் தங்கள் தலைவர்களின் மூலமாக வேலைகளை ஆரம்பித்ததைக் காண்கிறோம். யெசுவாவும், அவன் சகோதரனாகிய ஆசாரியரும், செருபாபேலுடனும் அவன் சகோதரருடனும் சேர்ந்து செயல்ப்பட்டனர். இந்தத்தலைவர்கள் முன்னின்று பணியாற்றினர். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி பணி செய்தனர். தங்கள் சொந்தக்கருத்துக்களை அதில் இணைக்காமல் மோசேயின் கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படிந்துச் செய்தனர். மோசே தேவனுடைய மனிதன் எனப்பட்டது மிக உன்னதமானதொரு பட்டமாகும் கர்த்தர் மோசேயை அழைத்துத் தமக்கு ஒரு வாசஸ்தலத்தைக் கட்டும்படி சொன்னபோது, மலையிலே உனக்கு காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு என்று உரைத்தார் (யாத்.25:40, எபி.8:5). மோசேயும் அவ்வாறே செய்தான்.

வசனம் 3:3

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

இஸ்ரவேலர்களுக்கு இதுபோலச் செய்வது மிக எளிதாக இருக்கவில்லை. தங்களைச் சுற்றிலும் இருந்த அந்நாட்டு மக்களுக்கு அவர்கள் மிகவும் பயந்தார்கள் என்றபோதிலும் அவர்கள் தேவனுக்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். நாம் நமது வீடுகளில், நம்மைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்குப் பயந்து நமது தொழுகைகளைத் தவிர்த்துவிடுகிறோமா? இங்கு இஸ்ரவேலர் மற்ற யாவர் முன்னிலையிலும் அந்தப் பலிபீடங்களைக்கட்ட வேண்டியிருந்தது. கட்டி முடிந்தபின் அவைபளைப் பயன்படுத்த வேண்டியும் இருந்தது. தொழுகையின் இடத்தைக் கட்ட வேண்டியது மிக அவசியமாகும். ஆனால் அவற்றைப் பயன்படுத்தித் தொழ வேண்டியது அதனிலும் மிக முக்கியமானதாகும். இஸ்ரவேலர் தாங்கள் கட்டின பலிபீடங்களின்மேல் தங்கள் பலிகளை ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் செலுத்தினார்கள். அதனை அங்கு சூழ இருந்த புறமதஸ்தரின் கண்களின் எதிரிலே செய்தார்கள்.

வசனம் 3:4

எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமித்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்.

பின்னர் அவர்கள் கூடாரப் பண்டிகைகளைக் கொண்டாடினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டுச் சொன்னபடி ஆசரித்த பண்டிகையாகுமிது (லேவி, 23:34). அதன்படி நிலத்தின் பலனைச் சேர்த்துவைத்து ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்ச ஓலைகளையும் கொண்டுவந்து கூடாரம் அமைத்து, ஏழு நாள்களுக்கு இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து மீட்டு வந்து 40 ஆண்டு காலம் வனாந்தரங்களில் கூடாரங்களில் வாழ்ந்ததை நினைத்து தேவனைத் துதிக்கவே இப்பண்டிகை (லேவி.23:39-44, நெகே 8:13-18) கொண்டாடப்பட்டது.

இங்கு கர்த்தருக்குப்ப பலிகள் ஒவ்வொரு நாளும், காலை மாலையும் தொடர்ந்தேர்ச்சியாக, செலுத்தப்பட்டது என்பதனை வேதத்தில் வாசிக்கிறோம். தேவன் நாம் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். நாம் தினமும் தேவனுடைய தொழுகை இடங்களில் சேர்ந்து தேவனைத் தொழ வேண்டும். நாள் முழுவதும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று உணர வேண்டும்.

வசனம் 3:5

அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.

அவர்கள் செலுத்தின பலிகளில் உற்சாகபலிகளும் இருந்தன. அவர்களிடத்தில் அதிகமான பொருள்கள் மிகுந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் உடமைகளை பாபிலோன் நாட்டிலேயே விட்டு வந்தனர். ஆனால் தேவனுடைய பலிபீடம் நிறைந்திருக்க வேண்டுமென்று அவர்கள் ஒவ்வொருவரும் உற்சாகமாய் கொடுத்தார்கள். தேவன் அவர்கள்மீது பிரியமாயிருந்திருப்பார். ஏனெனில், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (2கொரி.9:7).

வசனம் 3:6-7

ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத்தொடங்கினார்கள். ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை. அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.

இஸ்ரவேலர் தங்கள் பலிபீடத்தைக் கட்டி பலிகளைச் செலுத்த ஆரம்பித்தனர். அடுத்த ஆலயத்தைக் கட்ட அஸ்திபாரம் போடவேண்டிய வேலை துவக்கப்பட வேண்டும். இதற்குப்பல ஆண்டுகளுக்கு முன்பு சாலொமோன் இராஜா முதலாவது தேவாலயத்தைக் கட்டி முடித்திருந்தார். அது கற்களினாலும் கேதுரு மரங்களினாலும் கட்டப்பட்ட மிக அழகான ஆலயமாகும். அதன் உள்புறம் பொன் தகடுகள் வேய்ந்திருந்தது. உலகெங்கிலும் அதைப் போன்றதொரு அழகிய கட்டடம் இருந்ததில்லை (1.இராஜா.6). சாலொமோன் அதைக்கட்டி முடிக்க சில ஆயிரம் பணியாள்கள் அதில் வேலை செய்தனர். தீருவின் இராஜாவாகிய ஈராமின் பணியாள்களாகிய திறமைமிகுந்த தச்சர்கள் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டனர். ஈராம் தனது வேலையாள்களுக்கு கூலியாக கோதுமையும், ஒலிவ எண்ணெயும் கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டான் (1.இராஸா.5:6-11). ஈராமின் சொந்த வேரலக்காரரும் கல் தச்சர்களாக பணியாற்றினர் (1.இராஜா.5:17-18). சாலொமோனின் இந்த ஆலயப்பணி செய்து முடிக்கப்பட 7 ஆண்டுகள் ஆயின (1.இராஜா.6:38). ஆனால் இந்த இஸ்ரவேலர், எஸ்றாவின் காலத்தவர்கள். ஆலயத்தைக் கட்டுவதற்காக எந்தவித உதவியும் பெற முடியவில்லை. அவர்களுக்கு ஆள் பலமுமில்லை. பண பலமுமில்லை. ஆனால் இவர்கள் கூட ஆலயத் திருப்பணிக்குத் தேவையான கேதுரு மரங்களை லீபனோனிலிருந்து கொண்டு வர தீரு சீதோன் பட்டணங்களிலிருந்து ஆள்களை வேலைக்கு பயன்படுத்தினர். அவர்களுக்குக் கூலியாக உணவும், திராட்ரசமும, ஒலிவ எண்ணெயும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொல்லர்களுக்கும், தச்சர்களுக்கும் பணமாகக் கூலி கொடுக்கப்பட்டது.

வசனம் 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

இஸ்ரவேலர்களுக்கு இப்பணியில் ஓராண்டு காலம் கடந்தது. இரண்டாம் ஆண்டுத் துவக்கத்திலே செருபாபேலும், யெசுவாசும் இவ் வேலையை முன்னின்று நடத்தினர். சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த ஆசாரியரும், லேவியரும் இப்பணியில் கலங்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றினர். எல்லா வேலைகளும் சரிவர செய்யப்பட வேண்டுமென்று விரும்பினர். ஆகையால் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய வேலையை நடத்தும்படி வைத்தார்கள். சாதாரணமாக லேவியர்கள் இருபத்தைந்து வயதிற்து மேற்பட்டுத்தான் ஆலயப்பணியில் ஈடுபடவேண்டும் (எண்.8:24-26). தாவீது இராஜா இதே போன்ற வேலைக்கு அவர்களின் வயதை இருபதாகக் குறித்துக் கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (1.நாளா.23:24). அப்பொழுது வேலை மிகுதியாக இருந்ததினால் அவ்வாறு செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தாவீதின் காலத்தில் செய்யப்படவேண்டிய வேலை பெரியதாகவுமிருந்தது. இது சட்டத்திற்குட்டபட்ட மாற்றமேயாகும். தேவனுடைய வேலைகள் அனைத்தும் ஒழுங்கு முறைகளுடன் செய்யப்படல் வேண்டும். ஏனென்றால் தேவன் கலகத்திற்குத் தேவனாயிருக்கவில்லை (1.கொரி.14:33).

வசனம் 3:9

அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலின் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.

ஒன்பதாம் வசனம், ஓர் அழகிய விளக்கத்தைத் தருகிறது. தங்கள் பிள்ளைகளோடும், சகோதரர்களோடும், மற்றுமுள்ள லேவியரோடும் ஒருமனப்பட்டு நின்ற மூன்றுபேர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருமனப்பட்டு நின்றனர். இது மிகவும் சரியான முறையாகும். தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியது இவர்களது பணி. அவர்கள் அதைத்தான் செய்தார்கள். தங்கள் தங்கள் விருப்பப்படியல்லாமல் ஒருமனப்பட்டு பணியாற்றினார்கள். அத்ததைய ஒற்றுமைக்கு மனத்தாழ்மையும், சாந்தமும் அவசியம். அப்போதுதான் சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ள முடியும் (எபேசி.4:1-3). அது, அவ்வாறு தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அது தேவனுடைய திருப்பணி. நம்முடையதல்ல.

வசனம் 3:10

சிற்பாச்சாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்கள் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

பின்பு சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டார்கள். இது ஒரு சிறந்த நேரம். முதலாம் ஆலயம் இடிபாடுகளின் குவியலாக இருந்தது. அவைகளை அவர்கள் அகற்ற வேண்டியிருந்தது. புதிய திட்டங்களை வகுத்து சிறந்த தொழிலாளர்களையும் பொருள்களையும் சேகரித்துப் பணியை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இதுபோலவே நமது வாழ்க்கையும் இருக்க வேண்டும். நமது ஆன்மீக எழுச்சியிலே இடையூறாகயிருக்கும் சகல கழிவுகளையும் அகற்றி, நன்கு திட்டமிட்டு, பின்பு நமது முயற்சிகளைத் துவங்கவேண்டும். அவர்களது சிறையிருப்பின் காலத்தில் தங்களது சொந்த நாட்டையும், மக்களையும், தேவாலயத்தையும் எண்ணிப்பார்த்திருப்பர். ஆனால் இப்பொழுதோ தங்கள் சொந்த நாட்டிலே புதிய ஆலயத்திற்கான அஸ்திபாரங்கள் போடப்படுவதைத் தங்கள் கண்களின் எதிரிலே காணமுடிந்தது.

வசனம் 3:11

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் மாறிமாறிப் பாடினார்கள். கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

ஆசாரியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசாரிய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டார்கள் (எஸ்றா 2:69). அவர்கள் பூரிகைகளை ஊதினார்கள். தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள். அவர்கள் தாவீது இராஜா கர்த்தரின் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது செய்தது போல் வாத்தியங்கள் முழங்கவும், சந்தோஷம் உண்டாகவும், பாடவும் தங்கள் சத்தத்தை உயர்த்தினார்கள் (1.நாளா.15:16,24).

குறிப்பிட்ட நேரம் வந்தது. கர்த்தரைப்பாடித் துதித்து மகிமைப்படுத்தினார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியான நேரம். கர்த்தர் செய்த யாவற்றையும் அவர்கள் எண்ணிப்பார்த்தனர். அவைகள் மாபெரும் நன்மைகள் கர்த்தருடைய பெட்டியை தாவீது இராஜா எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்தில் கொடுத்த சங்கீதத்தின் ஒரு பகுதியாகவே இவர்களது பாடல்கள் அமைந்திருந்தன (1.நாளா. 16:7-34). இங்கே எளிமையும், சிறுமையுமான ஒரு சிறு கூட்டத்தாரைக் காண்கிறோம். அவர்களது பணியோ மிகப் பெரியதாகும். அவர்கள் செய்யவேண்டியது யாதென்று கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அது மிகப்பெரிய வேலை என்று அவர்கள் முறுமுறுக்கவில்லை. அவர்கள் அப்பணியை ஆரம்பித்தார்கள். நாமும் நமது வாழ்க்கையில் செய்ய வேண்டியது பணி எதுவாயிருந்தாலும் மகிழ்ச்சியுடன் அதனை செய்யவேண்டும்.

வசனம் 3:12-13

முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்களின் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள். வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள். ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால், அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது. ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.

ஆலயத் திருப்பணி ஆரம்பித்தபோது அவர்கள் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள். அவர்களில் பலர்: மிக வயது சென்றவர்களாயிருந்து சாலொமோன் இராஜாவின் கம்பீரமான ஆலயத்தைப் பார்த்தவர்கள் (1.இராஜா.6). அவர்கள் சாலொமோனின் ஆலயத்தை இச்சிறு அஸ்திபாரத்துடன் ஒப்பிட்டு, துயரப்பட்டு, மற்றவர்கள் மகிழ்சியால் ஆரவாரித்தபோது இவர்கள் மிகவும் துயரப்பட்டு அழுதார்கள். ஆனால் இவ்வழுகுரலும் மகிழ்சி ஆரவாரமும் ஒன்றிலிருந்தொன்று பிரிக்கப்பட முடியாமல் பெருந்தொனியாய் வெகு தூரம் வரையில் கேட்டது.

ஆகாய் தீர்க்கதரிசி இது குறித்து, இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக்காணி;கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா? என்றான் (ஆகாய் 2:3). ஆனால் ஆகாய் மேலும் கூறுகிறதாவது, தேசத்தின் எல்லா ஜனங்களே நீங்கள் திடன்கொள்ளுங்கள்...... என்று கர்த்தர் சொல்லுகிறார். வேலையை நடத்துங்கள். நான் உங்களுடனே இருக்கிறோன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.......பயப்படாதிருங்கள்.... (ஆகாய் 2:4-5).

உன்னுடைய வாழ்க்கையில் அல்லது உனது ஆலயத்தில் ஒருவேளை புதியதொரு வேலை ஆரம்பமாகி இருக்கலாம். அது மிகப்பெரியதாகவுமிருக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் ஓர் ஆரம்பம் உண்டு. உனது ஆரம்பம் மிகச் சிறியதாக ஒரு வேளை இருக்கலாம் நீ திடன் கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களுடனே இருக்கிறேன். வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவே நமக்கு மிகத் தேவையானதாகும்.

எஸ்றா 4 விளக்கவுரை

எஸ்றா 4

(5) ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
வசனம் 4:1-2

சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம். உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம். இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.


தேவனுடைய பணிகளைப் பொறுத்தமட்டில் ஒன்று மட்டும் நிச்சயம். பணி ஆரம்பிக்கும்போது நிச்சயமாக சத்துரு அங்கே வருவான். பிரதான சத்துரு யாரென்று வேதம் நமக்குக் கூறுகிறது. உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான் (1பேதுரு 5:8). ஆனால் சாத்தான் எப்போதும் சிங்கம் போல் மட்டும் காணப்படுவதில்லை. ஏவாளிடத்தில் அவன் ஒரு சர்ப்பமாக வந்தான் (ஆதி.3:1, வெளி 20:2). யோபுவைத் தாக்க அவன் கர்த்தருடைய சந்நிதியில் தேவ புத்திரரோடு வந்து நின்றான் (யோபு 1:6-12). பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறபடி, அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரி.1:14). படங்களில் காண்கிறபடி கொம்புகளுடனும் வாலுடனும் தோன்றினால் நாம் அவனை எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால் அதிகமான வேளைகளில் அவன் ஒரு நல்ல நண்பனைப்போல் காணப்படுகிறான். மத்தேயு நம்மை எச்சரித்துக் கூறுகிறதாவது, கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்.7:15).

முதலாம் வசனத்திலே யூதாவிற்கும் பென்னியமீனுக்கும் இருந்த சத்துருக்கள் என்று குறிப்பிடப்பட்ட சிலரைக் காண்கிறோம். ஆகையால் அவர்கள் சத்துருக்கள் என்று நாம் காண்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளுக்குச் சத்துருக்கள் எனப்பட்டவர்கள் சாத்தானைப் போன்றவர்களே. இந்தச் சத்துருக்கள் யார்? அவர்களைப்பற்றி இராஜாக்களின் புத்தகம் 17ம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம். ஓசெயா இராஜா இஸ்ரவேலின்மேல் இராஜாவாகி அரசாண்டபோது, இஸ்ரவேலர் கர்த்தருடைய வழிகளை விட்டு விலகிப் போனார்கள். கர்த்தர் அவர்கள்மேல் கோபமடைந்து, அவர்கள் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டுப் போக சித்தங் கொண்டு அவர்ளை அசீரியா இராஜாவின் கையில் ஒப்புக் கொடுத்தார். அவர்கள் சமாரியாவிற்குள் சிதறடிக்கப்பட்டார்கள். அசீரியா இராஜா தான் ஆண்ட வேறு சில புறஜாதி மக்களையும் சமாரியாவிலே குடியேற்றினான். அவர்கள் இஸ்ரவேல் தேவனுக்குப் பயப்படவில்லை. கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார். அவைகள் அவர்களில் சிலரைக் கொன்று போட்டது (2.இராஜா.17:24-25). அவர்கள் இதனைப் புரிந்துகொண்டு அசீரியா இராஜாவினிடத்தில் சென்று, இஸ்ரவேல் தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால் அவர்களைச் சிங்கங்கள் கொன்று போடுகின்றன என்று சொன்னார்கள். ஆகையால் அசீரியா இராஜா அங்கேயிருந்து கொண்டு வந்த ஆசாரியர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு போய், அவர்களுக்கு தேவனுடைய காரியங்களைப் போதிக்கக் கட்டளையிட்டான்.

அப்படியே ஆசாரியர்களில் ஒருவன் வந்து கர்த்தருக்குப் பயந்து நடக்க வேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். அவர்கள் அதைக் கேட்டுப் பணிந்தனர். எனினும் தொடர்ந்து தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டு பண்ணி சேவித்தும் வந்தார்கள். அவர்கள் கர்த்தராகிய தேவனைத் துதிப்பவர்களாகக் காணப்பட்ட போதிலும் தங்களின் விக்கிரகங்களையே உண்மையில் ஆராதித்து வந்தனர். இங்கே கர்த்தரின் சத்துருக்களை நாம் காண முடிகிறது.

இவர்கள்தான் யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள். சிறைப்படுத்தப்பட்டிருந்த யூதர்கள், திரும்பி எருசலேமுக்கு வந்து தேவனுடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கியுள்ளனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டனர். கர்த்தராகிய தேவனை மட்டுமே தொழ இந்த ஆலயம் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். தேவனையும், தங்களின் சொந்த விக்கிரகங்களையுமாகிய இரண்டையும் கலந்து தொழ இது பயன்படப் போவதில்லை என்று அறிந்த அவர்கள் செரூபாபேலிடத்திற்கும் தலைவரான பிதாக்களிடத்திற்கும் வந்து உங்களோடேகூட நாங்களும் சேர்ந்து கட்டுவோம் என்று கூறினார்கள். இது ஒரு நல்ல நட்பின் குரலாகத் தோன்றுகிறது. மேலும் அவர்கள் நாங்களும் உங்களைப்போல் உங்கள் தேவனை நாடுவோம். அவருக்குப் பலியிடுவோம் என்றும் கூறினார்கள். இது ஒருபடி மேலான அன்புக் குரலாகத்தான் தோன்றுகிறது. இங்கே கர்த்தராகிய தேவனை நாங்கள் வணங்குகிறோம் என்று சொல்லி ஆலயத்தைக் கட்டும் பணியில் சேர்ந்துகொள்ள முன் வந்த மக்களை நாம் காண்கிறோம். வியப்பே! மேலும் அவர்கள், அசீரியா இராஜாவினால் சமாரியாவிற்கு அனுப்பப்பட்ட நாள் முதலாய் இவ்வாறு செய்து வருவதாகக் கூறினார்கள். யூதர்களுக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. இவர்கள் யார் என்பதனை தெளிவாக விளங்கிக் கொண்டனர். தேவனை வணங்கிய அதே நேரத்தில் தாங்கள் வார்ப்பித்த விக்கிரகங்களையும் வணங்கி வந்தவர்கள் இவர்களே. யூதர்கள் உடனே ஒன்றாகச் சேர்ந்து, எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் இராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

வசனம் 4:3

அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

தங்களுக்குத் தேவையானது, பூரண உற்சாகமேயன்றி விக்கிரங்களை வணங்கும் ஒரு கும்பலின் உதவியல்ல என்பதை அவர்களின் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய உதவியை உதறித் தள்ளுவதென்பது ஒரு துணிவேயாகும். கிடைக்கக் கூடிய எல்லா உதவிகளையும் பெற்றுக்கொள்வது மிக எளிதானதாகவே காணப்படுகிறது. அதுவும் அவர்கள் தங்கள் நண்பர்கள் எனக் கூறும்போது? ஆலயத்தைப்பற்றிய செய்தி இவ்வாறெனில் நமது வாழ்வின் சாட்சிகளிலும் இவ்வாறே நடைபெறுகிறது. நண்பர்கள் என சிலர் தங்களைக் கூறிக் கொண்டு நமக்கு உதவி செய்யவும் முன்வருவார்கள். அவர்களை நாம் சேர்ந்துக் கொள்ளலாமா? தேவன் நம்மை நன்கு எச்சரித்துள்ளார். இரு எஜமான்களுக்கு வேலை செய்ய உங்களால் கூடாதே... ஒருவரை மட்டும் நாம் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.. கர்த்தரின் வழிகளைத் தெரிந்துக் கொள்ளாதோரின் கூட்டத்தில் நாம் சேர முடியாது. அப்படி சேர்ந்தால் தேவனுக்கடுத்த பணிகள் நடைபெறாது.

