பைபிளில் இருக்கிற பெயர்கள் (names) எல்லாம் நம்மை ரொம்ப குழப்புதுல்ல

பைபிளில் இருக்கிற பெயர்கள் (names) எல்லாம் நம்மை ரொம்ப குழப்புதுல்ல. அப்ப இதைப் படிங்க முதல்ல.
நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு அருளியுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும் மிகவும் விலையேறப் பெற்றது அவர் அருளின வேதமே. அதன் மகத்துவத்திற்கும் ஆழங்களுக்கும் எல்லையேயில்லை. அதன் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வசனமும் ஒரு சத்தியத்தை நமக்கு உணர்த்தும்.
பெரும்பாலும் வேதத்தில் நாமங்களின் (பெயர்கள்) வரிசையை நாம் கவனிக்காமலோ அல்லது வாசிக்காமலோ கூட விட்டு விடுவதுண்டு. அதிலே என்ன விசேசஷம் இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கலாம். ஆனால் அவற்றிலும் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. உதாரணத்திற்கு…
1 நாளாகமம் 1:1-4
(1) ஆதாம், சேத், ஏனோஸ்,
(2) கேனான், மகலாலெயேல், யாரேத்,
(3) ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
(4) நோவா…..
ஆதாம் துவக்கி நோவா வரையிலான முதல் பத்து தலைமுறையை நாம் சற்று கவனிக்கலாம். வேதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் வார்த்தையிலும் வசனத்திலும் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது ? அதைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்..
இந்த பத்து நபர்களின் பெயர்களோடு அதன் அர்த்தங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெயர்கள் - பெயர்களின் அர்த்தங்கள்
1. ஆதாம் மனிதன் (Human)
2. சேத் - பதிலாக (Substitute)
3. ஏனோஸ் - சாகுதல் (சாகிறதற்கெண்று) (Mortal)
4. கேனான் - நியமிக்கப்பட்ட ஒருவன்(ர்) (Appointed One)
5. மலாலெயேல் தேவனுடைய புகழ்ச்சி (Praise of God)
6. யாரேத் - மேலிருந்து கீழிறங்கினவன்(ர்) (Descent One)
7- ஏனோக்கு - அர்ப்பணிக்கப்பட்ட (Dedicated)
8- மெத்தூசலா - அவன்(ர்) மரணம் கொண்டு வரும்
9- லாமேக்கு - வல்லமையான (Powerful)
10- நோவா -இளைப்பாறுதல் (Rest)
இப்பொழுது இந்தப் பெயர்களின் அர்த்தங்களை மேலிருந்து கீழ் நோக்கி வரிசையாக வாசித்துப் பார்க்கலாம்
“ மனிதனுக்குப் – பதிலாக – சாகிறதற்கென்று - நியமிக்கப்பட்ட ஒருவர் - தேவனுடைய புகழ்ச்சியோடு- மேலிருந்து கீழிறங்கினவர் – அர்ப்பணிக்கப்பட்ட அவர் மரணம் கொண்டு வரும் – வல்லமையான – இளைப்பாறுதல் “
முதல் பத்து நபர்களின் பெயர்களில் எவ்வளவு மேன்மையான சுவிசேஷத்தின் ரகசியம் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது!! தேவ குமாரன் மனிதனுக்குப் பதிலாக மரணிக்கும்படிக்கு தேவனுக்குரிய அதே புகழ்ச்சியோடு மேலிருந்து (பரலோகத்திலிருந்து) கீழிறங்கி வரப் போவதையும், அவருடைய மரணத்தினாலேயே ஒருக்காலும் நாம் இழந்து போக கூடாத வல்லமையான இளைப்பாறுதல் கிடைக்கப் போவதையும் தேவன் எவ்வளவாய் முன்னறிவித்திருக்கிறார். .
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அத்தனை பெயர்கள் வம்ச வரலாறுகள் அனைத்துக்குள்ளும் இதைப் போன்ற இரகசியங்கள் உள்ளன. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையில் ஒன்றைக் கூட நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. ஆம் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அதிலே ஜீவன் உண்டு.

Comments