சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் ஒரு வாலிபனைப் பார்க்க நேர்ந்தது. மைக்கேல் ஜாக்சனைப் போல முகத்தை மறைக்கும் அளவிற்கு தலைமயிர், மீசை, கிருதா, தாடி என யாவும் லேட்டஸ்ட் சினிமா நடிகர்களுக்கு ஒத்திருந்தது. ஏராளமான பாக்கெட்டுகள் உடைய பேண்ட் அணிந்திருந்தான். மொத்தத்தில் மிக மிக மாடர்னாகத் தோன்ற விரும்பும் நவீன மனிதனாக இருந்தான். உலகப் பிரகாரத் தோற்றத்தை ஒட்டு மொத்தமாக அவனிடம் பார்க்க முடிந்தது.
நான் ஏதோ ஒரு ஜாலியான வாலிபன் என எண்ணினேன். ஆனால், அந்த கூட்டத்தில் அவன் பாடினான், ஜெபித்தான், சிறு வேதவுரை சொன்னான். அவை யாவும் ஆவிக்கேற்றவிதமாக இருந்தது. விசாரித்தபோது அவன் இரட்சிக்கப்பட்டு, ஊழியத்தில் ஈடுபடும் வாலிபன் என்பது தெரிய வந்தது. யாரையும் தோற்றத்தைப் பார்த்து முடிவு செய்யக்கூடாது என்ற என்னுடைய எண்ணத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.
ஆனாலும், அந்த வாலிபனின் இரட்சிக்கப்பட்ட உண்மையை ஒத்துக்கொள்ள அவனுடைய அதிநவீன தோற்றம் ஒரு தடையாக இருந்ததை உணர்ந்தேன். ஒரு உயர் அதிகாரி லுங்கி கட்டிக் கொண்டு அலுவலகம் வந்தால் எப்படியிருக்கும்? ஒரு பேராசிரியர் சினிமா நடிகன் போல மேக்கப் போட்டு வந்தால் எப்படியிருக்கும்? ஒரு போதகர் கிரிக்கெட் விளையாடுகிற ஒருவரைப் போல ஆடை அணிந்தால் எப்படியிருக்கும்?
பல நேரங்களில் நம்முடைய நல்ல அகத்தோற்றங்களின் மகிமை வெளியே தெரியாமல் நவீன புறத்தோற்றங்கள் மறைத்துவிடுகிறது. நவீனங்களை முற்றிலும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அவைகள் நமக்குத் தவறான அடையாளத்தை அது கொடுக்கக் கூடாது.
தேவன் உள்ளத்தைப் பார்க்கின்றார். மனிதனால் வெளிப்புறத்தைத் தான் பார்க்க முடியும். எனவே அங்கே இடறுதல் ஏற்படுத்தாத ஒரு தோற்றம் தேவை. தேவையற்ற சந்தேகங்கள் நம்மேல் பிறருக்கு ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடாது.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.ரோமர் 12:2

Comments