வசனம் 4:4

அதினாலே அந்தத் தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

அந்த இருமனமுள்ளவர்கள், உண்மையில் தாங்கள் யார் என்பதை சீக்கிரமே வெளிப்படுத்தி விட்டனர். அவர்களின் உதவிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு விட்டவுடனே அவர்கள் ஆலயப் பணியைத தடுக்கவும், அந்த யூதர்களைப் பயமுறுத்தி ஆலயப் பணியை நிறுத்தச் செய்யவும் முற்பட்டனர். ஒருவகை நண்பர்கள் அவர்களின் இழிவான உதவியைப் புறக்கணித்தது மிகவும் நியாயமே. ஆனால் அதன் விளைவாக ஆலயப்பணி மிகவும் தாமதப்படத்துவங்கியது. இன்றைய கர்த்தரின் பிள்ளைகளுக்குக்கூட இத்தகைய சிக்கல்களே ஏற்படுகின்றது. முழுமனதோடே கர்த்தரின் பணியைச் செய்ய முற்படுகிற அவர்களுக்குப் பல விதங்களிலும் இடையூறு ஏற்படுகிறது. சிலர் தங்கள் உயிரையும் இழக்க நேரிடுகிறது. ஏரோது பாவம் செய்த போது, யோவான் ஸ்நானனுடைய பரிசுத்தத் தன்மை, அதை அவனுக்கு உணர்த்திக் காட்டச் செய்தது. ஆனால் ஏரோது அவனைச் சிறையில் அடைத்தான். இந்தப் பரிசுத்த செயலுக்காக யோவான் சிரச்சேதம் பண்ணப்பட்டான் (மாற்கு 6:16-29). அதுமட்டுமல்ல. இதே ஏரோது யாக்கோபைப் பட்டயத்தினாலே வெட்டிக்கொலை செய்தான் (அப், 12:1-2).

வசனம் 4:5

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்களை யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள்.

அதனோடு பகைஞரின் காரியங்கள் முடிவுபெறவில்லை. தொடர்ந்து அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைகொடுத்தனர். யூதருக்கு விரோதமாய் அரசு ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலிக் கட்டினார்கள். யூதர்கள் மிகவும் துன்பப்படுத்தப்பட்டனர் கர்;ததருடைய ஆலயத்தின் கட்டுமானப் பணியில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட வேலை சட்டங்களுக்கு புறம்பானதன்று. புறமதஸ்தர்கள் தங்களின் தெங்வங்களை வணங்கிக் கொள்ள இப்பணி யாதொரு இடையூறும் உண்டாக்கவில்லை. அது தேவனுடைய மகிமைக்காக ஓர் ஆலயம் கட்டப்படும் வேலையாகும். ஆனால் சாத்தானும் தேவனுடைய சத்துருக்களும் அதைச் சகித்துக் கொள்ளக் கூடவில்லை. ஆகையால் அவர்கள் தங்கள் முழு பெலத்தையும் வைத்து அதை எதிர்க்க முற்பட்டனர். யூதர்கள் தங்களுக் வீடுகளைக்க கட்டிக்கொண்டபோது அவர்களை யாரும் தடுக்கவில்லை. ஓர் எதிர்ப்பு வார்த்தை கூட வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் தேவனுக்கென்று ஒரு பணியைச் செய்ய துவங்கியபோதுதான் இந்தத் தொல்லை ஆரம்பமானது. அந்தத் திருப்பணியைத் தடுக்க, அந்தப் பகைஞர்கள் தங்களால் ஆனதனைத்தையும் செய்ய முற்பட்டு, ஆண்டு கணக்கில் தொல்லைகொடுத்தனர். கோரேஸ் இராஜா மரித்தபின்பு தரியு இராஜா ஆண்ட கால மட்டும் தொல்லை கொடுத்து அதன்பின் அகாஸ்வேரு இராஜாவின் காலமட்டும் இத்தகைய தொல்லைகள் நீடித்தன. நாம் நமது பணிகளிலே ஓருவேளை சோர்வடைந்து போகலாம். ஆனால் நமது ஆத்மீக எதிரிகளோ ஒருக்காலும் சோர்ந்து போவதில்லை. தொல்லைகள் மட்டும் நீடித்தனவேயொழிய தேவனுடைய வேலைகள் நிற்கவில்லை. ஆனால் சிறிய பின்னடைவு ஏற்பட்டது மட்டும் உண்மைதான். சாத்தானின் மிகச் சிறந்தது தந்திரம், யாரையும், யாதொன்று குறித்தும் சோர்வடையச் செய்வதே எனலாம். செய்யத் துவங்குகிற எந்த ஒரு நல்ல வேலையும், மிகப் பெரிதாகவும், மிகக் கடினமானதாகவும், காலமும், பணமும் விரயம்செய்யப்படக் கூடியதொன்றாகவும், காணும்படி அவன் செய்வான். அதனால் சோர்வடைந்து அந்த வேலையை நாம் கைவிட்டுவிடும்படி நம்மைத் தூண்டுவதோடன்றி அம்மாதிரி நாம் கைவிட்டு விட்டது ஒரு நல்ல காரணத்தினால் தான் என்று எண்ணும்படியும் அவன் செய்வான்.

வசனம் 4:6-11

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள். அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியாவின் ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள். அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது. ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்: ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும், பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்ணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே. அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

அத்தகைய தெய்வீகப்பணியின் பகைஞர்கள் அதோடு விடவில்லை. அந்தத் திருப்பணி முற்றிலும் நிறுத்தப்படவேண்டுமென விரும்பினர். செயல்படவும் துணிந்தனர். அகாஸ்வேரு இராஜா அரசாளுகிறபோது யூதாவிலும் எருசலோமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து எழுதினார்கள். அதில் யாது எழுதப்பட்டிருந்தது என்று சரியாக தெரியவில்லை. எனினும் அகாஸ்வேரு இராஜா அதை முற்றிலும் புறக்கணித்துப் போட்டான். அதனால் அந்தப்பகைஞர்கள் மனமுடிவு அடையவில்லை. அடுத்துவரும் இராஜாவின் ஆட்சியின் காலத்தில் செயல்படக்காத்திருந்தனர். அடுத்து அர்தசஷ்டா, இராஜா அரசாளத் துவங்கியபோது அவனுக்கு முன்பு எழுதப்பட்டது போன்று மனு எழுதி அனுப்ப்பட்டது. அதை எழுதிய மற்றும் பலருமாக சமாரியாவிலே குடியேறப்பண்ணப்பட்ட ஜனங்கள் யாவரும் அந்த மனுவில் கையொப்பமிட்டார்கள். தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதனால் உண்மையில் இவர்கள் யாவருக்கும் எந்த விதமான துன்பம் ஏற்படப்போவதில்லை. அவர்களில் பலர் ஆலயம் கட்டப்படும் இடத்தின் அருகாமையில் வசிப்பவர்களும் அல்லர். ஆனால் கர்த்தருடைய பணி என்றபொழுது விரோதிகளின் செயல் அவ்வாறுதான் இருக்கும் என்று வேதம் நமக்குக் கூறுகிறது. கர்த்தருக்கு விரோதமாக பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி........ என்று வாசிக்கிறோம் (சங்.2:2). சமாரியாவின் பட்டணத்திலே குடியேறப்பண்ணின ஜனங்கள் நாங்கள் என்று அதில் ஒப்பமிட்டவர்கள் எழுதியுள்ளவர். அங்கே அவர்கள் பல ஆண்டுகாலம் வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் அர்த்சஷ்டா இராஜாவுக்கு அந்த மனுவை எழுதி அனுப்பினார்கள்.

வசனம் 4:12

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக் கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

அந்தக்கடிதத்தின் ஆரம்பத்தில், அந்த யூதர்கள் யார் என்பதனை முதலில் கூறி, அக்கடிதத்தைத் துவக்கியுள்ளனர். அவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்தவர்கள் என்று எழுதியிருந்தனர். அடுத்து ஒரு பெரிய பொய்யை எழுதியுள்ளனர். கலகமும் பொல்லாப்புமான அந்தப்பட்டிணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழும்பிக்கட்டுகிறார்கள் என்று எழுதினார்கள். இது சற்றும் உண்மையானதல்ல. மதில்கள் இடிக்கப்பட்டுப்போய் இன்னும் கட்டப்படவில்லை. அதற்காக எந்த அஸ்திபாரமும் போடப்படவில்லை. செய்யப்பட்டதெல்லாம் தேவாலயத்திற்குப் போடப்பட்ட அஸ்திபாரத்தின் பணியேயாகும். ஆனால் அவர்களின் குற்றஞ்சாட்டுதல் உறுதிப்படும்படியாக, கலகமும், பொல்லாப்புமான எருசலேம் பட்டணத்தின் அஸ்திபாரங்களை எழுப்பிக் கட்டிக்கொண்டிருந்ததாக, யூதர்மேல் பொய்ப் புரளிகிளப்பினர்.

வசனம் 4:13

இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவாகள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள். அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.

அந்தப் பொய்மனுவிலே தந்திரமாக வேறொரு செய்தியையும் எழுதியிருந்தார்கள். அது கட்டப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும், ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள், என்று எழுதினார்கள். இராஜாவின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்ற எழுதப்பட்டதால், இராஜாவினால் உடனே கவனிக்கப்பட வேண்டியிருக்கும். பணம் பத்தும் செய்யும் அன்றோ?

வசனம் 4:14

இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம். ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

அவர்கள் இராஜாவின் உப்பைத் தின்கிறபடியால் இராஜாவிற்கு எந்த குறையும் வருவதையும் சகித்துக்கொள்ளோம், என்றும் எழுதினார்கள். ஆகையால், அந்தக் கடிதத்தை தங்களின் நடவடிக்கைக்காக எழுதுகிறோம் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டு எழுதினார்கள். ஆம்! எவ்வளவு காரசாரமாக மன்னருக்கு உணர்த்தப்பட்டுள்ளது! தங்களுக்கு மட்டுமல்ல இராஜாவின் நன்மையைக்கருதியே அவர்கள் செயல்படுவதுபோல் அக்கடிதம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழை, எளியவர்களான யூதர்கள், ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடத்துவக்கிய போது எவ்வளவுபெரிய பழிபாவங்களை அவர்கள்மேல் சுமத்த முயற்சிக்கிறார்கள்.

வசனம் 4:15

உம்முடைய பிதாக்களின் நடபடி புஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும். அப்பொழுது இந்தப் பட்டணமும் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புஸ்தகங்களில் கண்டறியலாம்.

அடுத்து அவர்கள் அந்தக் கடிதத்தில், நடபடிபுத்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்திரவாக வேண்டும் என்கின்றனர். அப்போது அந்தப்பட்டணம், எருசலேமும்------ கலகமும், இராஜாக்களுக்கும், சீமைகளுக்கம் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என அறிய முடியும் என்று எழுதுகின்றனர். அதுமட்டுமன்றி, அப்பட்டணம் பூர்வ காலமுதல் கலகம் நிறைந்ததொன்றாக இருந்தபடியினால்தான் பாழ்க்கடிக்கப்பட்டது என்று அந்த நடபடிகளின் புத்தகத்தில் இராஜா அறியமுடியும் என்று எழுதியிருந்தனர்.

வசனம் 4:16

ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

அடுத்து அவர்கள் மேலும் எழுதியது 1. அந்தப்பட்டணம் கட்டப்பட்டால் 2. அதன் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டு தீர்ந்தால், அப்பகுதியில் இராஜாவுக்கு ஒன்றும் உரித்தாய் இராதே போகும் என்றும் எழுதி உணர்த்தியிருந்தார்கள். இவைகள் அனைத்திலும் தேவனுடைய ஆலயம்பற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டு எழுதவில்லை. ஆனால் அவர்களின் உண்மையான கோபம், அந்த ஆலயம் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் அவர்களின் கடிதத்தில் அந்த ஆலயம்பற்றிய செய்தி ஒன்றையும் எழுதவேயில்லை. அலங்கங்கள் எழுப்பப்படுகின்றன. நகரம் கட்டத்துவங்கியுள்ளனர். அதனால் தீர்வையும், ஆயமும் நிறுத்தப்பட்டு இராஜாவின் வருமானம் நிறுத்தப்பட்டுவிடும். அந்த எருசலேம் நகரம் கலகம் நிறைந்தது. நாட்டின் பகுதியை இராஜா இழக்க வேண்டிவரும்...என்றெல்லாம் எழுதியவர்கள் ஆலயத்தினைப்பற்றி மட்டும், உண்மையைப்பற்றிமட்டும் யாதொன்றும் எழுதவில்லை.

வசனம் 4:17-20

அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம், நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும், எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், பகுதியும் தீர்வையையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

அந்தக்கடிதம் இராஜாவின் சமூகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. அர்த்தசஷ்டா இராஜாவின் உடனடி கவனத்தைக் கவர்ந்தது. அவன், நடபடிகளின் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசிக்கக் கட்டளையிட்டான். அவ்வாறே வாசிக்கப்பட்டு யூதர்கள் இராக்களுக்கு விரோதமாக கலகம் செய்த வரலாறுகள் விளக்கப்பட்டன. எருசலேமிலே வலிமை மிக்க இராஜாக்கள் பரிபாலனம் செய்து, அவர்கள் வேறு நாடுகளை வென்று ஆட்சி செய்த வரலாறுகளும், மற்ற நாட்டினரிடமிருந்து அவர்கள் ஆயமும் தீர்வையும் வசூலித்த வரலாறுகளும் வாசிக்கப்பட்டன. ஆனால், நகரம் கட்டப்படுகிறதா அல்லது, அலங்கங்கள் மறுபடியுமாய் எழுப்பப்படுகின்றனவா என்பது போன்ற செய்திகளின் பின்னணிகளைப்பற்றி ஆராய இராஜா சிரமம் கொள்ளவில்லை. முதலில் வாசித்த சில உண்மைகளின் அடிப்படையில் இத்தகைய செய்திகளும் உண்மையாக இருக்கக்கூடும் என்று அவன் எண்ணி செயல்படத் துணிந்தான்.

வசனம் 4:21-22

இப்பொழுது நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்ணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள். இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இராஜாவின் முத்திரையிடப்பட்டது. நம்மிடத்திலிருந்து மறு உத்தரவு பிறக்கும் வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்தி விடுங்கள், என்று உத்தரவு இட்டு அனுப்பினான். மேலும் அதில், இதில் நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். இராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன? என்றும் எழுதியிருந்தான். இந்த அரசாணையிலும், தேவனுடைய ஆலயத்தைப்பற்றி யாதொன்றும் எழுதப்படவில்லை. யூதர்கள் நகரத்தைக் கட்டுவதைத் தடை செய்துதான் ஆணைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் யூதர்கள் உண்மையில் எருசலேம் நகரத்தைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை. அது அந்த சமாரியா நாட்டாருக்கு ஒரு காரணமாகவிருக்கவில்லை. அந்த அரசாணை பெறப்பட்டவுடன் அந்தச் சமாரியத் தலைவர்கள் எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றனர். யூதர்களைக் கடுமையாய் எச்சரித்து ஆலயப் பணியின் வேலைகளை நிறுத்தச் செய்தனர்.

வசனம் 4:23

ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கும் முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

அந்த விரோதிகள் ஆலயப் பணியைப் பற்றித் தங்கள் கடிதத்தில் யாதொன்றும் எழுதவில்லை. அர்த்தசஷ்டா இராஜாவும் தனது பணி நிறுத்த ஆணையில் தேவாலயத்தைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்தப் பகைஞரோ தங்களின் சேனைகளின் வல்லமைகளைப் பயன்படுத்தி யூதர்கள் செய்து வந்த ஆலயப் பணியை நிறுத்தும்படிச் செய்தனர்.

வசனம் 4:24

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

யூதர்களுக்கு இது மிகவும் மனமடிவை உண்டாக்கியிருக்கக்கூடும். அவர்கள், கோரேஸ் இராஜாவினால் அனுப்பப்பட்டு தேவாலயத்திருப்பணியைத் துவக்கினர். சந்தோஷத்தோடே கோரேஸ் இராஜாவின் உத்தரவுக்குப்பணிய முன்வந்தனர். தங்களுக்குண்டான யாவற்றையும் விட்டு பாபிலோனிலிருந்து புறப்பட்டு எருசலேமுக்கு வந்தனர். தங்களிடத்தில் இருந்த கொஞ்சம் பொருள்களை எடுத்துக்கொண்டு நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டனர். ஒரு பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தினர். ஆசாரியப் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுத்தனர். எருசலேமில் தங்களுக்கென குடியிருப்பைக் கட்டிக் கொண்டனர். கடைசியாக தேவாலயத்திருப்பணியைத் துவங்கச் செய்தனர். ஆனால் அவர்கள் விரோதிகள், பொறாமைகொண்டு, பொய்யுரைத்து, அரசாணையை உண்டாக்கி, அத்திருப்பணியை நிறுத்தச் செய்தனர்.

ஒரு வேளை அவர்கள் அப்பணியை தொடர்ந்து செய்திருந்தால் இக்கேள்விக்கு இந்தச் சூழ்நிலையில் விடையளிப்பது மிகவும் கூடாததொன்றாகும். அதிகாரங்களுக்குக் கீழ்படிய வேண்டுமென்று வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது (ரோமர் 13:1). ஒருவேளை வேதப் பிரமாணங்களுக்குப் புறம்பானதொரு காரியத்தை நாம் செய்யத் தூண்டப்பட்டால், நாம் சம்மதிக்க வேண்டுமோ? கர்த்தர்தாமே அவர்களுக்குப் பதில் அளிப்பார்.

எஸ்றா 5 விளக்கவுரை

எஸ்றா 5

(6) ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம
வசனம் 5:1

அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

சில ஆண்டுகள்வரை ஆலயத் திருப்பணி நிறுத்தப்பட்டிருந்தது. யூதாவிலும் எருசலேமிலும் இருந்த யூதர்களுடன் பேசி, தமது பிள்ளைகளான ஆகாய் தீர்க்கதரிசியையும், சகரியா தீர்க்க தரிசியையும் தேவன் தெரிந்துக் கொண்டார். அவர்கள் தேவனுடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதுதான் தேவனுடைய வழி. தேவனுக்கடுத்த எல்லாக் காரியங்களும் கர்த்தருடைய வார்த்தைகளை முன்வைத்துத்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவன், இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப் பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ....? என்றுரைத்தான். இது ஒரு நல்ல கேள்வி. யூதர்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கட்டி முடிக்க ஏராளமான செல்வத்தையும் நேரத்தையும் செலவழித்துள்ளனர். ஆனால் தேவனுடைய ஆலயமோ சுவர்கள் எழுப்பப்படாமல், கூரைகள் ஒன்றும் பாவப்படாமல் அஸ்திபாரத்தோடே நின்றுவிட்டிருக்கிறது.


நாம் நமது சொந்தக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து தேவனுடைய காரியங்களைப் புறக்கணிக்கிறோமா? இதைத்தான் ஆகாய், தீர்க்கதரிசனமாய் உரைத்து உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை.... உடுத்தியும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்... என்று கூறுகிறான் (ஆகாய் 1:4-8). பின்னும் கர்த்ருடைய வார்த்தை ஆகாய்க்கு உண்டாகி அவன், உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பரிபூரணமடையவில்லை. நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய் மரங்களை வெட்டிக்கொண்டுவந்து ஆலயத்தைகட்டுங்கள். அதின் பேரில் நான் பிரியமாய் இருப்பேன். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்றான். தேவனுக்குரிய காரியங்களுக்கு நாம் முதலிடம் தராததினால் இந்த இழிநிலை நமக்கு ஏற்படுகிறது. இதைக்குறித்து, கர்த்தராகிய இயேசு கூறுகிறதாவது, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும் என்பதே (மத்.6:31-33). இந்த வேதத்தின் விதியை நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். முதலாவது தேவனுக்கடுத்த காரியங்களைச் செய்தால், மற்றவைகள் யாவும் நமக்கு நிறைவேறும்.

இது குறித்துத்தான் சகரியாவும், செருபாபேலின் கைககள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது. அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்....... என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். இங்கே கர்த்தரின் ஆறுதலான வார்த்தைகளை நாம் கேட்கிறோம். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே ஆகாயும், சகரியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இங்கு தேவனுடைய வார்த்தைக்கு மறுபடியும் மனப்பூர்வமாய் செருபாபேலும், யெசுவாவும் கீழ்ப்படிந்ததை நாம் காண்கிறோம். தேவனுடைய ஆலயத்தைக்கட்டும் பணியை அவர்கள் மீண்டும் தொடங்கினார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவர்களுடனேகூட இருந்தார்கள்.

வசனம் 5:2

அப்பொழுது செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள். அவர்களுக்குத் திடன் சொல்லத் தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

இங்கு ஒரு நல்ல உதாரணத்தை நாம் காணமுடிகிறது. இந்தத் தீர்க்கதரிசிகள் போதித்துக்கொண்டு எழுதிக்கொண்டு மாத்திரம் இருக்கவில்லை. மற்றவர்களுடன் சேர்ந்து பணிசெய்தார்கள் என நாம் வாசிக்கிறோம். வெளியில் நின்றுக்கொண்டு ஆலோசனைகள் கூறுவதாக மட்டும் இவர்கள் நிற்கவில்லை. கருவிகளை எடுத்துப்பிடித்து பணியில் நேரடியாக ஈடுபட்டனர். பவுல் அப்போஸ்தலனிடத்திலும் இத்தகையதோர் அரியபண்பினை நாம் காணமுடிகிறது. ஒரு முறை பவுல், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் என்கிற கூடாரம்பண்ணுகிற தொழிலாளர்களாகிய ஒரு யூத குடும்பத்தில் தங்கியிருந்தார். பவுல் ஒரு கூடாரத்தொழில் செய்கிறவனானபடியால் அவர்களுடன் அந்த வேலையைச் செய்து வந்தான் என்று வேதம் கூறுகிறது (அப்.18:3). பிறகு பவுல் தனது நிருபங்களிலே, எங்கள் கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம் என்று கூறுகிறான் (1.கொரி.4:12). மறுபடியுமாக ஆரம்பித்து, தேவனுடைய ஆலயத்தைக்கட்டும் பணியைச் செய்யும் தலைவர்களுடன் ஆகாயும், தீர்க்கதரிசியான சகரியாவும் சேர்ந்துக்கொண்டனர். இந்த வசனத்தின் கடைசிப்பகுதியிலே அனைத்துப் பணிக்கும் காரண கர்த்தாவாக இருப்பவர் யார் என நாம் நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது. கர்த்தராகிய தேவனுடைய தீர்க்கதரிசிகள், எனக் கூறும்போது, அனைத்துக்காரியங்களிலும் அவருடைய பிள்ளைகளுக்கும் துணைசெய்கிறவராய் இருப்பது, கர்த்தராகிய தேவனே.

வசனம் 5:3

அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

மறுபடியும் ஆலயப்பணி துவக்கப்பட்டபோது, மறுபடியும் தொல்லைகள் ஏற்பட ஆரம்பித்தன. யூதர்களின் சத்துருக்கள் ஒன்று சேர்ந்து தேசாதிபதியினிடத்திற்குச் சென்று முறையிடத்துவங்கினர். யூதர்களை விசாரிக்கும்படி அதிபதிகள் புறப்பட்டனர். தேசாதிபதியாகிய தத்னாய் என்பவனும் மற்றொரு அதிபதியான சேத்தார் பொஸ்னாயும் யூதர்களைச் சந்தித்து இந்த ஆலயத்தைக் கட்டவும் இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் எனக் கேட்டதுமன்றி இதைச் செய்கிறவர்களின் பெயர்களைக் கூறும்படியும் கேட்டனர்.

வசனம் 5:4

அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

இத்தகைய கேள்வி அந்த யூதர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஒரு கூட்டமாகத் தாக்கப்படுவது மிகவும் சிக்கலான ஒரு காரியமே. ஆயினும் பிழை செய்தவர்களின் ஒரு பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பெயர் பதியப்பெறுவது மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடியது. உண்மையில் அந்தப் பெயரை உடையவன் யாதொரு தவறையும் செய்யவில்லையென்றபோதிலும் அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, ஒரு நியாயமற்ற முறையில், அவனுக்கு எந்த ஒரு கெடுதியையும் அதிகாரிகள் செய்யமுடியுமன்றோ?

வசனம் 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய், எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

ஆனால், அந்த யூதர்களளோவெனில் சிறிதும் தயங்கவில்லை. அந்தத் தேசாதிபதியினிடத்தில் தங்கள் பெயர்களைப் பட்டியலாகக் கொடுத்தனர். ஆனால் இங்கு கர்த்தரின் ஆறுதலான வார்த்தைகளை நாம் காணமுடிகிறது. அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது..... 1.பேதுரு 3:12 இல் நாம் மறுபடியும் கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது என்ற ஆறுதலான வசனங்களை வாசிக்கிறோம். நம்மை எப்போதும் தேவன் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது கவனமான, பாதுகாப்பான, பார்வையிலிருந்து, ஒரு நாழிகை நேரம்கூட நாம் விலகியிருக்கப் போவதல்லை! இத்தகைய தேவனுடைய கவனமான ஆசீர்வாதத்தின் பலனாக, அந்தச் தேசாதிபதியும் மற்ற அணையதிபதிகளும், யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண்கள் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த யூதர்கள் பயத்தினால் அந்த வேலையை நிறுத்தி இருக்கலாம். அல்லது அந்த அதிபதிகளிடத்தில் தங்களின் பெயர்களைக் கொடுக்க மறுத்துவிட்டுச் சில குழப்பங்களை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் தேவனுடைய சித்தம் அதுவல்ல. ஒழுங்காக அந்த அதிபதிகளுக்குக் கீழ்ப்படிந்து பெயர்களைக் கொடுத்தனர். தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தைக் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

வசனம் 5:6

நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னம் தேசாதிபதியும், சேத்தார்பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அபற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின நகலாவது:

அதிபதிகளும், தங்கள் தடுக்கும் பணியை விட்டபாடில்லை. மறுபடியும் மற்றுறொரு கடிதத்தினைத் தயாரித்து, இரண்டாம் தரியு இராஜாவிற்கு அனுப்பினர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆலயப் பணியினால் அவர்களுக்கு எந்தவிதமான கெடுதியோ, தொல்லைகளோ, அல்லது பணக் கஷ்டமோ ஏற்படப்போவதில்லை. கர்த்தரின் மகிமைக்கென்று கட்டப்பட்ட ஓர் ஆலயமேயன்றி, அது வேறொன்றுமில்லை. அதுதான் அவர்கள் விரும்பாதது. அவர்களின் கலப்பு வழிபாட்டிற்கு அது ஒரு இடைஞ்சலேயன்றோ?

வசனம் 5:7-8-10

ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக. நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம். அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது. மதில்களின்மேல் உத்திரங்கள் பாச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக. அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம். அதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று உமக்கு எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்று கேட்டோம்.

அவர்கள் இராஜாவுக்கு, அந்த நிலையை மிகைப்படுத்தி எழுதினர். அவர்கள், யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம் என்று குறிப்பிட்டு எழுதினர். அந்தக் கட்டடம் எதற்குரியதென்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். அது பெருங்கற்களால் கட்டப்பட்டு மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்படுகிறது, என்று எழுதினார்கள். அது சாலொமோன் கட்டிய பண்டைய ஆலயத்தின் அமைப்பிலேதான் ஒரு வேளைக் கட்டப்பட்டிருக்க வேண்டும். 1.இராஜா.6:36 உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டினகற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளினாலும் கட்டினான், என்று சாலொமோனின் ஆலயத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். மேலும் அவர்கள் அந்த வேலை துரிதமாய் நடந்து, அவர்களுக்குக் கைக்கூடி வருகிறது, என்று எழுதினார்கள். அந்த ஆலயக் கட்டடம் அழகாகவும் உறுதியாகவும் கட்டப்படுகிறது என்கிற செய்தி அவர்களுக்கு மிகவும் மனக்கஷ்டமாய் இருந்தது போலும்! ஆலயம் கட்டப்படுகிறது என்பதைத்தவிர அதில் அவர்களுக்கு எந்தவிதமான நேரடி பாதிப்பும் இருக்கவில்லை. ஆலயப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பணி, மீண்டும் துவங்கப்பட்டு விட்டதே என்பதைக் குறித்து மிகவும் கலங்கினார்கள். கற்களின் பெரிய அளவிலான அமைப்புகள் அங்கு பயன்படுத்தப்படுவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அங்கே ஆலயப் பணி நடக்கிற இடத்திற்குச் சென்றது பற்றியும், அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும் இராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டனர். அந்த யூதர்கள் அளித்த மாறுத்தரத்தை நேர்மையான அவர்களின் மாறுத்தரததைத் தங்கள் கடிதத்தில் அவர்கள் குறித்து எழுதினர்.

வசனம் 5:11

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

முதலாவது அந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர்கள் யாவர் என்பதனைக் குறிப்பிட்டு, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியார் எனக் கூறியிருந்தனர். என்றா, நெகேமியா, மற்றும் தானியேல் ஆகிறோரின் புத்தகங்களிலே பரலோகத்தின் தேவன் என்ற வார்த்தைகளை நாம் காண்கிறோம். சிறைப்பட்டுப் போயிருந்த யூதர்களிடத்திலிருந்து தம்மைச் சற்று தூரப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே, பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தேவன், என்ற வார்த்தைகளைக் காண்கிறோம். ஒருவேளை தத்னாய் என்ற அதிபதி தனது கடிதத்தில், யூதர்கள் கூறிய வார்த்தைகளைச் சரிவர குறிப்பிடவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய மூன்று புத்தகங்களிலும் இவ்வாறு, பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தேவன், என்ற வார்த்தைகளை இந்த ஓரிடத்தில் மட்டுமே காண முடிகின்றது. ஆனால் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகத்திலே இவ்வார்த்தைகளின் தொகுப்பு இருமுறை காணப்படுகிறது (சக.4:14, 6:5).

யூதர்கள் இதுகுறித்து வெட்கப்படவில்லை. அவர்கள் செய்தது யாதென்று விளங்கக் கூறினார்கள். ஆலயத்தைக் கட்டுகிறோம், எந்த ஆலயம்? இஸ்ரவேலின் இராஜா ஒருவன் கட்டித் தீர்ந்த ஆலயம்.

வசனம் 5:12

எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

தேவனிடத்தில் அவர்கள் செய்த தவற்றினை ஒப்புக்கொள்கின்றனர். எங்கள் பிதாக்கள் பரலோத்தின் மேவனுக்குக் கோபமூட்டினபடியினால் அவர், இவர்களை பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார், என்கின்றனர். நேபுகாத்நேச்சார் ஒரு மாவீரன் என்பதால் இந்தத் தோல்வி அவர்களுக்கு ஏற்படவில்லை. கர்த்தர் அவர்களை, அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் அந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி ஜனத்தைப் பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு போனான்.

வசனம் 5:13-16

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார். நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து, அவனை நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டுபோ. தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார். அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான். அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது. அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

மேலும் அந்த யூதர்கள் தத்னாய் என்ற அதிபதியினிடத்தில் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கூறியதை நாம் காண்கிறோம். கோரேஸ் இராஜா அவர்களை அனுப்பியதையும் அவர்கள் தத்னாயிடம் கூறியிருப்பர். அந்தத் தேவாலயப்பணி துவக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்து விட்டதனாயும் விளக்கிக்கூறியிருப்பர். ஆனால் அப்பணி இன்னும் முடிவுபெறவில்லையென்பது அவர்களுக்கு ஒருவேளை வருத்தமான செய்தியாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் அவைகள்தாம் அப்பணிபற்றிய உண்மைகள் ஆகும்.

வசனம் 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆயலத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

அதிபதியான தத்னாயும், அவனுடைய உடன்அதிகாரிகளும் இரண்டாம் தரியு இராஜாவுக்கு எழுதிய கடிதத்திலே ஆலோசனையாக ஒரு செய்தியையும் கூட்டி எழுதியிருந்தனர். அதாவது, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக்கட்ட, இராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ, என்று பாபிலோனில் இருக்கிற இராஜாவின் கஜானாவிலே ஆராய்நது பார்க்கவும், இந்த விஷயத்தில் இராஜாவினுடைய சித்தம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதி அனுப்பியிருந்தனர். அவர்கள் உண்மையில் என்ன செய்ய விரும்பினார்கள் என்பது தெளிவு. ஆலயபணியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பது அவர்களின் முடிவு. அர்த்சஷ்டா இராஜா ஆளுகைக்கு வருமுன் அந்த ஆலயப்பணி நிறுத்தப்பட்டது. மறுபடியும் துவங்கப்பட்டபணி ஏன் மறுபடியும் நிறுத்தப்படக்கூடாது என்று எண்ணினர். அதிபதியான தத்தனாயும் அவனது சக அதிகாரிகளும், முன்பு எழுதப்பட்ட மனுவில் 4ஆம் அதிகாரத்தில் உள்ளபடியான,- பொய்களைத் தங்கள் கடிதங்களில்; எழுதத்துணியவில்லை. ஆனால் அதற்குப்பதில் கோரேஸ் ஆணைகள் ஏதேனும் உண்டோவென்று இராஜாவின் கஜானாவிலே ஆராய்நது பார்க்கவேண்டும், என்று கோரினர். இத்ததையதொரு கடிதம் முன்பு பயனளித்துள்ளது. ஆனால் பெர்சியாவின் இராஜாவான கோரேஸ் போன்ற ஒருவன், யூதர்கள் தங்களின் சொந்த நகரமான எருசலேமுக்குத்திரும்பி, அந்த ஆலயத்தைக்கட்ட அனுமதியளித்திருப்பான் என அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களை எருசலேமுக்குப்போக விட்டதுமட்டுமல்ல எருசலேமிலிருந்து நேபுகாத்நேச்சார் இராஜாவால் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப்பொக்கிஷங்களையும்கூட அவர்களுக்கு அளித்தனுப்பினான் என்பதை அவர்களால் நம்பக்கூடுமோ? அது முடியாததுதான். சாதாரண நிலையில் அப்படியொரு காரியம் நடந்திருக்கவே முடியாது. ஆனால் தேவனுடைய கரம் உடனிருந்ததினால் மட்டுமே அவ்வாறு நடந்தது.
By Tamil christian Assembly

எஸ்றா 6 விளக்கவுரை

எஸ்றா 6

(7) தரியு இராஜாவின் கடிதம்.
வசனம் 6:1-3

அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது. அதிலே எழுதியிருந்த விதமாவது: ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக் குறித்துப் பிறப்பித்த உத்தரவு எனன்வென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது. அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக. அது அறுபது முழ உயரமும், அறுபது முழ 
அகலமுமாயிருக்கவேண்டும்.

அர்த்தசஷ்டா இராஜாவைப் போலவே தரியு இராஜாவும் உடனே செயல்ப்படத்துவங்கினான். அவனது இராஜ்யத்திலே ஏற்கெனவே சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில், மேலும் குழப்பங்பளை வளரவிடாமல், பாபிலோன் அரண்மணை கஜானாவில் உள்ள தஸ்திர அறைறை சோதிக்க உத்தரவிட்டான். பாபிலோனிலே எந்தவிதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை. ஆனால் மேதிய சீமையிருந்த அக்மேதா பட்டணத்தின் அரண்மணையிலே ஒரு சுருள் அகப்பட்டது. தேடும்பணிக்கு சில காலம் பிடித்தது. அந்தக்காலத்தில் யூதர்கள் தங்களின் ஆலயப்பணியில் நன்கு முன்னேறிச்சென்றனர்.

வசனம் 6:4-5:

அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது. அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக. அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது. அவைகளைத் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.

அந்தச் சுருள், கோரேஸ் இராஜாவின் முதலாம் வருடத்திலே எழுதப்பட்டது (எஸ்றா 1:1). அது கோரேஸ் அக்மேதா நகரத்திலே தங்கியிருந்தபோது எழுதப்பட்டதாகும். அது தேவாலயத்தின் பணியைக்குறித்து விளங்கச்செய்தது. அது எருசலேமில் இருந்த தேவாலயம் என விளக்கிக் கூறியது. அது பலிசெலுத்தப்பட்டு வந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது என உத்திரவிட்டது. அதில் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக என்றது. அது அறுபதுமுழ உயரமும் அறுபதுமுழ அகலமுமாய் இருக்கவேண்டும். மேலும் அது, மூன்று வாரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும், கட்டப்படவேண்டும் எனவும் விளக்கிக் கூறியது. அந்தச் சுருளில் எழுதப்பட்டடிருந்த ஆணைகள், தத்னாய்க்கு சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும். அவனும் அவனது சக அதிபதிகளும் அதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அதில், அதற்கு ஆகும் செலவு இராஜாவின் அரண்மனையிலிருந்து கொடுக்கப்படுவதாக என்றும் நேபுகாத்நேச்சார் இராஜா எருசலேமிலிருந்த ஆலயத்தில் இருந்து எடுத்து, பாபிலோனுக்குக்கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன், வெள்ளி பணிமுட்டுகள் யாவும் திரும்பக்கொடுக்கப்பட்டு ஆலயத்திற்குக்கொண்டு போகப்படவேண்டும் எனத்தெளிவாக எழுதப்பட்டு இருந்தது.

வசனம் 6:6-7:

அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள். தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும். யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

தரியு இராஜாவிற்கு, இந்தச் சுருளினால் இருந்த விளக்கங்கள் போதுமானதாக இருந்தது. இந்த விளக்கங்களைத் தரியு இராஜா தனது அதிபதியான தத்னாய்க்கு விளக்கிடாகக்குறிப்பிட்டு பதிலிறுத்தான். அது மட்டுமன்றி, தன் சொந்த கருத்தாக தத்னாய்கு, நீயும் உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள் என்று கட்டளையிட்டு எழுதினான். மேலும் அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும்: யூதர்கள் ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள் என்று எழுதியனுப்பினான். அது மிகத்தெளிவாக இருந்தது.

அது கர்த்தருடைய பலமான கிரியை. ஓர் இராஜாவின் ஆவியைக் கர்த்தர் ஏவினதால் இதெல்லாம் நடந்தது.

எரேமியா தீர்க்கதரிசியின் காலத்திலும் இவ்வாறே நடந்தது. இஸ்ரவேலர் விரும்பாத, ஆனால் கத்தியமான தேவனுடைய வார்த்தைகளை, எரேமியா தீர்க்தரிசனமாகச் சொன்னான். கல்தேயரோவென்றால், திரும்பி வந்த இந்த நகரத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, அதைப் பிடித்து அக்கினியால் சுட்டெரிப்பார்கள், என்று உரைத்துச் சொன்னான் (எரேமி. 37:8). ஆனால் அதை அவர்கள் விரும்பவில்லை. தனது சொந்த இராஜாவினால், இஸ்ரவேலின் இராஜாவினால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் (எரேமி.37:21). சீக்கிரமே அது நிறைவேறியது. கல்தேயரின் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், எருசலேமின் மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றி, இராஜாவின் அரண்மனையையும், ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, நேபுகாத்நேச்சாரின் சேனைகள் நகரத்தில் நுழைந்தபோது எரேமியா அரண்மனைக் காவலில் இருந்தான். நகரம் முழுதும் அழிக்கப்பட்டது. ஆனால் எரேமியா தனது காவற் சேனாதிபதிக்கு, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல் அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவன் நடத்தென்று கட்டளை கொடுத்தான் (எரேமி. 39:12-14). என்ன வியத்தகு கட்டளை! எந்தவொரு இராஜாவைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதோ அதே இராஜாதானே அந்தக் கட்டளைளைக் கொடுத்தான். எரேமியாவின் சொந்த மக்கள், அவனுடைய முன்னறிவிப்புக்களை விரும்பாமல், அவனைச் சிறையில் அடைத்தனர். ஆனால்,வேறு ஒரு புறஜாதியானான இராஜா, கர்த்தரால் கிரியை செய்யப்பட்டு, அவனை வி;டுவித்து, அவனுக்கு உணவளித்து, அவனைத் தனது சொந்த மக்களிடத்திற்கு அனுப்புகிறான் (எரேமி.40:5). அந்த வல்லமையான கர்த்தரின் கிரியைக்கு நாம் தலைவணங்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

வசனம் 6:8

தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்கு தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

7ம் வசனத்திலே, தேவனுடைய ஆலயம் என்ற வார்த்தைகள் நாம் இரண்டு முறை வாசிக்கிறோம். தேவனுடைய ஆலயத்தின் வேலைகளை அவர்கள் செய்யட்டும். இரண்டாவது தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள். இது தேவனுடைய சித்தம். மேலும் தரியு இராஜாவின் உத்தரவிலே, தத்னாயும் மற்ற அரசு அதிகாரிகளும், தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதை தடுக்க முயன்றவர்கள். அதே ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டிருந்தது. மேலும், வசூலிக்கப்படும் பகுதியாகிய இராஜாவின் திரவியத்திலே, அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவுகள் கொடுக்கவேண்டும், என்று கூறியது அந்த உத்தரவு. ஏன் தரியு இராஜாவிற்கு எழுதினோமோ, என அவர்கள் எண்ணியிருப்பர்.

வசனம் 6:9

பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.

தரியு இராஜா எழுதிய குறிப்புகளிலே பணம் தரப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த ஆலயப் பணியைச் செய்து கொண்டிருந்த யூதர்களுக்கத் தேவையான அனைத்துப் பொருள்களும் கொடுக்கப்படவேண்டும் எனவும் தரியு இராஜா எழுதினான். பலிசெலுத்தப்படுவதற்கான காளைகள், ஆட்டுக்குட்டிகள், முதலியனவும், மற்றும் ஆசாசரியர்கள் கேட்கிறபடி கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலியன தினம்தினம் அவர்களின் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படவேண்டியிருந்தது.

வசனம் 6:10

எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.

யூதர்கள் தங்களின் பலிகளுக்கு எவ்வெப்பொருள்களை விரும்பினர், அல்லது தேவைப்பட்டன என்பது தரியு இராஜாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் ஏன் பலி செலுத்தினர் என்பதற்கான காரணத்தையும் தரியு அறிந்து குறிப்பிட்டிருந்தார். அதாவது, பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி ராஜாவுக்கும் அவன் குமாரருக்கும் தீர்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படி செய்யப்படுவதாக என்று அவன் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். அவன் ஒரு யூதனல்லாத இராஜா. அவன் யூதர்கள் தங்கள் பலிகளுக்குத் தேவையானதனைத்தையும் கொடுக்கம்படி கட்டளையிட்டு எழுதுகிறான். ஏன் பலியிடவேண்டும்? இராஜாவுக்கும் அவன் குமாரருக்கும் தீர்காயுசுண்டாக தேவனிடத்தில் பிராத்தனை செய்து மன்றாட. இது மிகவும் வியத்தகு கடிதம். தேவனிடத்தில் அதே நேரத்தில் விக்கிரகங்களிலும் அவன் நம்பிக்கை வைத்திருந்தானா அல்லது? அவன் பாதுகாப்பு முயற்சிகள் செய்துகொண்டிருந்தானா?

விக்கிரக ஆராதனைக்காரர்களும்கூட தேவனைத் தொழமுன்வருவதை நாம் இங்கு வாசிக்கிறோம். யோனா, தன்னைக் கடலில் தூக்கி எறிந்துவிட மாலுமிகளிடத்தில் கேட்டுக்கொண்டபோது அவர்கள் முதலில் அவ்வாறு செய்யத்துணியவில்லை. பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் அவ்வாறு செய்யத் துணிந்தனர். ஆனால் முதலில் அவர்கள் யோனாவின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பிராத்தனை செய்து, அவரை நோக்கிக்கூப்பிட்டு, கர்த்தாவே, இந்து மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்.....என வேண்டுதல் செய்தனர். யோனாவை எடுத்து சமுத்திரத்தில் போட்டபின்பு சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது, அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து கர்த்தருக்குப்பலியிட்டுப் பொருந்தனைகளைப்பண்ணினார்கள். (யோனா 1:14-16).

வசனம் 6:11-12

பின்னும் நம்மால் பிறப்பிக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடவும், அதினிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது. ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர். தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம். இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

மேதியர், பாரசீகர்களின் இராஜாக்கள் ஆட்சி செய்த நாள்களிலே தங்களின் கட்டளைகள் முழுக்க முழுக்க நிறைவேற்றப்படுகின்றனவா என்பதனை நன்கு ஆராய்ந்துக்கவனித்தனர். அப்படி யாராவது கட்டளைகளைப் புறக்கணித்தால், அவனுடைய வீடு குப்பை மேடாக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து பிடுங்கி நாட்டப்பட்ட ஓர் உத்திரத்திலே அவன் தூக்கில் போடப்படுவான். அது போல தரியு இராஜாவும் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப் போகிற சகல இராஜாக்களையும், சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர் என்று எழுதுகிறான். நேபுகாத்நேச்சார் இராஜாவும் இம்மாதிரியான கொள்கைகளைத்தான் பின்பற்றியுள்ளான். நேபுகாத்நேச்சாரின் அக்கினிச் சூளையினின்று தேவன் சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ என்பவர்களைக் காப்பாற்றினதின் பிறகு அவன் தேவனாகிய கர்த்தரிடத்தில் பக்தி மிகுந்தவனாகமாறி, நாட்டின் மக்கள் அனைவரும் அவ்வாறே மாறவேண்டும் என நினைத்தான். உடன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாக தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மனுஷனும் துண்டித்துப்போடப்படுவான் என்று அவனுடைய வீடு எருக்களமாகப்படும் என்றும் கட்டளைப்பிறப்பித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

வசனம் 6:13

அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.

தரியு இராஜாவின் கட்டளைகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டன. தத்னாயும் மற்ற அதிபதிகளும் தரியு இராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள். அவர்கள் முதலில் மேற்கொண்ட முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைற்தது. அதற்கு நேர் எதிரிடையான, மொத்த உருவங் கொண்ட, இராஜாவின் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவர்கள் முற்பட்டனர்.

தத்னாயும் அவனுடனிருந்த மற்ற அதிகாரிகளும் செய்த முயற்சிகள் அனைத்தும் யூதருக்கும், அவர்களுடைய ஆலயப் பணிகளுக்கும் நேர் எதிரிடையானதே ஆனால் தேவனாகிய கர்த்தர் அதை அவர்கள் விரும்பாத செயல்களைச் செய்ய வேண்டியதாக மாற்றிப்போட்டார். பரிசுத்த வேதாகமத்தில் இது போன்ற தீய நோக்கங்கள் நிறைவேற்றப் படத்தக்கதாக எழுதப்பட்ட வேறு பல கடிதங்களை நாம் காண்கிறோம். ஆனால் தத்னாவின் கடிதங்களைப்போலவே, அந்தக் கடிதங்களும் நேர் எதிரிடையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளமையை நாம் வேதத்தில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தாவீது, யோவாபுக்கு எழுதிய கடிதத்தைப்பற்றி வேதம் நமக்குக் கூறுகிறது. அதிலே, மும்முரமாய் நமக்கிற போர் முகத்திலே, முன் வரிசையிலே உரியாவை நிறுத்தி அவனைக் கொல்வதற்கு வழிசெய்யும்படி எழுதப்பட்டதை நாம் வாசிக்கிறோம் (1.சாமு.11:14,15). ஆனால் அதன் விளைவாக தாவீது தேவனால் எவ்வாறு தண்டிக்கப்பட்டான் என்பதனை வேதம் கூறுகிறது. தாவீதின் மகன் பாலகன் செத்துப் போனான் (1.சாமு.12:18). அவனுடைய மற்றக் குமாரர்கள் அவனுக்கு விரோதமாய் கலகம் செய்தார்கள் (1.சாமு. 15, 1.இராஜா.1:5). அவன் பல பேர்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது (1.சாமு. 12:10). அடுத்து, அசீரியா இராஜவாகிய சனகெரிப், யூதாவின் இராஜாவாகிய எசேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த (ஏமாற்ற) ஒட்டாதே. நான் மற்ற ராஜாக்களைத் தோற்கடித்து போல உன்னையும் தோற்கடிப்பேன் (2.இராஜா.19:10-13). எசேக்கியா செய்தது என்ன? கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று அந்தக் கடிதத்தைக் கர்த்தருக்குமுன் வைத்து ஜெபித்தான். தேவனிடத்தில் இருந்து எசேக்கியாவிற்கு பதில் கிடைத்தது. அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. இதின்மேல் அம்பு எய்வதில்லை........ நான் இந்த நகரத்தை இரட்சிப்பேன்.... என்று வெளிப்படுத்தினார் (2.இராஜா.19:32-34). கர்த்தர் தமது வாக்கை நிறைவேற்றினார். கர்த்தருடைய தூதன் புறப்பட்டு அசீரியாவின் பாளையத்தில், அன்று இராத்திரியிலே, லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான், என்று வேதம் கூறுகிறது (2.இராஜா. 19:35). சனகெரிப் திரும்பி சென்றுவிட்டான். அவனுடைய சொந்த குமாரர்களே அவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள் என்று நாம் வாசிக்கி;றோம் (19:37).

மேலும் இது போன்ற கடிதம் எழுதிய யேசபேலைப் பற்றியும் வேதம் கூறுகிறது. யேசபேல் இஸ்ரவேலின்மேல் இராஜ்யபாரம்பண்ணிய சமாரியாவின் இராஜாவாகிய ஆகாபின் மனைவி, அவள் ஆகாபின் பெயராலே கடிதம் எழுதி அதை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்திற்கும், பெரியோரிடத்திற்கும் அனுப்பினாள். அக்கடிதத்தில் பொய்யாக, நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, இரண்டு பொய்யர்களைக்கொண்டு, தேவனையும் இராஜாவையும் தூஷித்தான் என்று அவன்மேல் பொய்சாட்சி சொல்ல வைத்து, அவனை வெளியே கொண்டுபோய் சாகும்படி கல்லெறியுங்கள்...... என்று எழுதியிருந்தாள் (1.இராஜா. 21:9-10). ஆனால் இந்த கொடுரமான பொய்க்கடிதத்தின் விளைவாக, அவள், பின்னொரு நாளில் அவளது சொந்தவேலைக்காரர்களாலேயே, ஜன்னல் வழியாக கீழே தள்ளப்பட்டு குதிரைகளால் மிதிக்கப்பட்டு நசுங்கி கொல்லப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது (2.இராஜா. 9:30-37).

வசனம் 6:14

அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள். தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது. அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார்கள்.

மேலும், யூதர்கள் தங்களின் கட்டுமானப் பணியைத் தொடர்ந்தனர். கர்த்தர் வழி நடத்தினார், கட்டிமுடித்தார்கள். வேலையை முழுமுயற்சியோமு முதலில் ஆரம்பித்தனர். தங்கள் எல்லா பொருள்களையும், எல்லா நேரத்தையும் முழுமனதுடன் அந்தப் பணிக்காகவே அர்ப்பணித்தனர். இப்போது அப்பணியை முடித்தனர். நம்மில் பலர் அநேககாரியங்களை ஆரம்பிக்கிறோம். ஆனால் தொல்லைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டால், சோர்வடைந்து பணியை நிறுத்தி விடுகிறோம். கர்த்தர் நம்மிடத்தில் எதிர்ப்பார்த்து நிற்பது என்ன? லூக்கா 9:62 இல் கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்திற்குத் தகுதியுடையவனல்ல, என்று இயேசு கூறியுள்ளார். யோவான் எழுதிய சுவிசேஷத்திலே ஆண்டவராகிய இயேசு தமது ஊழியத்தைத் துவங்கி, ஆரம்பித்ததை நாம் வாசிக்கிறோம். இவ்விதமாய் இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக்க கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார் (யோவான் 2:11). மூன்று ஆண்டுகளுக்குப்பின் தமது பணியை அவர் முடித்துக்கொண்டார். அவர் தமது பிதாவை நோக்கி: நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையை செய்து முடித்தேன், என்று பிரார்த்தனை செய்து கூறுகிறார். சிலுவையில் அறையப்பட்டு நமது பாவங்களைச் சுமந்து தீர்க்க முற்பட்டபோது, முடிந்தது.... என்று சொன்னார் (யோவான் 18:30). 

யூதர்கள் ஆலையத்தைக் கட்டி முடித்தார்கள். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு காரியம் கைக் கூடிவந்தது. சாலொமோன் இராஜா முதலாம் தேவாலயத்தைக்கட்டி முடித்தபோது இந்த மூன்று நிகழ்ச்சிகளை நாம் காண முடிகிறது. அவன் ஆரம்பித்தான். வேலையெல்லாம் முடிந்தது. (1.இரா 7:51). கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான், அவன் பாக்கியசாலியாயிருந்தான் (1. நாளா. 29:23). 

இந்த ஆலயத்திருப்பணி செய்து முடிக்கப்பட, ஆகாய் மற்றும் சகரியா ஆகியோரின் தீர்க்கதரிசனங்கள் மிகவும் முக்கியமாக இருந்தன என்பது நிச்சயமே. பரிசுத்தவான்களின் திடப்படுத்துதல் தேவ பணிகளுக்கு மிகவும் முக்கியமானவையாகும். கர்த்தர் மோசேயினிடத்தில், அவனைத் திடப்படுத்து, என்று யோசுவாவைப்பற்றிக் கூறுகிறார் (உபா. 1:38). பவுல் அப்போஸ்தலன் ஒருமுறை, கர்த்தரோ எனக்குத் துணையாயிருந்து......... என்னைப் பலப்படுத்தினார் என்று கூறுகிறார் (2. தீமோ.4:17). கர்த்தரின் ஆசீர்வாதமும் வழி நடத்துதலும் நமக்கு எல்லா காரியங்களிலும் மிக மிக அவசியமாகும்.

அதே நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசிகள், யூதர்ளைச் சிற்சில வேளைகளில் கடிந்து கொண்டார்கள் என்றும் நாம் வாசிக்கிறோம். பவுல் தீமோத்தேயுவைக்கூட கடிந்து கொள்ளுதலைச் செய்யவேண்டுமென்று கூறுகிறார். எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும், கண்டனம் பண்ணி கடிந்துக்கொண்டு, புத்தி சொல்லு...... (2.தீமோ.4:2) யூதர்களும் அவர்களுக்குச் செவி கொடுத்தார்கள். சாலொமோனும் இதையே வலியுறுத்தி, ஒருவன் மூடரின் பாட்டைக்கேட்பதிலும், ஞானியின் கடிந்துக்கொள்ளுதலைக் கேட்பது நலம்.... என்று கூறுகிறான் (பிர.7:5). மேலும் இந்த வசனத்தில், யூதர்கள் ஆலயத்தைகட்டி முடித்த வரலாற்றினை நாம் காண்கிறோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அதை அவர்கள் முடித்தார்கள். அதோடு கோரேஸ் தரியு, அர்த்தசஷ்டா ஆகிய இராஜாக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தும் அந்த வேலை செய்யப்பட்டது. கர்த்தருடைய கட்டளைக்கு முதலில் கீழ்ப்படியப்பட்டது. பிறகு உலகப்பிரகாரமான இராஜாக்களின் கட்டளைகளும் நிறைவேற்றப்பட்டன.

வசனம் 6:15

ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. யூதர்களுக்கு எவ்வளவு சந்தோஷமும் மனத்திருப்பியும் ஏற்பட்டிருக்குக்கூடும்! அது பெரிய வேலை- உடலுழைப்பு- பொருள் தியாகம்- பெரியமுயற்சிகள் எல்லாம் சேர்ந்து, கடைசியாக அப்பணி முடிவடைந்தது.

வசனம் 6:16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

அடுத்து ஆலயப்பிரஷ்திடையைச் செய்ய வேண்டியிருந்தது. அப்படியென்றால் தாங்கள் புதிதாகக்கட்டி முடித்ததொன்றை தேவனுடைய பணிக்காக, தொழுகைக்காக தேவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மோசேயின் காலத்தில்கூட இத்தகைய பிரதிஷ்டைகளைப்பற்றி நாம் வாசிக்கிறோம் (உபா. 20:53). நாமும் நமது வாழ்க்கையில், நமது புதிய படைப்புகளைத் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்கிறோமா?

இத்தகைய பிரதிஷ்டை முறைமைகளிலும் ஓர் ஒற்றுமைப்பாணியை நாம் காணமுடிகிறது. இந்த மகிழ்ச்சியான விழாவினிலே கலந்துக்கொள்ள அனைவரும் வரவேற்கப்பட்டார்கள். இஸ்ரவேல் புத்திரரும் ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களுமாகிய அனைவரும் கலந்துகொண்டார்கள். சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். வேதத்தில் பல இடங்களில் சந்தோஷமான என்ற சொற்களை நாம் வாசிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய அன்றாடக வாழ்க்கiயிலே சந்தோஷம் பொங்க வேண்டும். ஆவியின் கனிகளைப்பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ள வரிசையில் இரண்டாவது இடத்தில் சந்தோஷம் இருப்பதை நாம் வாசிக்கிறோம் (கலா.5:22). அதுமட்டுமன்றி தீர்க்கதரிசனப்புத்தகத்திலே உன் தேவனாகிய கர்த்தர்.... உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து..... களி கூருவார்- என்று நாம் வாசிக்கிறோம் (செப்பனியா 3:17). நெகேமியா தீர்க்கதரிசியும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்று கூறுகிறார் (நெகே.8:10). மேலும் அவர் தமக்கு முன்வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு...... சிலுவையைச் சகித்தார் என்று எரேமியாவில் 12:2 இல் வாசிக்கிறோம். மேலும் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதலாம் நிருபத்திலே, நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு எங்களையும் கர்த்தரையும் பின்பற்றினீர்கள் என்று சந்தோஷத்தைப்பற்றி விளக்கிக்கூறுகிறார் (1.தெச.1:6).

வசனம் 6:17

தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளையும் பலியிட்டு,

தேவாலயப்பணி முற்றுப் பெற்றதனால் ஏற்பட்ட சந்தோஷத்துடன் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். இந்தப் பிரதிஷ்டைக்காக 100 காளையும், இருநூறு ஆட்டுக் கடாக்களையும், 400 ஆட்டுக்குட்டிகளையும் பலியாகச் செலுத்தினார்கள். சாலொமோன் இராஜா, தனது முதலாவது தேவாலயத்தைக் கட்டி முடித்தபோது, அவன் செலுத்திய பலிகளுடன் ஓப்பிட்டுப்பார்த்தால் இது மிகவும் சொற்பமே. அப்பொழுது சாலொமோன் 22000 மாடுகளையும், 120,000 ஆடுகளையும் பலியிட்டான் என வேததில் வாசிக்கிறோம் (1.இரா 8:63). அப்போது இருந்த வெண்கல பலிபீடம் பலிகளைக் கொள்ளக்கூடாமையால், ஆலயத்தின் முன்னிருக்கிற பிரகாரத்தின் நடுமையத்தை அதற்காகப் பயன்படுத்தினான் என வாசிக்கிறோம். அவர்கள் சாலொமோனிடமிருந்து பணம் பெறவில்லை. ஆனால் தங்களிடமிருந்து கொடுத்தார்கள். கர்த்தருடைய சந்நிதானத்தில் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும். நாம் வேதத்தில், உங்களில் அவனவன் தன் தன் வரவுக்குத்தக்கதாக .... எதையாகிலும் (காணிக்கைக்கு) சேர்த்து வைக்க வேண்டாம்..... என்று கூறப்பட்டுள்ளதை வாசிக்கிறோம் (1.கொரி. 16:2).

இந்தப் பலிகளுக்குப்பின் அவர்கள், இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவ நிவாரண பலிகளைச் செலுத்தினார்கள். அந்த 12 கோத்திரத்தாருக்காகவும் அது செலுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் யூதகோத்திரத்திலும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதைச் செய்ததினால் அவர்கள் எல்லாரும், தங்களைப் பாவிகள் என்று அறிக்கைசெய்தது போலாகும் (ரோமர் 3:23). இது நாம் எல்லாருக்கும் ஒரு நல்ல முன்மாதிரி. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்... என வேதம் கூறுகிறது (ஏசாயா 53:6).

வசனம் 6:18

மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசையின்படியும் நிறுத்தினார்கள்.

மோசேயின் பிரமானங்களின் கட்டளைப்படி ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், தேவனுடைய ஆராதனைக்கென்று குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்காக அவர்களை வரிசையாக நிறுத்தினர் (எண். 18). பின்னர் தாவீது இராஜா அமைத்துக் கொடுத்த சட்ட திட்டங்களின்படி, ஆலயப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டனர் (1.நாளா.23:6). பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்து வைக்கப்பட்ட முறைமைகளின்படி அவர்கள் செயல்பட்டனர் எனலாம்.

வசனம் 6:19

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.

15ம் வசனத்திலே, ஆதார் மாதம் மூன்றாம் தேதியிலே ஆலயப்பணி முடிவுபெற்றதென்று நாம் வாசிக்கிறோம். ஆதார் மாதம் என்பது ஆண்டின் கடைசி மாதமாகும். ஆறு வாரங்கள் கழித்து, அடுத்த ஆண்டின் முதல் மாதத்தில் 14- ஆம் தேதியிலே அவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க முற்பட்டனர். இஸ்ரவேலர்கள், தங்கள் உடமைகளுடன், எகிப்து தேசத்திலிருந்து எவ்வாறு மீண்டனர் என்ற வரலாற்றிணை, யாத்திராகமம் 12- ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். அந்த நாளின் நிகழ்சிகளை அவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்பது தேவனின் கட்டளை. அந்த நாளை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் அவர்கள் கொண்டாட வேண்டியிருந்தது. அவர்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் அந்த விழா ஏன் என்று கேட்டால் அவர்கள் சொல்ல வேண்டியது யாதெனில், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி. எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்தில் இருந்த இஸ்ரவேலருடைய வீடுகளைக் கடந்து போனார் என்பதாகும் (யாத்.12:24-28).

1.கொரி.5:7 ம் வசனத்திலே, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே என வாசிக்கிறோம். பஸ்காவின் பலி ஆடு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தில் உட்பொருளாக விளங்குகிறது. அது சரியான பொருத்தம், யாத் 12:5, எபி 9:14 இலும் உள்ளது போல பழுதற்றதாக, குற்றமற்றதாக இருக்கவேண்டும். யாத். 1:6, அப். 2:23 இலும் உள்ளதுபோல அது அடிக்கப்பட கொல்லப்படவேண்டும். யாத். 13:7, லூக். 22:20 இலும் உள்ளதுபோல இரத்தம் தெளிக்கப்படவேண்டும். அது பழுதற்றதாகவும் எலும்புகள் முறிக்கப்படாமலும் இருக்கவேண்டும். யாத். 12:46, சங். 34:20, யோவா. 19:36 தேவன் அந்த யூதர்களின் மனங்களை நன்கு அறிந்திருந்தார். ஆகையால் ஆண்டுதோறும் அதை நினைவுகூற வேண்டுமென அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். அவ்வாறே தேவன் நமது இருதயங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால் நாம் அவரை நினைவுகூர வேண்டுமென்று கூறுகிறார். 1.கொரி. 11:24-25 உண்மையில் அது ஒரு சிறிய காரியமே. நாம் சேர்ந்து பாடி தேவனைத் துதித்து அந்த பஸ்காவின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

வசனம் 6:20

ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.

ஆசாரியர்களும் லேவியர்களும் சேர்ந்து பஸ்காப் பலியைச் செலுத்துவார்கள். அதற்கு முன்னர் அவர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தம் செய்துகொள்ளவேண்டும். அந்த ஆசாரியர்கள் ஆரோனின் பின் சந்ததியினர். அவர்கள் தான் பலியிடும் பணியைச் செய்வார்கள். லேவியர்கள் எனப்படுவோர் லேவியின் கோத்திர வழி வந்தவர்கள். அவர்கள் தேவனுடைய ஆலயத்தின் பணிகளைச் செய்பவர்கள். (எண் 3).

இந்த இருதரத்தாரும் மற்றவர்களுக்குரிய ஆசாரிப்புப் பணிகளைச் செய்ய ஒன்றுசேரும்முன் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளும் பணியை சரிவரச் செய்து முடிக்கவேண்டியிருந்தது. இது ஒரு நல்ல ஆரம்பம். மற்றவர்களுக்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் பணியாற்ற விரும்புகிறர்கள் முதலில் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் இதை நாம் காண்கிறோம், முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (மத்.7:5, 2.நாளா.29:15) தங்களை சுத்திகரித்துக்கொண்டபின்பு, ஆசாரியரும் லேவியரும் சேர்ந்து, மற்ற இஸ்ரவேலர் அனைவருக்காவும், தங்களுக்காகவும்கூட, பஸ்காவின் ஆட்டை பலியிட்டனர், அந்த பலி யாவருக்காகவும் செலுத்தப்படுகின்ற பலி.

வசனம் 6:21-22

அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள். கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் ஆசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்டசத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

இங்கு அந்த ஆசாரியர், லேவியர், இஸ்ரவேலர் தவிர மற்றுமொரு கூட்டத்தினரை நாம் காண்கிறோம், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி சேர்ந்து அனைவரும்... எனக் கூறப்பட்டுள்ளது, அங்கு வாழ்ந்த அனேகர், புறஜாதிகளின் விக்கிரகவழிபாடுகள் மிகவும் கேடு நிறைந்தவைகள் என உணர்ந்து, அதை விட்டு, கர்த்தராகிய தேவனை வணங்க முன்வந்தனர், அப்படி முன்வந்தவர்கள் பஸ்கா பலியில் சேர்ந்துகொள்ளவும், பஸ்காவைப்புசிக்கவும், பண்டிகையை ஆசாரிக்கவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதை சந்தோஷத்துடனே ஆசாரித்தார்கள் என வேதம் கூறுகிறது, கர்த்தராகிய தேவன் அவர்களை ஆசீர்வதித்து சந்தோஷப்படுத்தினார், தேவனுடைய ஆலயத்தைக் காணும்போதெல்லாம் தங்களின் விடாமுயற்சியின் நற்பலனை அதிலே அவர்களால் காணமுடிந்தது, அவர்களுடைய விசுவாசம், மற்றவர்கள் புறஜாதியினர் வழிபாட்டு முறைமைகளை விட்டுச்செல்ல அவர்களைத் தூண்டியது, இந்த நிலை, அவர்கள் அனைவரும், தேவனுக்குள் ஒன்றுசேர்ந்து, தேவனைத்தொழவும், துதிசெய்யவும் நல்லதொரு பாதையாக அமைந்தது. இந்த வசனத்தில் நாம் மேலும் காண்கிற செய்தி யாதெனில் ஆசீரியாவின் இராஜா, தனது இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பி அவர்களின் தேவ ஆலயத்தின் பணிக்கு ஒத்தாசை செய்யத் தூண்டியது என்பதாகும். நீதி. 21:1 இல் கூறப்பட்டுள்ளபடி அது நடைபெற்றது, கடுகளவு விசுவாசமிருந்தால், ஆரம்பிக்கப்படும் எந்தப்பணியும், கர்த்தரால் நிச்சயம் நிறைவேறும், எதிர்ப்புக்கள் மலைகளாயினும் தகர்க்கப்பட்டுப்போம் என நாம் அறிவோமாக.

எஸ்ரா 7 விளக்கவுரை

எஸ்றா 7

(8) ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப
மன்னனிடம் அனுமதி கோரல
வசனம் 7:1-5

இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான். இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன். இவன் சல்லூமின் குமாரன். இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன், இவன் அமரியாவின் குமாரன். இவன் அசரியாவின் குமாரன், இவன் மொராயோதின் குமாரன், இவன் சேராகியாவின்குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன், இவன் அபிசுவாவின்குமா
ரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.

ஆறாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் முடிந்து 60 ஆண்டுகாலத்திற்குப்பின் நடக்க ஆரம்பித்த நிகழ்ச்சிகளை 7ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம், இந்த கால தாமதம் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை, இப்போதுதான், இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமானவரை நாம் காண்கிறோம். அவன் தான் எஸ்றா, அர்த்தசஷ்டா இராஜாவின் காலத்தில் வாழ்ந்தவன். ஆரோனின் சந்ததியில் தோன்றியவன், அவன் ஆசாரியர்களின் வழிவந்தவர்களில் ஒருவன் என்பதை விளங்க அவனது வம்சவழி இந்த வசனங்களில் குறிக்கப்பட்டுள்ளது, அவன் கற்கத்திறந்த வேத பாரகன். மோசேயின் பிரமாணங்களை நன்கு அறிந்தவன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேத பாரகனாயிருந்தான், என வாசிக்கிறோம். நாம் கர்த்தரின் வார்த்தைகளை நன்கு அறிந்தவன் என என்னப்பட வழியுண்டா? கர்த்தர் தமது திருப்பணியைச் செய்ய பல துறைகளில் உள்ளவர்களை தெரிந்துகொள்பவராயிருக்கிறார், சிலர் ஆடுகளை மேய்க்கும் இடையர்: மோசே (யாத்.3:1). இன்னும் தாவீது (1.சாமு.16:11) மற்றும் எலிசா போன்றவர். உழவர், (1.இராஜா.19:19) நெகேமியா ஒரு பானபாத்திரக்காரன். (நெகே.1:11). மற்றும் பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோர் மீன்பிடிக்கிறவர்கள். (மாற்.1:16-19). மத்தேயு ஒர் ஆயக்காரன் (மத்.9:9). அப்போஸ்தலனாகிய பவுல் கூடாரம் பண்ணுகிற தொழிலாளி (அப்.18:3). லூக்கா ஒரு வைத்தியன் (கொலோ.4:14). இவர்கள் யாவரும், அவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர்களைத்தான் கர்த்தர் தமது திருப்பணிக்கு அழைத்திருந்தார்.
வசனம் 7:6

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.

இங்கே வேறு ஒரு புறஜாதியினனான இராஜா யூதர்களுக்கு மனமுவந்து உதவ முன்வந்ததைக்காண்கிறோம். நாம் 1-6 அதிகாரங்களில் வாசித்த, யூதர்கள் இப்போது காலமாகி இருக்கவேண்டும் அல்லது மிக வயது சென்றவர்களாக இருக்கவேண்டும். இப்போது ஆட்சி செய்கிறவர் வேறு ஓர் இராஜா. எஸ்றாவாகிய ஆசாரியனான வேதபாரகனான ஓர் அறிஞன் இராஜாவினிடம் சென்று, மற்றும் ஓர் கூட்டத்தை எருசலேமுக்கு திரும்ப அழைத்துச் செல்ல அனுமதிகேட்டும் அளவிற்கு அக்கறைகாட்டினான். ஓரு வேளை இந்தப்புதிய இராஜா கோரேஸின் கட்டளைகள் யாவும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆலயம் கட்டப்பட்டுவிட்;டது, நீங்கள் ஏன் போகவேண்டும்? அத்தகைய எண்ணத்தை மறந்து விடுங்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி ஏதும் கூறிவிடவில்லை. இங்கே, மறுபடியுமாக கர்த்தரின் கரம், அந்த இராஜாவின் ஆவி ஏவப்பட்ட கிரியை செய்ததைக் காண்கிறோம். இராஜாவான அர்த்தசஷ்டா அவன் கேட்ட யாவற்றையும் குறைவின்றிகொடுத்தான். எஸ்றா உடனே கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துகிறான். இந்த அதிகாரத்தில் மூன்று முறை அவ்வாறு கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவதை வாசிக்கிறோம்.
நாம் கர்த்திடத்தில் உதவி பெறும்போது கர்த்தருக்குத் தோத்திரங்களையும் நன்றியையும் உடனே செலுத்த சில வேளைகளில் தவறி விடுகிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்த காலத்தில் பத்து குஷ்டரோகிகளை ஒருமுறை சொஸ்தமாக்கினார். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்து நன்றி செலுத்தினான் (லூக்கா 17:11-19).
எஸ்றாவோடு, ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும் மற்றும் பணியாட்களும், நிதனீமியரும் உடனே சென்றனர். 2ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடியான கூட்டத்தினர் எஸ்றாவுடன் சென்றனர்.
வசனம் 7:8-9

ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான். அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது. முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

மறுபடியுமாக எருசலேமுக்குச் செல்லும் பயணம் மிகவும் கடுமையானதொன்றாகும் என நாம் அறியமுடிகிறது. பாதைகள் மிகவும் கரடுமுரடானவை. தங்களின் உடைமைகளைச் சுமந்துக் கொண்டு பாபிலோனிலிருந்து எருசலேம் செல்ல குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்கும். ஆனால் மறுபடியுமாக எஸ்றா, தன்னை அரவணைத்து வழிகாட்டும் கர்த்தரின் கரங்களுக்குத் துதிகளை ஏறெடுக்கிறான்.

வசனம் 7:10

கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

எஸ்றாவின் மேலான வலிமைக்கான காரணங்களின் இரகசியங்களை நாம் இங்கே காண்கிறோம். கர்த்தருடைய வேதத்தை ஆராய.... எஸ்றா தனது இருதயத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறான், என்று காண்கிறோம். இது ஒவ்வொருவரும் அவரவர்களே செய்ய வேண்டிய பணியாகும். இதனை வேறெருவன் நமக்காகச் செய்ய முடியாது. தானியேலைப்பற்றி நாம் வாசிக்கும் போது, தானியேல், தன்னை தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்... என்று வாசிக்கிறோம் (தானி.1:8). அவனுடைய காலம் முழுவதிலுமே அவன் ஜாக்கிரதையுள்ளவனாக வாழ்ந்தான். கர்த்தர் அவனைப் பூரணமாய் ஆசீர்வதித்தார். தானியேலும், எஸ்றாவும் ஆகிய இருவருமே, வேற்று நாட்டில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் இருவருமே, தேவனுக்கு ஏற்ற காரியங்களை மட்டும் செய்ய தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். அவர்கள் இருவரையும் இராஜாக்களிடத்தில் பரிந்து பேசும் அளவிற்கு தேவன் உயர்த்தினார் (தானி.2). தங்களின் இருதயங்களை ஆயத்தப்படுத்தியுள்ள எவரையும் தேவன் தமது பணிக்குத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவார். பல நேரங்களில், தமது சித்தத்தை நிறைவேற்ற அற்புதமாக தேவன் செயல்படுகிறார். அதுபோலவே சிலர், கர்த்தரை விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது அவர்கள் மூலமாக தமது சித்தத்தை நிறைவேற்ற சித்தமாயிருக்கிறார்.
2.நாளாகம புத்தகத்திலே, ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல், என்னும் வார்த்தையை மூன்று யூத இராஜாக்களைப்பற்றிய செய்திகளிலே நாம் வாசிக்கிறோம். 2.நாளா.12:14 ல் ரெகொபெயாம் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல், ஆயத்தப்படுத்தாமல் போனதால் பொல்லாப்பானதைச் செய்தான், என்று இருக்கக் காண்கிறோம். அவனுடைய செயல்களே அதை விளக்கின. இஸ்ரவேலர் கோத்திரங்களாக பிரிவதற்கு அவனுடைய செயல்களே காரணங்களாகும் (2.நாளா.10). அடுத்து யோசபாத், தேவனைத் தேட தம்முடைய இருதயத்தை நேராக்கினார்.... எனக் காண்கிறோம் (2.நாளா. 19:3). இன்னும் யோதாம், தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான் (2.நாளா.27:6) என வேதம் கூறுகிறது.
எஸ்றாவைப்பற்றி கூறுமிடத்து அது சிறந்திருத்தலைக் காண்கிறோம். அவனுடைய பயணங்கள் துவங்குமுன்பே அவன் தன் இருதயத்தை நேராக்கினான். முதலாவது அவன் தன்னைத்தானே சரி செய்துக்கொண்டான். எல்லாவித நல்ஆரம்பங்களும் அவ்வாறே உள்ளன. தேவனுடைய பிரமாணங்களைத் தேடுதற்கும், வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். இவ்வாறுதான் நாம் காரியங்களைச் செய்ய முற்பட வேண்டுமென்று வேதம், மறுபடியும், மறுபடியுமாக நம்மை எச்சரிக்கிறது. சங்கீதம் 1ல் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், என்று நாம் வாசிக்கிறோம். இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் எனக் காண்கிறோம்.
மேலும் யோசுவாவின் புஸ்தகத்திலே, இந்த நியாயப்பிரமான புத்தகம் உன் வாயை விட்டு பிரியாதிருப்பதாக என்று சொல்லப்படுகிறது (யோசு.1:8).
எஸ்றா ஒருபடி மேலாகச் சென்று, நியாயப்பிரமாணப் புத்தகத்தை நன்றாகப் படித்துக் கற்றது மாத்திரமின்றி, அதன் கற்பனைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தான். கர்த்தருடைய நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாதே போனால் அதனைக் கற்றுத் தேர்வதனால் மட்டும் பயன் ஏதுமில்லை. எஸ்றா அதனைக் கற்றது மட்டுமன்றி அதற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தான். அது மட்டுமன்றி, அக் கற்பனைகளைப் பிறருக்கு போதிக்கவும் ஆரம்பித்தான். இம்மாதிரிக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தும் அதனைப் பிறர்க்குப் போதித்தும் இருக்க வேண்டிய முறைமைக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நல் உதாரணமாவார். அவர் எல்லாருக்கும் கீழ்ப்படிந்து பணிவிடை செய்தார். அது மட்டுமன்றி தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார் (மத்.26:39). அதுமட்டுமல்ல அவர் ஒரு நல்ல போதகரும்கூட. சுவிஷேசங்கள் அனைத்திலும் அவர் எங்கும் போதித்து போதனைகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். மலையின்மேல் ஏறிப்பிரசங்கித்தார் (மத்.5:1-2). ஜெப ஆலயங்களிலே அவர் போதகம் பண்ணினார் (மத்.13:54). மக்கள் எங்கு கூடினார்களோ அங்கெல்லாம் போதித்தார் (மாற்கு 10:11). தேவாலயத்திலே (லூக்கா 19:47 படகிலிருந்து (லூக்கா 5:3). இன்னும் வீதிகளில்கூட போதகம் பண்ணினார் (லூக்கா 13:26) என்றெல்லாம் வாசிக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கடைசியாக தமது சீஷர்களுக்குக்கொடுத்த கட்டளை யாதெனில், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி....... நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பதே (மத். 28:20). பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது: இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக் கொண்டிரு. நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி, என்று எழுதுகிறார் (1.தீமோ.4:11), (1.தீமோ.2:2). இவைகளிலிருந்து தேவனுடைய பிள்ளைகள் பின்பற்றவேண்டிய சரியான முறைமைகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தேவனுடைய கற்பனைகளை அறிந்துகொள்ள, முதலாவது தமது இருதயத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிந்துகொண்டபின்பு அதற்குக் கீழ்ப்படியவேண்டும், பிறகு அதை மற்றவர்களுக்கு போதிக்கவேண்டும். எஸ்றா சரியான முறையில் அந்த நியதிகளைப் பின்பற்றினான்.

வசனம் 7:11

கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னத்தின் நகலாவது:

அர்தசஷ்டா இராஜாவினிடத்தில் சென்று, எஸ்றா, எருசலேமுக்கு செல்ல அனுமதி கேட்டான். கர்த்தருடைய கரம் எஸ்றாவின்மேலிருந்தது. அர்தசஷ்டா இராஜா எஸ்றாவுக்கு தனது பதிலையும், அவனுக்கு தேவனுடைய அரசாங்க அனுமதியின் விளக்கங்களையும் ஒரு பிரகடனமாக எழுதிக்கொடுத்தான். இங்கு எஸ்றா முதலாவது ஆசாரியனாகவும், இரண்டாவது வேதபாரகனாகவும் விபரிக்கப்பட்டுள்ளான். ஆனால் ஒரு சாதாரண, மற்றவர்களைப்போன்றதொரு வேதபாரகனாக அல்ல. நன்கு கற்றிருந்த நியாயப்பிரமாணத்தினாலே தேறின வேதபாரகனென வேதம் கூறுகிறது. இஸ்ரவேலர்களுக்கு தேவன் அருளிச்செய்த அனைத்து வேதப்பிரமாணங்களிலும் தேறினவன் என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனுடைய வேதத்தின் கட்டளைகளை நன்கு அறிந்திருக்கிறோமா?
வசனம் 7:12

ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

இராஜாவாகிய அர்தசஷ்டா, தன்னை, அவன் எழுதித்தந்த சன்னத்தின் நகலிலே இராஜாதி இராஜா என அழைத்துக்கொள்ளக்காண்கிறோம். இது நியாயமான கௌரவமே. நேபுகாத்நேச்சர் இராஜாவை, தானியேல் தீர்க்கதரிசியையும், எசேக்கியேல் தீர்க்கதரிசியும், இராஜாதி இராஜா என கௌரவித்து அழைக்கின்றனர். அந்நாட்களிலே அந்த இராஜா மிகவும் வல்லமை பொருந்தியவராய் இருந்ததைக் குறிப்பிடவே அவ்வாறு அழைத்தனர் (எசேக். 26:7, தானி. 2:37). ஆனால் வேதம் கூறுகிறபடி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உலகில் வருகிற காலத்திலே அவர் மட்டுமே, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா எனும் நாமத்தில் குறிக்கப்படுவார் (வெளி 19:16).

வசனம் 7:13

நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

இராஜாவாகிய அர்தசஷ்டாவின் பிரகடனம் அவருடைய ஆட்சியிலிருந்த அனைத்து இஸ்ரவேலருக்கும் உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமன்றி ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்கூட உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் எவரேனும் எருசலேமுக்கு செல்ல எஸ்றாவுடன் சேர்ந்து சொல்ல விரும்பினால் அவர்கள் அவ்வாறே செல்லலாம் எனக்கூறியது. அந்தப் பிரகடனம் அது யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்புகிற எவரும் செல்ல அது அனுமதித்தது.

வசனம் 7:14

நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

எஸ்றாவிற்குப் பிரமாணம் அளித்தவகையில், இராஜாவும் அவனுடைய ஏழு பிரதானிகளும் அதில் ஒப்பிட்டிருந்தனர் என்பது முடிவு (எஸ்தர் 1:13-14). அவர்கள் அந்தப் பிரமாணத்தைத் தங்கள் அவையில் வைத்து நன்கு ஆலோசித்த பின்னரே அவர்களுக்கு அளித்திருப்பர். அந்தக்கட்டளையின்படி அவன் முதலாவது, யூதாவையும், இஸ்ரவேலையும் அவன் கையிலிருக்கிற தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நன்கு விசாரித்து நடத்தவேண்டும். அதைச் செய்ய, எஸ்றா தவிர வேறொருவனும் நற்தகுதி பெற்றவன் அல்ல. அர்தசஷ்டா இராஜா, தேவ வழிபாடுகள் அனைத்தும் தேவனால் அருளப்பட்ட தேவ பிரமாணத்தின்படி தான் கண்டிப்பாக நடைபெறவேண்டும் என விரும்பினான் என்பது மிகத் தெளிவு. யூதர்களின் அந்நாள் முறைமையும் அதுவாகவே இருந்தது.

வசனம் 7:15

ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்குப் மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,

எஸ்றா ஓர் ஏழையாக அனுப்பப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு மனப்பூர்வமாய் வெள்ளியையும் பொன்னையும் தேவையான அளவு கொடுக்கவே இராஜாவும் அவனுடைய பிரதானிகளும் முன்வந்தனர். அவ்வாறு எஸ்றா விரும்புகின்ற அனைத்து உதவிகளும் அவனுக்கு கிடைக்கின்றனவா, என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண்டான்.

வசனம் 7:16

பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.

அதுமட்டுமன்றி, பாபிலோன் நாடுமுழுவதிலும் உள்ள மக்களும், ஆசாரியர்களும் விரும்பிக்கொடுக்கும் வெள்ளியையும் பொன்னையும், அனைத்தையும் பெற்றுக்கொள்ள எஸ்றாவுக்கு அந்த ஆணையில் அனுமதி வழங்கப்பட்டது. கொடுப்பவர்களும் அது தேவனுடைய ஆலயத்திற்கு என்பதை உணர்ந்து தாராளமாய்க்கொடுக்கத் தூண்டப்பட்டனர். நாமும்கூட கர்த்தரின் கிருபையை உணர்ந்து தேவனுக்கு மனமுவர்ந்து கொடுக்க முன்வரவேண்டும்.

வசனம் 7:17

ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றிக் காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.

அர்தசஷ்டா இராஜா தேவ தொழுகைக்கு யூதர்களின் தேவை என்ன என்பதை நன்கு அறிந்தான். தரியு இராஜாவும் அவ்வாறே அறிந்தான் என முன் நாம் வாசித்தோம் (6:9-10). ஆகையால் அர்தசஷ்டா இராஜா காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் பலியிடுவதற்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக்கொள்ளவும் போஜனபலிகளையும், பான பலிகளையும் வாங்கிக்கொள்ளவும் பாபிலோனில் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தான். அவையனைத்தும் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்தப்படுமென அவன் அறிந்திருந்தான். எஸ்றா அந்த வெள்ளியையும் பொன்னையும் தேவனுடைய ஆலயத்துக்கென்று செலவுசெய்ய விரும்பி அவன் அனுமதி அளித்தான் (கடிதம் அளித்தான்).
அர்தசஷ்டா தனது கடிதத்தில் தேவனைப்பற்றி பத்துமுறைக்கு குறிப்பிட்டுள்ளான். அதுமட்டுமன்றி தேவனைக்குறித்து மூன்றுவிதமான வார்த்தைகளை கூறியுள்ளான்.
1. பரலோகத்தின் தேவன் 2. இஸ்ரவேலின் தேவன் 3. எருசலேமின் மீது வாசம் பண்ணுகிற தேவன்
என்று கூறும்போது, ஒரு குறிப்பிடப்பட்ட இடத்தின் தேவன், குறிப்பிடப்பட்ட இனத்தாரின்தேவன் மட்டுமல்ல பரலோகம் முழுமைக்கும் தேவன் என்பது விளக்கப்பட்டுள்ளது.

வசனம் 7.18

மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.

அர்தசஷ்டா இராஜா எஸ்றாவின்மீதும் அவனது மக்கள் யூதர் மீதும் அளவில்லாத நம்பிக்கை வைத்தான். அதனால்தான் மீதியான வெள்ளியையும் பொன்னையும் உங்களுக்கு நலமாய் தோன்றுகிறபடி தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள் என்று அவன் கூறினான். எஸ்றா மிகவும் நேர்மையானவன் என்று நற்புகழ் பெற்றிருந்தமையினால் அனைத்து பொன்னும் வெள்ளியும் நல்லவழியில் பயன்படுத்தப்படுவதற்காக பத்திரமான வழியாக அவன் கையில் முழுவதும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நமது வேதத்தில் அவ்விதமாகவே எகிப்தின் பிரதான மந்திரியான போத்திப்பார், அனைத்துப் பொறுப்புக்களையும் யோசேப்பிடம் ஒப்படைத்தான் என வாசிக்கிறோம் (ஆதி. 39:4-6). எஸ்றாவும் யோசேப்பும் அந்நிய இராஜ்ஜியத்திலே சிறைவைக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களில் நேர்மையான வாழ்க்கையைப்பற்றி அறிந்திருந்த அதிகாரிகள் அவர்களை முழுவதும் நம்பும்படி செயல்பட்டனர். இதுபோலவே நமது வாழ்க்கை முறைமைகளும் நேர்மையானவைகளாக இருத்தல்வேண்டும்.

வசனம் 7:19-21

உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய். பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக. நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூற்றுக்கலக் கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

மேலும் இராஜா தனது கடிதத்தில் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக கொடுக்கப்பட்டவைகளை எருசலேமில் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய் என்று குறிப்பிட்டான்.
பின்னும் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியது என்பதை இராஜாவின் கஜனாவிலிருந்து வாங்கிக்கொடுக்கவும் அக்கடிதத்தில் இராஜா அனுமதியளித்திருந்தான். சொன்னது மட்டுமன்றி அப்பகுதியில் இருந்த எல்லாக் கஜானாக்களும் அர்தசஷ்;டா இராஜா எழுதிய கட்டளையில் எஸ்றா கேட்பவை எல்லாவற்றையும் தாமதமில்லாமல் கொடுக்கவேண்டுமென்று கூறியிருந்தான். ஆகையால் அது எஸ்றாவின் வாயிலிருந்து பிறந்த வேண்டுகோள் மட்டுமன்றி அரசனுடைய கட்டளையின் அம்சமாகவும் இருந்தது.

வசனம் 7:22-23

வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும், பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும். ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

இராஜாவின் கட்டளையின்படி பெறப்படக்கூடி பொருட்களின் விவரமாவது:
எஸ்றாவுக்கு கொடுக்கப்படக்கூடிய பொருட்களின் அளவு, 100 தாலந்து வெள்ளி 100 கலம் கோதுமை 100 கலம் திராட்சை இரசம் 100 கலம் எண்ணெய் வேண்டியளவு உப்பு
இது மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ள அளவின்படியான நன்கொடை. இவ்வாறு ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் இராஜா விளக்கியுள்ளான். இராஜாவும் அவன் குமாரனும் ஆளும் இராஜ்யத்தின்மேல் தேவனுடைய கடும்கோபம் வராமல் இருக்கவே அவ்வாறு கொடுக்கப்பட வேண்டுமென கூறி எழுதியுள்ளான். அதுமட்டுமன்றி தனது இராஜ்யத்தின் மக்கள் தங்களின் விருப்பத்தின்படி விரும்பும் தெய்வத்தை வணங்கிக்கொள்ள அனுமதித்தான். உதவிசெய்தல் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என அந்த இராஜா ஞானமுடம் எண்ணியிருக்கலாம்.

வசனம் 7:24

பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிய தீர்வையாகிலும் ஆயமாகிலும்சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

அர்தசஷ்ட இராஜா எழுதியிருந்த பிரகடனத்திலே மேலும் ஒரு நன்கொடை அளிக்கப்பட்டிருந்தது. அது என்னவெனில் தேவனுடைய ஆலயப்பணிக்காக புறப்பட்டுச்செல்லும் ஆசாரியர்களும,; லேவியரும, பாடகரும், வாசல் காவலாளரும், நீதனீயரும், பணிவிடைக்காரருமான யாவரும் தீர்வையாகிலும், ஆயமாகிலும், பகுதியாகிலும் செலுத்தத் தேவையில்லை என்பதே அது. ஆனால் இத்தகைய பழக்கம் மற்றும் சில பெர்சியாவின் இராஜாவின் காலத்திலும் வழக்கத்தில் இருந்து வந்ததென்பது வரலாற்றின் உண்மையாயெனினும் யூதர்களான அந்த இஸ்ரவேலர்களுக்கு இது மகிழ்ச்சியும், வியப்பும் ஊட்டுவதொன்றாகவே இருந்ததெனலாம்.

வசனம் 7:25

பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக. அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.

இப்போது எஸ்றாவுக்கு இராஜாவாகிய அர்தசஷ்டா மேலும், சில நல்ல அதிகாரங்களை கொடுத்துள்ளதை நாம் காண்கிறோம். முதலாவது இராஜாவாகிய அர்தசஷ்டா, உன்னிடத்திலுள்ள தேவனுடைய ஞானத்தின்படியே.... எனக் கூறுவதால், எஸ்றா தேவனிடத்தில் தெய்வீகஞானம் பெற்றவன் என்பதை ஒப்புக்கொள்கிறான் என நாம் காண்கிறோம். வேதத்தில் ஞானம் என்பதைப்பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சாலெமோனின் புத்தகத்தில் அதிகமான ஞானத்தைப்பற்றி அவர் கூறியுள்ளதை வேதத்தில் காணமுடிகிறது. தேவனாகிய கர்த்தர் சாலேமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தார் என வேதம் கூறுகிறது (1.இராஜா.10:24). சாலெமோன் தனது நீதிமொழிகளின் புத்தகத்தில் ஞானமே முக்கியம், ஞானத்தை சம்மாதி என அவர் கூறியுள்ளார் (நீதி. 4:7). அதுமட்டுமின்றி கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி. 9:10) என்று கூறியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்குமிடத்தில் பரிசுத்த லூக்கா இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர்தயவிலும், அதிகமாய் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52) என்று கூறியுள்ளார். மேலும் ஞானத்தை எப்படிப்பெறுவதென்று கூறுமிடத்து யாக்கோபு ஞானத்திலே குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் (யாக். 1:5) என்று கூறியுள்ளதை வாசிக்கிறோம். இப்போது எஸ்றா நியாயம்விசாரிக்கத்தக்க நியாயாதிபதிகளை ஏற்படுத்தவும் தனது ஞானத்தைப் பயன்படுத்த இராஜா அர்தசஷ்டாவினால் அதிகாரம் பெற்றான். அதுமட்டுமன்றி தேவனுடைய பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அதைப் போதிக்கவும் அனுமதிக்கப்பட்டான்.

வசனம் 7:26

உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும் காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

இதுமட்டுமன்றி இராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போதிக்கிறவர்களுக்கு யாது செய்யப்படல்வேண்டுமெனவும் அர்தசஷ்டா தனது பிரகடனத்தில் கூறியிருந்தான். அக்கட்டளையை இராஜாவினுடைய நியாயப்பிரமானம் என்றும், தேவனுடைய நியாயப்பிரமாணம் என்றும் கூறிய இராஜா அக்கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் உடனே மரணத்திற்குள்ளாகிலும,; தேசத்திற்குப்புறம்பாக்குதலாகிலும், அபராதத்திற்குக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டு தண்டிக்கக்கடவன் என அப்பிரகடனத்தில் விளக்கி எழுதியிருந்தான். அக்காலத்தில் இராஜாக்கள் என்றால் கண்டிப்பாக யாரும் கீழ்ப்படியவேண்டுமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும் (தானி. 3:29).
வசனம் 7:27-28

எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப் பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

இங்கே எஸ்றா தனது நன்றி பாராட்டுதலை முன்னறிவிக்கிறான். இத்ததைகய காரியங்கள் செய்தது யார்? எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் என்று எஸ்றா கூறினான். இப்படிப்பட்ட யோசனைகளை இராஜாவின் இருதயத்தில் தேவன் அருளினார் என்று கூறுகிறோம். எஸ்றா மேலும் இந்த யோசனைகள் எல்லாம் ஏன் என்று விளக்குமிடத்து, எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க இப்படிப்பட்ட யோசனையை இராஜாவின் இருதயத்தில் அருளினார், என்று கூறுகிறான். அதே நேரத்தில் எஸ்றாவாகிய தனக்கும், இராஜாவுக்கும், அவருடைய மந்திரிமாருக்கும், இராஜாவின் கைகளுக்குள்ளான பலத்த எல்லா பிரபுகளுக்கும் முன்பாக எனக்கு (எஸ்றாவுக்கு) தயவு கிடைக்கப்பண்ணினார், என்று கூறிய தேவனை ஸ்தோத்தரிக்கின்றான். கர்த்தர் ஏலியிடம் ஒருவன் என்னை கனம்பண்ணினால் நான் அவனைக் கனம்பண்ணுவேன் (1.சாமு. 2:30) என்று கூறியுள்ளதற்கேற்பன எஸ்றா தேவனாகிய கர்த்தரை கனம் பண்ணும்வகையில் அவருடைய பிரமாணங்களை நன்கு கற்றறிந்து அதற்கு கீழ்ப்படிந்தும் வந்தான். ஆகையால் இங்கே அர்தசஷ்டா இராஜாவினால் கர்த்தர் எஸ்றாவை கனம் பண்ணும்படி உயர்த்தினார்.

ஆகையால் எஸ்றா தேவனுடைய பணியைச் செய்ய மேலும் உற்சாகப்படுத்தப்பட்டான். கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் என்னும் வார்த்தைகளை எஸ்றா மறுபடியும் எழுதுகிறான். கர்த்தருடைய கரம் ஆசீர்வதிக்கப்பயன்படுவதுபோல சபிக்கவும் பயன்படுத்தப்படும். நகோமி மோவாபியர் நாட்டுக்குச்சென்றபோது கர்த்தருடைய கரம் எனக்கு விரோதமாக இருந்ததினால் எனக்கு மிகுந்த சஞ்சலம் உண்டாயிற்று என்று கூறுவதை நாம் வாசிக்கிறோம் (ரூத் 1:13). மேலும் யோபு தனது நண்பர்களிடத்தில் என் சிநேகிதரே எனக்கு இரங்குங்கள். தேவனுடைய கரம் என்னைத்தொட்டது என்று தனது துன்பத்தைக்குறித்து கதறுவதைக் காண்கிறோம் (யோபு 19:21). தாவீது இராஜா சங்கீதப்புத்தகத்திலே இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் வறண்டுபோயிற்று (சங்.32:4 ) எனப்புலம்புகிறான். இவைதவிர அப்போஸ்தலர்களைப்பற்றிய நடபடிக்கைகளில் புத்தகத்திலே கர்த்தருடைய கரம் அவர்களுடனே கூட இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப்.11:21) என்ற ஆசீர்வாதத்தை நாம் காணமுடிகிறது. ஆகையால் கர்த்தருடைய கரம் ஆசீர்வாதத்தையும் அதுபோல சாபத்தையும் கூட தரவல்லதாகவிருக்கிறது.
எஸ்றா இஸ்ரவேலர்களின் தலைவர்களை அவனுடன் சேர்த்துக்கொண்டான். அவர்கள் எருசலேமுக்குப்போகப் புறப்பட்டார்கள். கர்த்தரின் மேலாக ஆசீர்வாதங்களும் வழிநடத்தலும் அவனோடே இருந்தது. எஸ்றா வேறு அநேகரையும் அவனுடன் போகச் சேர்த்துக்கொண்டான்.


எஸ்ரா 8 விளக்கவுரை

எஸ்ரா 8

(9) எஸ்றாவின் பயணம்

வசனம் 8:1-14

அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடே வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ், பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும், பரகாத்மோவாபின் புத்தரரில் செராகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும், செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும், ஆதினீன் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும், ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும், செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய
செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும், யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும், செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும், பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும், அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும், அதோனிகாமின்கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும், பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.

அதிகாரம் 2ல் கூறப்பட்டுள்ளபடி, இந்த எட்டாம் அதிகாரத்திலும் எருசலேமுக்குச் சென்ற குடும்பங்களின் தலைவர்களின் பெயர்கள் விளக்கப்பட்டுள்ளது. அது முதலாவது இரண்டு ஆசாரியர்களின் பெயர்களுடன் ஆரம்பமாகிறது எனலாம். அவர்கள் தாம் பினெகாசின் புத்திரர்களும், இத்தாமாரின் புத்திரர்களுமாம். 1.நாளா. 24:1-2 வசனங்களில் இத்தாமார், ஆரோனின் வழிதோன்றிய ஆசாரியன் என்பதும், 1.சாமு 4:4 இல் பினெகாசைப்பற்றியும் கூறப்பட்டுள்ளதையும் நாம் வேதத்தில் காண்கிறோம். அந்த அறிவிப்பில் அதாவது, இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பட்டியல்களின் அடிப்படையில் 1496 பேர் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அவர்களில் பலர் தலைவர்களாக தங்களின் குடும்ப வம்சா வழியில் தோன்றிய பலருடன் சேர்ந்து புறப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் பலரும் இதற்கு முன்பே, கோரேஸ் இராஜாவின் காலத்திலே எருசலேமுக்குச் சென்று இருந்தனர். அவர்களின் பெயர் பட்டியலை நாம் எஸ்றா 2ம் அதிகாரத்தில் காண்கிறோம். ஆகையால் இரண்டு தலைமுறையினரின் காலத்திற்குப் பின்சென்ற கூட்டத்தினரும், அவர்களுக்கு முன் சென்றவர்களுடன் இணைந்துக்கொள்ளுவர். எனவே முதல் கூட்டத்தார் வழி காட்டினர் என்றும், பிந்திய கூட்டத்தினர் 60 ஆண்டுகளுக்குப்பின் அவர்களைப்பின் தொடர்ந்து சென்றனர் என்றும் கொள்ளலாம்.
வசனம் 8:15

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன். அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம். நான் ஜனங்களையும் அசாரியரையும் பாhவையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.

எஸ்றா தனது கூட்டத்தாருடன் சென்று ஒரு நதியோரத்தில் மூன்று நாட்கள் தங்கினான். அது அகாவுக்கு அடுத்து ஓடுகிற நதி. அங்கே அவர்களைக் குடும்பங்களாக வகைப்படுத்திக் கணக்கெடுக்கையில் அவர்களில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. அது, அந்தப் பயண திட்டத்தில் ஒரு பெரிய குறைபாடு. லேவியின் கோத்திரத்தார் சேர்ந்து வராததன் காரணம் ஏதும் இங்குக் கூறப்படவில்லை. வீடுகளைவிட்டு நெடும் தொலைவுப்பயணம் மேற்கொள்ளுவதென்பது மிகக்கடினமே. அதுபோலவே அது லேவியர்களுக்கும் கடினமாக இருந்திருக்க முடியும். லேவியர்களும் மற்றோரும் தங்கள் தினசரிக்கடமைகளைச் செய்ய வேண்டிய நிலையில், சிறைப்பட்ட அந்தச் சூழ்நிலை அவர்களின் பணிகளை மிகவும் பாதித்திருக்கலாம். இப்போது இந்தப் பயணத்திலே, லேவியர்கள் தங்கள் லேவியர் பணியைக்கட்டாயமாக செய்ய வேண்டியிருந்திருக்கும். இது அவர்களின் மனோ நிலையை மிகவும் பாதித்திருக்கக்கூடும். ஆகையால் அவர்கள் மிகவும் பின் தள்ளப்பட்டிருக்கக்கூடும்.

வசனம் 8:16

ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,

ஆனால் எஸ்றாவோ, அவர்களை விட்டுச்செல்லப்போவதில்லை. அவர்களும், லேவியரும், உடன்வரவேண்டும் என்று மிகவும் விரும்பினான். ஆனால் அதை எவ்வாறு செய்வது? இப்போதுதான் எஸ்றா தனது ஞானத்தை விளங்கச் செய்கிறான். சிறந்த பதினோரு பேரைத்தெரிந்துக்கொண்டு, அவர்கலை லேவியரிடம் பேச அனுப்புகிறான். இது திறமையின் அடிப்படையில் மட்டுமே செயல்படமுடியும். ஆகையால் எஸ்றா புத்திமான்களை அழைப்பித்தான். வேதத்தில் புத்திமான்களின் விவேகம்பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சாலொமோனின் நீதிமொழிகளின் புத்தகத்திலே, புத்திமான் இவைகளைக்கேட்டு, அறிவில் தேறுவான். விவேகி நல்லாலோசனைகளையடைவான் (நீதி. 1:5) எனக் கூறப்பட்டுள்ளது. மற்றும் நாபாலின் மனைவியாகிய அபிகாயில் ஒரு புத்திசாலி என்று விளக்கப்படுவதை வேதத்தில் நாம் வாசிக்கிறோம் (1.சாமு.2:5). இன்னும் தானியேலும் அவனுடைய மூன்று உடன் நண்பர்களும், ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்திலும், மற்றயாவரையும்விட பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான், என்று வாசிக்கிறோம் (தானி. 2:20). மேலும் புதிய ஏற்பாட்டுக்காலத்தில்கூட, லூக்கா 4:27 இல் இயேசுவைப்பற்றி, அவர் பேசக்கேட்டயாவரும் அவருடைய புத்தியையும்.... குறித்து பிரமித்தார்கள் என வாசிக்கிறோம். ஞானம் என்பது மிகவும் அவசியமே. ஆனால் அது புத்தியுடனும் சேர்ந்து அமைந்திருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு அவ்விரண்டையும் பெற்றிருந்தார்.
வசனம் 8:17-20

கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும், மெராரியின் புத்திரரில் அஷபியாவும் அவனோடேகூட எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும், தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.

எஸ்றா அனுப்பிய, ஞானமுள்ள பதினோருபேரும் லேவியரைக் குறித்துப் பேசும்படிக்கு, கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவினிடத்திற்குச் சென்றார்கள். தேவனுடைய ஆலயத்துப்பணிவிடைக்காரரை அனுப்பும்படி கேட்டனர். இத்தோ அதைச் செய்தான். அந்தப் பணிக்காக 258 பேரைக் சேகரித்து அவன் அனுப்பினான். எஸ்றா அனுப்பிய 11 புத்திமான்களின் பணி நிறைவேறியது. ஆனால் எஸ்றா யாருக்கு நன்றிசொல்ல வேண்டும் என்று நன்கு அறிந்திருந்தான். இவையனைத்தும் நடந்தது எங்கள் மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, என அவன் நன்கு அறிவான் (எஸ்றா 8:18).
வசனம் 8:21

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

எஸ்றா, இப்போது எருசலேமுக்குச் செல்ல, தேவனுடைய பணியைச் செய்ய வேண்டிய அனைவரையும் சேர்த்துக் கொண்டான். இப்போது அவன் அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் ஒன்றுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டான். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பின்பற்றிய ஒரு முன்மாதிரியான வழி. உலகத்திலே தமது திருப்பணியை ஆரம்பிக்கும்முன் அவர் 40 நாள்கள் இரவும் பகலும் உபவாசித்தார் என நாம் வாசிக்கிறோம் (மத்.4:2). அது மட்டுமன்றி அவர் தமது சீஷர்களைத் தேர்ந்தெடுக்குமுன் இராமுழுவதும் ஜெபித்தார் என வேதம் கூறுகிறது (லூக்கா 6:12).
அதுபோலவே எஸ்றாவும், அவனைச் சேர்ந்த இஸ்ரவேலர் அனைவரும் உபவாசித்துத் தங்களைத் தாழ்த்தினார்கள். எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்கள் சகல பொருள்களுக்காகவும், செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் நான் அங்கே உபவாசத்தைக் கூறினேன் என்று எஸ்றா கூறுகிறான்.
வசனம் 8:22-23

வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன். எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம். எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

அந்த நெடுந்தொலைப் பயணத்திலே, தேவனுடைய உதவியை நாடவேண்டடியது ஏன் என்பதை எஸ்றா தெளிவாக இங்கு கூறுகிறான். அவனைக் காப்பாற்ற சேனைகள் வீரர்கள் யாவரும் அவனுடன் இல்லை. நெகேமியாவின் நாட்களிலே இத்தகைய பயணத்திலே நெகேமியாவோடு இராஜா இராணுவ சேர்வைக்காரரையும், குதிரை வீரரையும், அனுப்பினான் என்று வேதம் கூறுகிறது (நெகே.2:9). ஆனால் எஸ்றாவை அனுப்பிய இராஜா, அதைப்பற்றி ஏனோ எண்ணங்கொள்ளவில்லை. அதைப்பற்றி இராஜாவிடம் கேட்கவில்லை. இதைப்பற்றி எஸ்றா, இராஜாவிடத்தில் வீரரைக் கேட்க நான் வெட்கப்பட்டிருந்தேன். எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய கோபம் அவரை விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் இராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். இந்த நிலையில் நான் எவ்வாறு இராஜாவினிடத்தில் வீரரைக் கேட்க முடியும்? அப்படி கேட்டால் நான் தேவனிடத்தில் நம்பிக்கையற்றவன் ஆவேன். ஆகையால் நான் அதைச் செய்யக்கூடாது, என்று கூறினான்.
ஆகவே அவர்கள் உபவாசித்து ஜெபித்தார்கள் மேலும் எஸ்றா கூறுவது, தேவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டார். கர்த்தர் இராஜாக்களின் மூலம் உதவிசெய்வார், அல்லது வேறு விதமாய் உதவி செய்வார்: அது அவருடைய திட்டம் என்று எஸ்றா நம்பினான்.

வசனம் 8:24-27

பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து, ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்து சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன். அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும், ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,

எஸ்றா தனது பணியை துவக்கினான். ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் வேலைகள் பிரித்துக் தரப்பட்டன. அவரவர் பணியை அவரவர் புரிந்து செயல்பட்டனர். இராஜாவும் மற்றோரும் கொடுத்த வெள்ளியையும், பொன்னையும், பணிமூட்;டுக்களையும், எஸ்றா, அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தான். 650 தாலந்து வெள்ளியும், 100 தாலந்து பொன்னும், 20 பொன் கிண்ணங்களையும், 2 பளபளப்பான வெண்கலப் பாத்திரங்களையும், அவன் நிறுத்து அவர்களிடம் கொடுத்தான். தாலந்துகள் என்ற வார்த்தை இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. ஒரு தாலந்து எனப்படுவது சுமாராக 35 கிலோ நிறைக்குச் சமமாகக்கொள்ளலாம். இந்தச் சுமை, அந்த ஆசாரியரின், லேவியரின் சொந்த சுமைகளுடன் சேர்ந்து மிகவும் பெரிய பளுவாக இருந்ததெனனலாம். தேவனுடைய வேலையைச் செய்கிறவர்களுக்கு எப்போதுமே பல சுமைகள் இருப்பதுண்டு. ஆசாரியர்களுக்கு பொறுப்பான வேலைகள் உடனடியாகவே கொடுக்கப்பட்டுவிட்டது.
வசனம் 8:28

அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள். இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.

எஸ்றா ஆசாரியர்களைத் தனிமைப்படுத்தி, மற்ற கூட்டத்தாரான எல்லா இஸ்ரவேலர்களிலும், நீங்கள் தூய்மையானவர்கள் என்பதை அவர்களுக்;கு உணர்த்திக் காட்டினான். லேவியராகம புத்தகத்தில் மோசே, (லேவி 21:6-8) அவர்கள் தேவனுக்குப்பரிசுத்தமானவர்கள் என்று தேவனால் உணர்த்தப்பட்டதை விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி, இஸ்ரவேலர் அனைவருக்கும் இதே வார்த்தைகள் உரைக்கப்பட்டு அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பது உணர்த்தப்பட்டுள்ளது (லேவி. 11:44). அதுவுமல்லாமல், எல்லா விசுவாசிகளும், தங்கள் நடக்கைகளினால் பரிசுத்தமாக இருக்கத் தக்கவர்கள் எனபதனை பேதுரு 1:15 நமக்கு நன்கு உணர்த்துகிறது. நாம் ஒவ்வொருவரும், நமது தேவனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, அவரைப் போல் பரிசுத்தமாக நம்முடைய நடக்கைகளெல்லாவற்றிலேயும், இருக்க வேண்டுமன்றோ? பரிசுத்தமாக வாழ்வதென்றால், உலக சமுதாயம் முழுவதையும் விட்டு தனியாகச் சென்று வாழ்வது என்பதல்ல. கர்த்தராகிய இயேசு பாவிகளான யாவரோடும் கலந்தே ஜீவித்தார். ஆனால் அவர்களின் யாதாகிலும் ஒரு பாவ வழியில் அவர் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை.
வசனம் 8:29

நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் அசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.

எஸ்றா, அந்த ஆசாரியர்களின் விசேஷமான பணிபங்குகளை, அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அவர்கள் பணிமுட்டுகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. நாமும்கூட சில பொறுப்புக்களைக் கவனித்துக் காத்துக்கொள்ள வேண்டி, சில சமயங்களில் நேரிடுகிறது. காத்திருந்து, விழித்திருந்து, ஜெபம் செய்ய வேண்டியும், சில சமயங்களில், உள்ளது (மத். 26:41). நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவவைகளை நாம் காத்துக்கொள்ளவேண்டியுள்ளது (1.தீமோ. 6:20). அப்படியாக அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவையனைத்தையும், மறுபடியும், எருசலேமில், தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர், லேவியர் ஆகியோரின் தலைவர்களிடம் நிறுத்துத் திருப்பித் தரவேண்டிய அவர்களின் பொறுப்புக்கடன் ஆகும். எவ்வளவு நிறை உள்ள பொருள்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டதோ, அவை சரி நிறையாகத் திரும்ப, நிறுத்து, ஒப்படைக்கப்படுதல் வேண்டும். இதுவே நமது வாழ்க்கையில் நியதியமாகும். தேவனால் நமக்கு அருளப்பட்டவைகள் அனைத்தும், தாலந்துகளோ, பணமோ, நேரமோ, பதவியோ, கல்வியோ, எதுவாயினும் நாம் திரும்பவும் தேவனிடம் ஒப்படைக்கவேண்டியுள்ளது.
வசனம் 8:30

அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.

எஸ்றாவினால் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களனைத்தையும், அந்த ஆசாரியர்களும், லேவியரும் பெற்றுக்கொண்டனர். அதுவுமின்றி அவற்றை எருசலேமுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.
வசனம் 8:31-32

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம். எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது. நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

இத்தகைய எல்லா ஒழுங்குகளும் செய்து முடித்தப்பின்பு, எஸ்றா, முதலாம் மாதம் 12ம் தேதியிலே, அகாவா நதியை விட்டு எருசலேம் நோக்கிப்புறப்பட்டான். அவனுடன் அனைவரும் புறப்பட்டனர்.
இந்தப் பயணத்தின் கடுமைகளைப்பற்றி எஸ்றா ஒன்றும் கூறவில்லை. எந்தவித தொல்லைகள், அல்லது கஷ்டங்கள் பற்றி அவன் எதுவும் எழுதவில்லை. ஆனால் தேவனுடைய கரம் எங்கள் மேலிருந்தது, வழியிலே சத்துருவின் கைக்கும் பதிவிருக்கிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவித்தது, என்று அவன் கூறுகிறான். எஸ்றா, கர்த்தர் உடனிருப்பதால், எருசலேம் சேர்ந்தவுடன், அனைத்துத் தொந்தரவுகளும் மறைந்து போகும், என்பதை நன்கு உணர்ந்திருந்தான். கர்த்தரின் பிள்ளைகள் அனைவருக்கும் இத்தகைய ஆசீர்வாதமே உண்டாகும். உலகில் நாம், நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும்போது, கர்த்தருடைய கரம் நம்மைத் தாங்கி நடத்த வல்லமை படைத்ததாக உள்ளது. ஒரு சில தொல்லைகள் நேரிட்டாலும் முடிவில் தேவனுடைய சந்நிதானத்தில் சேரும்போது, அவை அனைத்தும் மறைந்து போகும்.
அவர்கள் அனைவரும் எருசலேம் சேர்ந்தனர். அங்கு மூன்று நாட்கள் ஓய்வெடுத்தபின் தங்கள் பணிகளைத் துவங்கினர்.
வசனம் 8:33-34

நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும், பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது. யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள். அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.

ஒவ்வொருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொன், வெள்ளியையும், பணிமூட்டுகளையும், நிறுத்து, நிறை குறித்து தேவனுடைய ஆலயத்தில் திரும்ப ஒப்படைத்தனர். குறைபட்டுப் போனதாக எதுவும் காணப்படவில்லை. ஆசாரியர்களிடம் வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் பல விலைமிக்கப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் பொறுப்புடன் அவைகளைக் கொண்டு வந்து சேர்த்தனர்.
வசனம் 8:35

சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும்பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனலியாகச் செலுத்தினார்கள்.

அடுத்து, தேவனுக்குப் பலிகள் செலுத்தப்பட்டன. இஸ்ரவேலர் நிமித்தம் 12 காளைகள் பலி செலுத்தப்பட்டன. எல்லாருக்காகவும் அந்தக் காணிக்கை செலுத்தப்பட்டது. முதல் பணியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் காணிக்கையும் செலுத்தப்பட்டது. இது தான் நாம் செய்ய வேண்டியதும் கூட. ஆனால் இதனை மறந்து, தவறி விடுகிறோம்.
வசனம் 8:36

பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள். அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.

பிறகு அவர்கள் இராஜாவின் உத்தரவுகளை சன்னதுகளை இராஜாவின் தேசாதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள். அதனால் எஸ்றா தேவனுடைய பணியைச்செய்ய இராஜாவின் அனுமதியைப் பெற்றுள்ளான் என்று விளங்கச் செய்தனர். முடிவாக, ஒரு மகிழ்ச்சியான குறிப்பினை நாம் காண்கிறோம். எஸ்றாவும், அவனுடன் வந்தவர்களும், அங்கு முன்பு சென்று இருந்தவர்களுக்கும் தேவனுடைய ஆலயத்திற்கு உதவியாயிருந்தார்கள். தேவனுடைய காரியங்கள் குறித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓர் ஊழியக்காரனுக்கு, எங்கேனும் நீ உதவியாகச் சென்று உதவ முடியுமா?

எஸ்ரா 9 விளக்கவுரை

எஸ்றா 9

(10) இஸ்ரவேலர் பாவம் செய்தனர்.
வசனம் 9:1-2

இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்தத் தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள். இப்படியே பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று. பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.


தேவனுடைய வல்லமையான வார்த்தைகள், மனிதர்களின் இருதயதங்கிலே கிரியை செய்ய வல்லமை உள்ளதாய் இருக்கிறது. வேதத்தில் இதற்குச் சான்றாக, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து நான் அதை அனுப்பிய காரியம் ஆகும்படி வாய்க்கும், என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம் (ஏசாயா 55:11). இதன்படி எஸ்றாவின் போதனைகள் செயல்பட்டதைக் காண்கிறோம். எஸ்றா, எருசலேமுக்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே சில பிரபுக்கள் அவனிடத்தில் சில காரியங்களைக் கூற வந்து நின்றனர். இஸ்ரவேலரில் சிலர், விக்கிரகங்களை வணங்குகின்ற அந்நியர்களிலிருந்து விலகியிருக்கத் தவறி விட்டனர். அவர்களுடைய பிள்ளைகளுக்குப் புறஜாதியினரிடமிருந்து அவர்கள் பெண் கொண்டனர். அவர்களில் இக்குற்றத்தைச் செய்தவர்கள் ஆசாரியர் லேவியர் ஆன இஸ்ரவேலின் தலைவர்களே.
மோசே இதனை மறுபடியும், மறுபடியுமாக பலமுறைத்தடுத்திருக்கிறார். உபா.7:14 இல் மோசே, இத்தகையோர் சிலரைக்குறிப்பிட்டு, அவர்களிடம் சம்மந்தம் கலவாயாக... அவர்ககளோடு பெண் கொள்ளவும், கொடுக்கவும் வேண்டாம், எனக் கட்டளையிட்டுள்ளார். ஆனால் இப்போது இஸ்ரவேலர் அதைப்புறக்கணித்து விட்டனர். இஸ்ரவேலர் பாபிலோனைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட ஒரு நல்ல முடிவை மேற்கொண்டனர். எருசலேமிலே பல இனத்துப் புறஜாதியினரை நாம் காணமுடிகிறது. ஆனால் அவர்கள் தேவனின் பரிசுத்த திட்டங்களைப் பின்பற்றுவதை விடுத்து அவர்களோடு பெண் கொண்டு, பெண் கொடுத்து சம்மந்தம் கலந்தனர். பிரித்தறிய முடியாதபடி அவர்களோடு கலந்தும் விட்டனர்.
வசனம் 9:3-4

இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் என்னோடேகூட கூடிக்கொண்டார்கள். நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் எஸ்றா திடுக்கிட்டுத் திகைத்தான். வஸ்திரத்தையும் சால்வையையும் கிழித்துக்கொண்டான். தலையிலும் தாடியிலும் உள்ள மயிரைப்பிடிங்கிக்கொண்டு திகைப்பில் உட்கார்ந்துக் கொண்;டான். இத்தகைய ஒரு நிகழ்ச்சியைக் கண்டவுடன் எஸ்றா எவ்வாறு செயற்பட்டான் என்பது கவனிக்கத் தகுந்தது. அவன் கோபத்தால் துடித்தெழுந்து அவனைச் சூழ இருந்தவர்களைத் திட்டித் தீர்த்தானா? இல்லை! அவனுடைய சொந்த ஆடைகளையும், முடியையும் பிய்த்துக்கொண்டான். அவன் சென்று மூட்டை முடிச்சுகளைக்கட்டி, புறப்பட்டு இஸ்ரவேலரை அவர்களின் வழியிலே விட்டுச் சென்றானா? இல்லைவே இல்லை! அவன் அமர்ந்து, உபவாசித்து, பிரார்த்தனை செய்தான். தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபித்தான். இதைப் பார்த்த மாத்திரத்தில், அவ்வாறான பெரிய குற்றத்தைச் செய்யாத சிலரும் மற்றும் பலரும் அவனோடு சேர்ந்து பிரார்த்தனை செய்தனர். இஸ்ரவேலினுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் எஸ்றாவோடு சேர்ந்தும் கொண்டனர்.
கர்த்தர் தமது வார்த்தைகளுக்கு நடுங்குகிறவர்களை ஏற்றுக்கொள்ளுகிறார். சிறுமைப்பட்டு, ஆவியில் நொருங்குண்டு, உன் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 66:2).
கர்த்தராகிய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்காதவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பவன் காயீன். முதலாவது, அவன் தேவனுக்குப் பிரியமில்லாத காணிக்கையைத் தனது விருப்பப்படியே செலுத்தத் துணிந்தான் (ஆதி. 4:5). அத்தகைய நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள தேவன் அளித்த சந்தர்ப்பத்தை அவன், பின்பு புறக்கணித்தான் (ஆதி. 4:7). பின்பு ஆபேலை, அவன் கிரியைகள் நீதியுள்ளவைகளாயிருந்ததினிமித்தம், கொலை செய்தான் (1.யோவான் 3:12, நீதி. 29:10). அவன் பொல்லாங்கனால் உண்டானவன், என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய வார்த்தைகளைப் புறக்கணித்தபின் அவனுடைய வழிகள் யாவும் விழத் தள்ளப்பட்டுப்போயின.
வசனம் 9:5-6

அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து: என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன். எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று. எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

அன்று மாலை எஸ்றா முழங்கால்படியிட்டு ஜெபித்தான். என் தேவனே! நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக்கலங்குகிறேன்.. ..என்று எஸ்றா தன்னைத் தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துகிறான்.. ஆனால் புறஜாதியாரிடையே பெண்கொண்ட குற்றத்தை எஸ்றா செய்யவில்லை. ஆம், ஆனாலும் குற்றம் செய்த மற்றோருடன் தானும் ஒருவன் என்ற அளவில் தன்னைத் தாழ்த்தி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறான் எஸ்றா. தானியேலும் ஒருமுறை அவ்வாறே செய்தான். தானியேல் பாவம்செய்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. ஆனாலும் குற்றம் செய்தவர்களுடன், தேவனுக்குமுன்பாக, அவன் தன்னைம் இணைத்துக்கொள்ளுகிறான். எங்கள் பாவங்களினாலும்.. என்று கூறும் வசனங்களை தானி. 9:16இல் நாம் வாசிக்கிறோம். இதற்கு மேலாக பாவமே அறியாத கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக (தேவன்) பாவமாக்கினார் என்று 2.கொரி. 5:21 இல் நாம் வாசிக்கிறோம். தேவன் அவரே. பாவத்தில் இருந்தவராக, சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார் அல்லவா?.
வசனம் 9:7-9

எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறோம். எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம். இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது. நாங்கள் அடிமைகளாயிருந்தோம். ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும், நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார்.

எஸ்றா, தனது ஜெபத்தில் இஸ்ரவேலர் ஆரம்பமுதலே பாவம் செய்தனர் என்று அறிக்கையிடுகிறான். அவர்கள் எல்லாரும் பாவம் செய்தார்கள் என்று கூறுகிறான். ஆகவே தேவன், இஸ்ரவேலின் இராஜ்யத்தையும், இராஜாக்களையும், அவர்களின் ஆசாரியர்களையும், அவர்களின் சத்துருக்களின் கைகளிலே ஒப்புக்கொடுத்தார். அநேகர் கொல்லப்பட்டனர். பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர் அல்லது வெட்கப்படுத்தப்பட்டனர். ஆனால் தேவனாகிய கர்த்தரோ மேலும் மேலும் கிருபை கடாட்சித்தருளினார். இஸ்ரவேலரில் பலரை மீதியாக வைத்து, எருசலேமுக்குத் திரும்பிவரச் செய்தார். அதுமட்டுமன்றி அவர்களுக்குப் பாதுகாப்பான அரணாக தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் வாய்ப்பினையும் அளித்தார். எருசலேமில் ஒரு வேலையைக் கட்டளையிட்டார் என்று வேதம் கூறுகிறது. அதுமட்டுமன்றி, தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலே எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும் கிருபை கிடைத்தது என்று எஸ்றா கூறுகிறான். அத்தகைய குச்சிலேதான் விலையுயர்ந்த பொருட்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஏசாயாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்திலே, அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்.. அதன்மேல் அவன் தன் தகப்பன் வீட்டிற்கு சிங்காசனமாயிருப்பேன்.. என்று கர்த்தராகிய இயேசுவைப்பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது (ஏசா. 22:23-24). இம்மாதிரிக் கூறும்போது, எஸ்றா, தேவனைத் தொழத்தக்கதாய், அவர் அருளிய ஆசீர்வாதங்களைக் குறித்து விளக்குகிறார். எஸ்றா கூறுவதாவது:
1. தேவனாகிய கர்த்தர் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. 2. பெர்சியாவின் இராஜாக்களின்மூலம் தேவன் கருணைசெய்துள்ளார். 3. தேவனுடைய ஆலயத்தைக் கட்ட தேவன் வழி நடத்தினார். 4. யூதாவிலும், எருசலேமிலும், இடிந்து பாழாய்க்கிடந்த அலங்கங்களை பழுது பார்த்துக் கட்ட தேவன் கிருபை செய்தார்.
தேவனாகிய கர்த்தருக்கு எஸ்றா, இந்த ஆசீர்வாதங்களுக்காக, எல்லா மகிமையையும் செலுத்தத் தவறவில்லை.
வசனம் 9:10

இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம். தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.

எஸ்றாவைப்போலவே மற்ற இஸ்ரவேலரும் கர்த்தருக்கு நன்றியோடே மகிமையைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அது மட்டுமன்றி கர்த்தர் அருளிச் செய்த கற்பனைகளையும் அவர்கள் புறக்கணித்து விட்டனர். எஸ்றா அவர்களுக்கு இரங்கல் ஏதும் காட்டவில்லை. கர்த்தரின் பெரிதான கிருபையையும், ஆசீர்வாதங்களையும் எண்ணிப் பார்க்குமிடத்து அவர்கள் செய்த பாவம் மிகவும் துரோகமானது என்று கூறினான்.
வசனம் 9:11-12

நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது, தேசா தேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது. ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

எஸ்றா தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, அங்கு வசித்து வந்த மக்களின் அசிங்கத்திலும், அவர்கள் நடப்பித்த அருவருப்புகளினாலும், அந்தத் தேசமானது மிகவும் தீட்டுப்பட்டதாய் உள்ளது. ஆகையால் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலர்கள், அந்த மக்களோடு எந்தவிதமான திருமண உறவு கொள்ளாமலும் பெண்கொண்டு, பெண் கொடுக்காமலும், அவர்களுடைய சமாதானத்தையும், நன்மையையும் ஒருக்காலும் நடாமலும் இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தத் தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்திய காலமாக உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்திரமாய்ப் பெறமுடியும் என்றும் கூறினான்.
வசனம் 9:13 

இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத் தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில்,

எஸ்றா கர்த்தரிடத்தில் தன்னைத் தாழ்த்தி, தேவன் அவர்களுடைய அக்கிரமத்திற்கு ஏற்ற ஆக்கினையை அவர்களுக்கு இடாமல், அவர்களுக்கு வந்த தண்டனை மிகவும் சொற்பமானதே என அறிக்கையிட்டு ஜெபித்தான். கர்த்தர் எப்போதும் கருணை வடிவமானவர். அவர் நமது பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார், என்று கூறினான் (சங். 103:10). ரோமர் 4:25 இல் உள்ளபடி அவர் (கர்த்தர்) நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
வசனம் 9:14

நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ ?

இந்த மகத்துவமான தேவ அன்பின் சூழ்நிலையில், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடு சம்மந்தம் கலக்கத் தக்கதாய் தேவனுடைய கற்பனைகளை வீணாக்கலாமோ? அப்படியானால் ஒருவனும் மீந்து தப்பாதபடி நிர்மூலமாக்கும்படி தேவ கோபாக்கினை அவர்கள்மீது வருமன்றோ?
வசனம் 9.15

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர். ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பிமீந்திருக்கிறோம். இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள். இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

எஸ்றா இந்த எல்லா உண்மைகளையும் உள்ளபடி தேவ சந்நிதானத்தில் வெளியிட முன்வந்தான். இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள். அவர்களுக்கு மன்னிப்பே தகாது. தேவன் நீதிபரர். ஜனங்கள் யாவரும் தேவனுக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டியவர்கள். தங்கள் குற்றங்கள் நிமித்தம் நடுங்க வேண்டியவர்கள். தேவன், தமது சித்தத்தின்படி அவர்களுக்கு யாது செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்ய வல்லவர் என்று எஸ்றா இந்த நிலையில் தாவீதைப்போல் நடந்துகொண்டான். தாவீது குற்றம் செய்தபோது தண்டனைகளாக ஏற்றுக்கொள்வதற்கு மூன்று நிலையில் நிறுத்தப்பட்டான். அன்று அவன் கூறியது இப்போது நாம் கர்த்தருடைய கைகளில் விழுவோமாக. அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷன் கையில் விழாதிருப்பேனாக.. என்று (2.சாமு.24:11-14). அதுபோல் எஸ்றாவும், முழுத்தீர்ப்பையும் கர்த்தருடைய சித்தத்திற்கு விட்டுவிட்டான். யாதொரு மன்னிப்பிற்கும் மன்றாடவில்லை.

எஸ்றா 10 விளக்கவுரை

எஸ்றா 10

(11) மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர
வசனம் 10:1

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று. ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.


தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாக எஸ்றா அழுது, ஜெபித்து அறிக்கையிட்டு ஊக்கத்தோடு வேண்டுதல் செய்தான். இந்தப் பெரிய அறிஞனும், போதகனும், கற்றறிந்த வேத பாரகனும், ஆசாரியனுமான எஸ்றா தேவனுக்கு முன்பாகத் தன் தலையை நிமிர்த்த துணியவில்லை. ஜெபம்பண்ணச்சென்ற ஆயக்காரன், வானத்திற்கு நேராக தன் கண்களை ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான் (லூக்கா 18:13). அதுபோல் இருந்தது எஸ்றாவின் ஜெபமும். ஜனங்கள் இதைப் பார்த்தபோது ஒரு பாவமும் செய்யாத எஸ்றா செய்த ஜெபம் அவர்களை நெஞ்சம் நெகிழச் செய்தது. அவர்கள் ஒவ்வொருவராக வந்து எஸ்றாவுடன் சேர்ந்துக் கொண்டு, கண்ணீருடன் அழுது ஜெபிக்க முற்பட்டனர்.
வசனம் 10:2-4

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம். ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கும் நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம். நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. எழுந்திரும். இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது. நாங்களும் உம்மோடேகூட இருப்போம். நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

அந்த நிலையில் செக்கனியா என்பவன் எஸ்றாவை நோக்கி எல்லா ஜனங்களுக்காகவும் சில வார்த்தைகள் பேசலானான். அவன், அந்நிய ஸ்திரிகளைச் சேர்த்துக் கொண்டதினால் தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்தோம், என்றான். மேலும் அவன், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு என்று நம்பிப்பேசினான். அதற்கான ஒரேவழி, அம் மாதிரிச் சேர்த்துக் கொண்ட ஸ்திரீகளையும், அவர்களிடத்தில் பிறந்து பிள்ளைகளையும், அகற்றிப் போடுவோம் என்று தேவனோடே உடன்படிக்கை பண்ணக்கடவோம் என்று ஒரு திட்டத்தைக் கூறினான். இது மிகவும் கடுமையான செயல்தான். ஆனால் இதை எஸ்றா கூறவில்லை. எஸ்றா தேவனிடத்தில் அழுது ஜெபித்தான். கர்த்தர் தமது சித்தத்தை அவர்களின் இருதயங்களிலே விளங்கப்பண்ணினார். செய்ய வேண்டியது யாதென அவர்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினார். முதலாவது, தங்கள் குற்றங்களை அவர்கள் அறிக்கையிட்டு ஜெபித்தார்கள். பின்பு மனந்திரும்பினார்கள். பின்பு செய்ய வேண்டியது யாதென தேவனுக்கு முன்பாக உணர்ந்து செயல் படத்துவங்கினார்கள்.
பின்பு செக்கனியா, எழுந்திரும். இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கடுத்தது. நாங்கள் உம்டோடே கூட இருப்போம். நீர் திடன் கொண்டு இதைச் செய்யும் என்று எஸ்றாவிடம் சொன்னான்.
வசனம் 10:5

அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச் சொன்னான். அவர்கள் ஆணையிட்டார்கள்.

எஸ்றா உடனே எழுந்திருந்து செயல்படத் துணிந்தான். முதலில் எஸ்றா ஆசாரியரையும், லேவியரையும், தலைவர்களையும் அழைத்து, இந்த வார்த்தைகளின்படிச் செய்ய அவர்களை ஆணையிடச் சொன்னான். அவர்களும் ஆணையிட்டார்கள். எங்கும் எதிலும், முதலில் தலைவர்கள் முன்மாதிரியாகச் செயல்படவேண்டும். ஆனால் சில சமயங்களில் தலைவர்கள் செயலாக்கத்தின் பயன்கள் மட்டும், தங்கள் பதவிகளினால் அனுபவித்து மகிழ்வார்கள். ஆனால் செயல்படவேண்டிய முயற்சி சற்றுக்கடுமையாய் இருக்கும்போது பொறுப்புக்களைத்தட்டிக்கழித்து நிதானமாகவே முன்னேற்றம் காண்பர். இந்தச் நிலையில்தான் உண்மையான தலைவர்கள் யார் என்பதை நாம் காண இயலும்.
வசனம் 10:6

அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான். அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர்குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

எஸ்றா அதனிலும் ஒரு சிறந்த முறையில், ஒரு நல்ல தலைவனாகப் பணியாற்றினான். அவனுடைய தலைவர்கள், தங்களின் பணிப்பொறுப்புகளைக் குறித்து ஆணையிட்டுக்கொடுத்தவுடன், அதை எஸ்றா பெற்றவுடன் அவனுடைய வேலை முடிந்து விட்டதாக ஒருபோதும் அவன் எண்ணவில்லை. அவன் தானே எந்தத் தவறையும் செய்யவில்லை. மக்களை ஒன்று சேர்த்து, அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் உணரும்படி செய்து விட்டான். தனது பணிகள் யாவும் முடிந்து விட்டதென எண்ணி அவன் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றிருக்கக்கூடும். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. ஒரு தனி வீட்டில் சேர்ந்து உபவாசித்துத் தேவனை நோக்கி ஜெபிக்கிறான். அவர் ஓர் உண்மையான தேவ ஊழியன். ஜனங்களின் பெரிதான பாவங்கள் அனைத்தும் துயரப்படுத்தின. அதற்காக அவன் கர்த்தரிடத்தில் அழுது ஜெபிக்கிறான். ஜனங்களுக்காக அவன் கவலைப்பட்டான். அவனும் அவர்களில் ஒருவன் என நன்கு உணர்ந்திருந்தான். அதுபோல நாமும், செயல்படவேண்டும். நமது பாவங்களுக்காக நாம் உபவாசித்து, அழுது ஜெபித்தது உண்டோ என சிந்திக்கக்கடவோம்.
வசனம் 10:7-8

அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

எஸ்றா மேலும் செயல்பட்டான். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டுமென்று யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணுவித்தான். மூன்று நாட்களுக்குள்ளே அவர்கள் வந்து கூட வேண்டும். அப்படி வரத்தவறினால் அவருடைய பொருள் எல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு வரத்தவறியவர்கள் புறம்பாக்கப்படுவார்கள் என அறிவித்தான்.
வசனம் 10:9

அப்படியே யூதா பென்ஜமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள். அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது. ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஜனங்கள் யாவரும் அந்த உத்தரவிற்குக் கீழ்படிந்து வந்தனர். தேவனுடைய ஆலயத்தில் வீதியிலே அவர்கள் கூடினார்கள். அவர்கள் செய்த பாவத்திற்காகவும் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அமர்ந்திருந்து, எஸ்றா வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்கள்.
வசனம் 10:10

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

எஸ்றா எழுந்திருந்து பேசினான், அவன் அதிகமாகப் பேசவில்லை. குற்றங்களைக் குறித்து சமாதானம் பேசவில்லை. உள்ளதை உள்ளவாறே பேசினான். நீங்கள் இஸ்ரவேலில் மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கபண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணினதினால் பாவம் செய்தீர்கள் என்று எஸ்றா சொன்னான். பாவம் என்பது பாவமே. பாவம் நம்மை தேவனிடத்தினின்று பிரித்துவைக்கும். உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது என்று தேவன் எரேமியாமூலம் உரைக்கிறார் (எரேமி.5:25). அது கூறுகிறது போல் தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களும் நமக்குக் கிடைக்காமல் நமது பாவம் நம்மைப் பிரித்து வைக்கிறது.
வசனம் 10:11-12

இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரயத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான். அப்பொழுது சiபாயர் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம். நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

இந்த நிலையில் அவர்கள் செய்யவேண்டியது யாது? எஸ்றா சாக்குப் போக்காக எதையும் சொல்லவில்லை. கடுமையாக அவன் கூறியது, முதலாவது நீங்கள் உங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்ய வேண்டும் என்றான். அடுத்தது அவர்கள் செய்ய வேண்டியது: அந்தப்புறஜாதி இனத்தாரிடமிருந்தும் அவர்களிடமிருந்தும் அவர்கள் கொண்ட புறஜாதியின் மனைவியிடமிருந்தும் முற்றிலும் பிரிந்து விலகவேண்டும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனே இரக்கம் பெறுவான், என்று வேதம் கூறுகிறது (நீதி.28:31). பாவத்தை அறிக்கைசெய்தால் மட்டும்போதாது. அதை முழுவதும் விட்டுவிடவும் வேண்டும். ஒருவன் மனம் திரும்புவதாகக் கூறிக்கொண்டு அதே தவறைப் பாவத்தைத் திரும்பவும், திரும்பவும் செய்வதால் பயன் என்ன? ஒருவேளை, அந்தப் பாவம் மிகவும் சிறியது. அது யாரையும் பாதிப்பதுமில்லை என்று நாம் கூறலாம். அது சரியில்லை. பாவத்தை முழுவதுமாக விட்டு விட்டால் தேவன் சகல ஆசீர்வாதங்களையும் நமக்கு அருளுவார்.
இங்கே எஸ்றா கட்டளை மிகவும் கடுமையானது தான். அவர்களின் சொந்த மனைவிகள், அவர்கள் இஸ்ரவேலரல்லாதாராயின், புறஜாதி பெண்களாயின், அவர்கள் பிரிந்து ஒதுக்கப்படவேண்டும் ஆனால் அவர்களை முற்றிலும் மணந்து கொண்டது தேவனுக்கு விரோதமாக செய்த பாவச் செயலேயாகும். இத்தகைய பெண் கொள்ளலும், விவாகப்பணிகளும், தேவனுடைய பிள்ளைகளைக் கர்த்தரிடத்திலிருந்து பிரித்துத் தூரப்படுத்திவிடும். அது தொடர்ந்து இஸ்ரவேலர் மத்தியில் நடைபெற்றால் தேவனுடைய மக்கள் என அழைக்கப்பட்ட யூதர் இனமே பூண்டற்றுப்போகும் நிலை ஏற்படும். ஓவ்வொரு கிறிஸ்தவனும் இதை நன்கு உணரவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கை முறையும், தேவ வழிபாட்டு முறையும், பிற உலகமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தேவனுக்கு ஏற்றவையாக இருந்தல் வேண்டும். ஆகையால், எஸ்றா அவர்கள் கட்டாயம், புறஜாதி மனைவியிடமிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கட்டளையிட்டான். ஜனங்களும், ஏன், எப்படி என்று வாதிக்கவில்லை. ஆம் நீர் சொன்ன வார்த்தையின்படியே செய்ய வேண்டியதுதான் என்றார்கள். எஸ்றா சொன்னவுடன் அவர்கள் கீழ்படிந்தார்கள். நாம் எல்லாரும் அவ்வாறே செய்யக்கடமைப்பட்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தைகள், நம் ஒவ்வொருவருரின் வாழ்க்கையிலும் பூரணமாகச் செயல்புரியச் செய்யப்படவேண்டும்.
வசனம் 10:13

ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது. இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல. இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

எஸ்றா, ஜனங்களோடு பேசும்போது மழைபெய்துக் கொண்டேயிருந்தது. மழையில் நனைந்தபடியே அவர்களால் யாதும் செய்யக்கூடவில்லை. அந்தப் பிரித்தெடுக்கும் பணி மிகப் பெரியதாகையால் அதை ஓரிரு நாளில் செய்வதென்பதும் முடியாது. ஆனால் பெரிய பாவம் என்றே அனைவரும் ஒப்புக்கொண்ட அதை விடுத்து, பிரிக்கும் பணியை உடனே துவக்க அவர்கள் முடிவுசெய்தனர்.
வசனம் 10:14

ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும். இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

ஒத்துழைக்க முன்வந்த அவர்கள், தங்கள் பட்டணங்களில் மறு ஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயதிபதிகளோடும் குறித்த காலங்களில் வரக்கடவர்கள் என்று கூறினர். மேலும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி யூதர்களின் குடும்பங்களின் தலைவர்களை நியமித்தார்கள். அவர்கள் சபையெங்கும் தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களைவிட்டு திரும்பும்படி அப்படிச் செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். இங்கே அநேகர் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். கர்த்தருடைய வார்த்தைகள் அவர்களுக்குள் கிரியை செய்தபோது அவர்கள் மனந்திரும்பி அவர்களின் பாவங்களை அறிக்கையிட்டார்கள். ஆனால் அறிக்கையிடுதல் மட்டும் போதாது. பாவத்தை விட்டு விடுதலும் வேண்டும். ஆகையால் அதைச் செய்யத் தான் அவர்கள் உடனே செயல்ப்பட ஆரம்பித்தனர்.
வசனம் 10:15

ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படி வைக்கப்பட்டார்கள். மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

அதில் நான்கு பேர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் விசாரிப்புக்காரராகவும், உதவிக்காரராகவும் வைக்கப்பட்டார்கள்.
வசனம் 10:16

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள். ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதா வம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல்தேதியிலே, தனித்து உட்கார்ந்து,

சிறையிருப்பிலிருந்து வந்த அனைவரும் இத்திட்டங்களைக்கு ஒப்புக்கொண்டார்கள். பாபிலோனிலிருந்து அனைவரும் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள். இது ஒரு விசுவாசத்தின் காரியம். தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பிய அனைவரும் அதைச் செய்தனர். அவர்கள் இருந்த பாவமான நிலையில் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது.
வசனம் 10:17

அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

அந்நிய ஜாதியான ஸ்திரிகளைக் கொண்ட எல்லாருடைய காரியங்களையும் விசாரித்து முடிக்க மூன்றுமாதங்கள் ஆயிற்று. எஸ்றா, இப்படிப்பட்டவர்களின் வரிசைப் பட்டியலைத் தருவதை நாம் வேதத்தில் காண்கிறோம். 2ம் அதிகாரத்தில், பாபிலோனை விட்டு, தேவாலயப்பணிக்காக எருசலேம் புறப்பட்டுச் சென்றவர்களின் பட்டியலை மகிழ்சியோடே வாசிக்கும் நாம், அவர்களில் அநேகர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்துள்ளதை இங்கு வாசிக்கிறோம். பாவம் செய்தவர்களில் முதலாவது வரிசையில் ஆசாரியர்களின் பிள்ளைகளின் பட்டியலைக் காணமுடிகிறது. யாவருக்கும் முன்மாதிரியா இருக்க வேண்டியவர்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எருசலேமுக்குப்போக மனமற்றவர்களாயிருந்தனர். ஆனால் பயணம் தொடங்கியபோது, மொத்தம் சென்றவர்களில் 10 வீதம் பேர் ஆசாரியர் ஆவர். ஆனால் தவறு செய்து அந்நிய ஜாதியான ஸ்திரிகளைக் கொண்டணர்களில் அவர்களின் எண்ணிக்கை 15 வீதம் ஆகும். நாம் நமது சபைத் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது சிறந்த, தேவனுக்கேற்ற பணிகளே.
வசனம் 10:18-19

ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எயியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்து. தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக்கொண்டவர்கள், தங்கள் மனைவிகளை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட சம்மதித்து, உறுதிகூற கையடித்துக் கொடுத்தனர். தாங்கள் செய்தது தவறு, அல்லது பாவம் என்றுணர்ந்த அவர்கள் செய்த குற்ற நிவாரண பலியாக ஓர் ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்த பாவங்களுக்காக பாவ நிவாரணபலியின் இரத்தஞ்சிந்துதல் தேவைப்பட்டபோது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை நமக்காகச் சிந்தினார் (எபி 9:26).
வசனம் 10:20-43

இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும், ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும். பஸ்கூரின் புத்திரரில் எயியோனபய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும், லேவியரில் யொசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும். பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும். மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரேஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும், ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும், சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும், பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும், பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும். பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலேயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும். ஆரீமின் புத்திரரில் எயியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், பென்ஜமீன், மல்லூக், செமரியா என்பவர்களும். ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும். பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவெல், பெனாயா, பெதியா, கெல்லூ, வனியா, மெரெமோத், எலெயாசீப், மத்தனியா, மதனாய், யாசாப், பானி, பின்னூயி, சிமெயி, செலேமியா, நாத்தான், அதாயா, மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, அசரெயேல், செலேமியா, செமரியா, சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும். நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யாதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

இவ்வசனங்களில், அந்நிய ஜாதியான மனைவிகளைக் கொண்டதினால் பாவம் செய்தவர்களின் பட்டியலை நாம் வாசிக்கிறோம்.
வசனம் 10:44

இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள். இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

எஸ்றாவின் புத்தகத்தின் கடைசி வசனமான இதில் விசனமான ஒரு குறிப்பை நாம் காண்கிறோம். இவ்வசனத்திற்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் அனைவரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள். இது துயரமிக்க செய்தி. ஓதுக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களில் சிலர், அந்த மறு ஜாதியான மனைவிகள் மூலம் பிள்ளைகளையும் பெற்றிருந்தனர் என்று இங்கு காண்கிறோம். இந்த மனைவிகளும் எங்கு அனுப்படப்பட்டனர் என்று வேதம் நமக்குக் கூறவில்லை.
ஓருவேளை இந்தப் பிள்ளைகள் தங்களின் தந்தைகளுடன் இருந்தனரோ அல்லது 3 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் அவர்கள் தள்ளப்பட்டுப் போனார்களோ என்பதும் தெரியவில்லை.
இது கடுமையானதும், வருத்தப்படவேண்டியதுமான ஓர் ஒழுங்குமுறைதான். ஆனாலும் அவர்கள் புறஜாதியாரிடமிருந்து முற்றிலும் பிரிந்திருக்க வேண்டியது தேவனுடைய ஆசீர்வாதத்திற்குப்பட்ட அந்த நாளைய கற்பனைகளின் முறைமையாகும். அப்பணியை எஸ்றா செய்து முடித்தான்.
அடுத்து, எஸ்றாவைப்பற்றி வேதத்தில், நெகேமியா 8:1 வரையில் யாதொன்றும் கூறப்படவில்லை. தேவனால் அருளப்பட்ட ஒரு பொறுப்பான வேலையை அவன் செய்து முடித்தான் எனக் காண்கிறோம்.
காரியங்களை வாய்க்கச் செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென் !!!

Comments